THE TWO MAJOR RAMAYANA SLOKAS J K SIVAN

ரெண்டு ராமாயணங்கள் – #நங்கநல்லூர்_j_k_SIVAN
ராமன்,  கிருஷ்ணன் என்கிற பெயர்கள்  காலத்தால் அழியாதவை. எத்தனையோ  ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த  அரசர்கள் என்றாலும் தெய்வமாக பல  தலைமுறை தலைமுறையாக  இன்றும்  வணங்கப்படுபவர்கள்.  எண்ணற்ற கோவில்கள்  ஹிந்துக்கள்  உள்ள இடமெல்லாம்   கொண்டவர்கள்.  பாரதம்  ராமாயணம்  இரண்டுமே  பல விதமாக  சித்தரிக்கப்பட்டு, பல மொழிகளில்  உருவெடுத்து,  ரசிக்கப்படுபவை. போற்றப்படுபவை.
நேற்று என்ன சாப்பிட்டோம், என்ன செய்தோம் என்பதே   நமக்கெல்லாம் மறந்து போய்விடுகிறது. ஒரு சம்பவத்தை ரெண்டு நிருபர்கள் பார்த்து எழுதும்போது எவ்வளவு வித்யாசங்களோடு ரிப்போர்ட் செயகிறார்கள். பத்திரிகை டிவி யூட்யூப்  சானல்கள் ஒவ்வொரு விதமாக  அதை சொல்கிறதே. எது நிஜம்?
அப்படி இருக்க தொழில் நுட்பம்  ஒன்றுமே  இல்லாத,விஞ்ஞானம்  வளராத ஒரு யுகத்தில் 7000 வருஷம்  முன்பு நடந்ததை ரெண்டு கவிஞர்கள் வெவ்வேறு கால இடைவெளிகளில்  வெவ்வேறு  மொழி பேசும்  இடத்தில்  பிறந்து எழுதும்போது கொஞ்சமாவது வித்யாசம் இருக்காதா?  அப்படி தான் இதைப்    பார்க்கவேண்டும். மொத்தத்தில் கதை ஒன்று தான். அதில் மாறுதல் இல்லை. ருசி அற்புதமாக மாறுகிறது. ரெண்டு பேருக்கும் தேங்க்ஸ்.  தோசை எல்லார் வீட்டிலும்   ஒரே ருசியாகவா இருக்கிறது?
ஏதாவது ஒன்றை எழுதும்போது பாதி கற்பனை பாதி எங்கோ எப்போதோ யாருக்கோ, நமக்கோ நடந்த சம்பவத்தின் பிரதிபலிப்பு.  ராமாயணத்தை வால்மீகி  ரிஷி  ஒரிஜினலாக  ராமாயணம் எழுதியவர்   ராமருடன் த்ரேதா யுகத்தில் வாழ்ந்தவர். நேராக பார்த்த அப்பட்டமான உண்மை விஷயத்தை  பல்லலாயிரம் ஸ்லோகங்களாக   சமஸ்க்ரிதத்தில் எழுதியவர்.
”ராம அயணம்” என்றால் ”ராமன் வாழ்க்கை கதை, சரித்திரம்” . அதற்கு எத்தனையோ சான்றுகள் உண்டு. துளசிதாசர் கலியுகத்தில் வாழ்ந்தவர். துளசி தாசர் எழுதிய ”ராம் சரித மானஸ் ‘என்பதில் 3 வார்த்தை.   ”ராம சரித்திரம் என்கிற  அகண்ட ஏரி” போன்ற விஷயம்  என்று அவர் கொடுத்த  பெயர்  பாராட்டத்தக்கது.
வால்மீகி ஹனுமனை ”வன் நரன்” அதாவது  ”வனத்தில் வாழ்ந்த நர” குலத்தவன் என்கிறார். துளசிதாஸ் அவனை நாம் அறிந்த குரங்கினமாக காட்டுகிறார்.
வால்மீகி மிதிலை ராஜா ஜனகன் தனது பெண் சீதையின் கல்யாணத்துக்கு ஸ்வயம்வரம் எதுவும் நடத்தவில்லை. அவரிடமிருந்த கனமான பெரிய சிவ தனுசுவை எந்த மஹா வீரன் பலசாலி தூக்கி நாண் ஏற்றுகிறானோ அவனுக்கு சீதை பரிசு என்று தான் அறிவித்தார். விஸ்வாமித்ரர் இதை கேள்விப்பட்டு ராமனை மிதிலைக்கு அழைத்துச் சென்று ” நீ அந்த வில்லைத் தூக்கி நாண் ஏற்றடா ராமா” என்கிறார்.  ஜனகர்  56 தேச ராஜாக்களை எல்லாம் அழைத்து ஸ்வயம்வரத்துக்கு வாருங்கள் என்றேல்லாம்   கூட்டம்  கூட்டவில்லை என்கிறார்.
துளசி தாசர் தனது ராமாயணத்தில் ஜனகன் ஸ்வயம்வர விழா நடத்தி அநேக ராஜாக்கள் வந்திருந்தார்கள் என்கிறார்.

வாலமீகி சீதையை ராவணன் பலவந்தமாக இழுத்துக் கொண்டு தேரில் தூக்கிச் சென்றதும் அவள் அசோகவனத்தில் பட்ட கஷ்டங்களை விவரிக்கிறார். ராமன் ராவணனைக் கொன்று அக்னி பரிக்ஷை செய்தபின் சீதை ராமனை அடைந்தாள் என்று கதை செல்கிறது.
துளசி தாசரின்  கற்பனை வேறுவிதமாக  இருக்கிறது.  ராவணன் நிஜமான சீதையை கடத்திச் செல்லவில்லை. ராமனுக்கு ராவணன் வரப்போவது தெரிந்து அவளை அக்னி தேவனிடம் ஒப்படைத்துவிட்டு போலி சீதை தான்  பர்ணசாலையில் இருந்தாள் . அவளைத் தான் ராவணன் கடத்தினான். அதனால் தான் ராவண வதம் முடிந்து ராமர் அக்னி தேவனிடமிருந்து ஒரிஜினல் சீதையை மீண்டும் பெற்றான் என்கிறார்.
ராம ராவண யுத்தத்தில், வாலமீகி சொல்வதைப் பார்த்தால் ராவணன் ரெண்டு இன்னிங்ஸிலும்  வருகிறான். ஆரம்பத்தில் வந்து தோல்வியுற்று உயிரோடு திரும்பி கடைசியில் யுத்தம் முடியும் சமயம் மீண்டும் வந்து உயிர் விடுகிறான்.
துளசி தாசர் ராவணன் ஒரே ஒரு முறை கடைசியில் யுத்தத்துக்கு வந்து கொல்லப்பட்டான் என்கிறார்.
வாலமீகி ராமன் புருஷோத்தமன், மரியாதா புருஷோத்தமன், அருமையான குணாதிசயங்கள் கொண்டவன், உயர் ரக மனிதன் என்கிறார்.
துளசி தாசரைப் பொறுத்தவரை  ராமன் மனிதனில்லை கடவுள் அம்சம், அவதாரம், அவன் செய்யும் காரியங்களில் தெய்வீகம் இருக்கிறது என்கிறார். துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்து தர்மம் காக்க வந்த தெய்வம் என்கிறார்.

வால்மீகி ராமாயணத்தை ராமன் சீதையின் மறைவுக்குப்  பிறகு, லக்ஷ்மணன் சரயு நதியில் மூழ்கியபின் வருத்தத்தோடு இனி தனக்கு வேறு ஜோலி எதுவும் இல்லை, என்று தானும் சரயுவில் மூழ்கி மறைந்ததோடு முடிக்கிறார்.
துளசிதாசர் கொஞ்சம் கடுகு தாளித்துக் கொட்டி கமகம  ஆக்குகிறார். லவ குசர்கள் ரெட்டைப் பிள்ளைகளாக வால்மீகி ஆஸ்ரமத்தில் பிறந்து வளர்ந்து ராமனை சந்திக்கிறவரை   கதை ஹனுமார் வால்  போல்  நீள்கிறது.  லக்ஷ்மணன் சீதா ஆகியோர் எப்படி மறைந்தார்கள் என்று சொல்லவில்லையே, ஏன்? எப்படி  துளசிதாசரை விளக்கம் கேட்கமுடியும். எங்கோ இன்னொரு பாகம்  எழுதிக் கொண்டிருக்கிறாரோ  என்னவோ?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *