பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
”அம்பாள் இருக்காள். பாத்துப்பாள்”
தை வெள்ளி ஆடி வெள்ளி கிழமைகள் அம்பாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அம்மும். நாம் மைலாப்பூரில் இருந்தபோது, கற்பகாம்பாள் சந்நிதி, நாட்டு சுப்பராயன் தெரு வழியாக வந்தால், முண்டக கண்ணி அம்மன் சந்நிதி அற்புதமாக தரிசனம் பெறுவேன். நங்கநல்லூரில் அஷ்ட புஜ துர்க்கை,தரிசனம் விசேஷம்.
ரா. கணபதி மஹாபெரியவா அருள் நிறைய பெற்றவர். மஹா பெரியவாள் அம்பாளை பற்றி சொன்னதை இன்று தை வெள்ளிக்கிழமை நாம் அறிந்து ஆனந்தமடைந்து அம்பாள் ஆசி, காமாக்ஷி ஸ்வரூப பெரியவா அனுக்ரஹம் கிட்டட்டும்.
”ஏண்டா, அம்பாள், ‘படி’அளக்கிறவள். படி அளப்பாள்’னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே ‘படியாலே’ அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?” என்கிறார் பெரியவா.இந்த சம்பவம் நிகழ்ந்த சமயம் 1933ல் மஹா பெரியவா காசி யாத்திரை போகும்போது ஆந்திராவில் ஒரு குக்கிராமம் ஒன்றில் தங்க முடிவெடுத்து முகாமிட்டபோது.
இந்த குட்டி கிராமத்தில் எந்த வசதியும் கிடையாதே, எப்படி மஹா பெரியவா பரிவாரத்தில் கூடவே வரும் இத்தனை யானையையும்,ஒட்டையையும், ஜனங்களையும் கட்டித் தீனி போடுவது? சாத்தியமா? மடத்தில் அத்தனை செலவுக்கும் போதுமான நிதி வசதியே இல்லையே” என்ற கவலை மேனேஜருக்கு நடுக்கத்தைத் தந்தது. ஒருநாள் என்றால் கூட எப்படியோ சமாளிக்கலாம்.மஹா பெரியவா எத்தனை நாள் இங்கே முகாம் இடவேண்டும் நினைக்கிறாரோ?
சர்வமும் திரிகாலமும் நடக்கும் எல்லாமே தெரிந்த மஹாபெரியவா மானேஜரை கூப்பிட்டார்.
” நீ ஏன்பதட்டப்படறே? நாம நல்ல காரியத்தை உத்தேசிச்சுப் பொறப்பட்டிருக்கோம்.நம்ப லக்ஷ்யம் நன்னாயிருந்தா அம்பாள் கை கொடுக்காமப் போவாளா? அவதானே எல்லாருக்கும் படியளக்கிறா? நமக்கும் நிறைய படி அளப்பா.
மறுநாள் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அந்த ஆளில்லா, நிர்மாநுஷ்யக் குக்கிராமத்துக்கு எங்கிருந்தெல்லாமோ பகதர்கள் புற்றீசலாக வரத் தொடங்கிவிட்டார்கள். பெரியவா அந்த குக்கிராமத்தில் தரிசனம் தருகிறார் என்ற சேதி எப்படியோ காட்டுத்தீயாக எங்கும் பரவி விட்டது. வந்த பக்தர்கள் அத்தனைபேரும் வெள்ளி நாணயங்களை கொண்டு வந்து கொட்டினார்கள். மேனேஜருக்கு கண்களை நம்ப முடியவில்லை.
“நான் பெரியவாளோட இந்த மடத்திலே நாற்பது வருஷத்துக்கு இருக்கேன். இந்த மாதிரி ஒத்தை ஒத்தை ரூபாயா வந்து வெள்ளி மலை மாதிரி வந்து குவிஞ்சதேயில்லை!. மடத்து ஜாகையிலே எல்லாத்தையும்சே த்துக் குவிச்சு எண்ணிட்டுப் படியாலே எடுத்து எடுத்துச் சாக்கிலே போட்டுக் கட்டினோம்.
மேலே சொன்னதை திரும்ப படியுங்கள். ”மஹா பெரியவா “அம்பாள்,’படி’ அளப்பாள்’னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே ‘படியாலே’ அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?”-னு அதுக்கு தான் சொன்னார்.
அம்பாளுக்கு உகந்த தை மாத வெள்ளிக்கிழமையில், அம்மன் கோயிலுக்குச் சென்று அவளை வணங்கினால், நம்மையும் நம் குடும்பத்தையும் தழைக்கச் செய்வாள் அம்பிகை! ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். அது மாதிரி தான் தை மாதம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பிகைக்கு உகந்த நாட்கள். அதனால்தான், செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில், மகாசக்தி குடிகொண்டிருக்கும் ஸ்தலங்களில் பக்தர்கள், அதுவும் ஸ்த்ரீகள். பலரும் வணங்கி வழிபடுகிறார்கள். துர்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களையும் கண் திருஷ்டி முதலானவற் றையும் நீக்கியருளும் என்பார்கள். அம்பாளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொள்வார்கள். துர்கை சந்நிதியில் நெய் தீபம் அல்லது எள் தீபமேற்றி வழிபடுவது வழக்கம். மங்கல காரியங்களை விரைவில் நடத்தித் தருவாள் அன்னை பராசக்தி!
மஹா பெரியவா காமாக்ஷி ஸ்வரூபம். மஹா பெரியவாளை இன்று தை வெள்ளியில் நினைத்தாலே அம்பாள் சந்நிதியில் அவளை கைகூப்பி வணங்குவதற்கு சமம் இல்லையா?