திருப்பள்ளியெழுச்சி – நங்கநல்லூர் J K SIVAN –
மணி வாசகர்
மார்கழி 21ம் நாள்
திருப்பெருந்துறை எனும் க்ஷேத்ரத்தை நினைத்தாலே மணிவாசகர் கண் முன் தோன்றுவார். பாண்டியன் ”நீங்கள் போய் நல்ல குதிரைகள் வாங்கி வாருங்கள்” என்று கொடுத்த பொற் காசுகளை பைபையாக கொட்டி பெருந்துறையில் சிவாலயத்தை புதுப்பித்துவிட்டார் மணிவாசகர். குதிரை மறந்து போய்விட்டது. சிறைப்பட்டார். நிகழ்த்தியா சொக்கேசன் அவரைத் திருப்பெருந்துறையில் தனது மீதி வாழ்நாளை கழிக்கும்படி வைத்தான். இறைவனை துயிலெழுப்ப அவர் பாடியது இந்த திருப்பள்ளி எழுச்சி, ஆழ்வாரும் இப்படி பாடியிருக்கிறார். சுப்ரபாதம் என்று சமஸ்க்ரிதத்தில் ஸ்லோகங்கள் உண்டு.
உண்மையில் நமது மனதில் மறைந்து நிற்கும் மகேஸ்வரனை தோன்றும்படி வேண்டுவது தான் திருப்பள்ளி எழுச்சி.
முதல் பாடல்:
போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் றிருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
”பகவானே, பரமேஸ்வரா, நீ தான் என் வாழ்வின் காரணம் ,ஆதாரம். உன்னைப் போற்றுகிறேன். திருப்பெருந்துறையுறை சிவபெருமானே – சேற்றில் மலரும் செந்தாமரை இதழ்களின் குளிர்ச்சி எங்கும் வியாபிக்கும் பசுமையான வயல்கள் நிறைந்து செழிப்பாக காணப்படும் திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே! உனைப் போற்றுகிறேன். உயர்ந்து பறக்கும் ரிஷபக் கொடியுடைய ரிஷபவாகனா, பரமேஸ்வரா, என்னை அடிமையாக்கி ஆட்கொண்டவனே. எம்பெருமானே, என் தலைவா. சிவா, விழித்துப் பார், பொழுது புலர்ந்து விட்டது. அழகிய உன் தாமரைத் திருவடிகளில் அதற்கிணையான அழகு மலர்களை சூட்டி வணங்குகிறேன்.உன் திருமுகமே ஒரு ஒளி பொருந்திய மலராயிற்றே மஹேஸ்வரா. அதில் தோன்றும் குமிழ் சிரிப்பு பக்தர்கள் மனத்தை கொள்ளை கொள்வதாயிற்றே.
”பள்ளி எழுந்தருளாயே பரமேஸ்வரா,” பார் எல்லாம் உனக்காக காத்திருக்கிறது. உனது அருள் பார்வைக்கு ஏங்குகிறது கண் திறவாய் கபாலீஸ்வரா” என்று துயிலெழுப்புகிறார் மணிவாசகர்.
மார்கழியில் சிவாலயங்களில் மணிவாசகரின் திருப்பள்ளி யெழுச்சி பாடல்கள் அதிகாலையில் ஒலிக்கிறது. ஒரு நாள் விடியும்போது, நாளின் தொடக்கத் திலேயே பெருமானைப்பற்றி எண்ணுவதால் மனம் நல்வழியை அறிந்து செல்லும் அல்லவா?