ஒரு அற்புத ஞானி – நங்கநல்லூர் J.K. SIVAN
சேஷாத்ரி ஸ்வாமிகள்
‘அதோ பார் தேவலோகம்’
மஹா பெரியவா, ரமண மஹரிஷி, சேஷாத்ரி ஸ்வாமிகள் போன்ற எண்ணற்ற மஹான்கள் ப்ரம்ம ஞானிகள் தோன்றி உலவி, நடந்த மண்ணில் நானும் நடக்கிறேன். நீங்களும் நடக்கிறீர்கள், நாம் அவர்கள் சுவாசித்த பிராணவாயுவை ஸ்வாசிக்கிரோபம், காற்றோடு கலந்து நம்மை ரக்ஷிக்கும் அவர்கள் ஆசியைப் பெறுபவர்கள் என்ற வேறெந்த தேசத்திலும் எவருக்கும் கிடைக்காது. நாம் பாக்கியசாலிகள், புண்யம் பண்ணவர்கள். அவ்வளவு தான் சொல்ல முடிகிறது.
சேஷாத்ரி ஒரு எம பட்டணம் பார் என்று ஒரு பக்தைக்கு காட்டின சம்பவம் முன்பே எழுதி இருக்கிறேன். படித்து மறந்தும் போய் இருப்பீர்கள். அதே போல இன்னொரு அதிசய சம்பவம் இப்போது சொல்கிறேன். இது ஒரு பக்தைக்கு ஸ்வாமிகள் தேவலோகத்தைப் பாரு என்று காட்டிய சம்பவம்.
நல்ல விஷயங்கள் அநேக காலம் மனதில் தங்குவதில்லை. யாராவது கெடுதல் செய்தாலோ, செய்ததாக நாம் நினைத் தாலோ அது மட்டும் வெகுகாலம் நெஞ்சிலே இருக்கும். வார்த்தைக்கு வார்த்தை வெளியே வரும். எவரிடம் பார்த்தாலும் அதைத்தான் முதலில் சொல்வோம்.
வெங்கடாசல முதலியார் அவர் மனைவி சுப்புலக்ஷ்மி இருவருமே சேஷாத்திரி ஸ்வாமிகளின் அதி தீவிர பக்தர்கள். அதிலும் சுப்புலக்ஷ்மி வெகு தீவிர பக்தை. ஸ்வாமிகள் எப்போது வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் வந்து கதவைத் தட்டுவார் அல்லது கதவு திறந்திருந்தால் கிடுகிடுவென்று உள்ளே வந்து உட்கார்ந்து கொள்வார்.
”சுவாமி, நான் கொஞ்சம் அவசர வேலையாக மெட்ராஸ் பட்டினம் போக வேண்டி இருக்கிறது. திரும்பி வர எப்படியும் ஆறு ஏழு நாள் ஆகலாம். நீங்க தான் எங்களுக்கு பெரிய துணை. வீட்டில் சுப்புலக்ஷ்மி தனியா இருக்கா. நீங்க தான் அவளை கொஞ்சம் பார்த்துக்கணும்.” என்கிறார் முதலியார்.
முதலியார் மெட்ராஸ் சென்று ஒரு இரு தினங்கள். ஒரு நாள் இரவில் ஸ்வாமிகள் முதலியார் வீட்டுக்கு வந்து சுப்புலக்ஷ்மியை எழுப்பினார்.
”சுப்புலக்ஷ்மி நாளைக்கு ராத்திரி பக்கத்து வீட்டில் திருடன் வருவான். கூச்சலாக இருக்கும் நீ பயப்படாதே. உனக்கு நான் துணை இருக்கேன்” என்கிறார்.
அதே போல் அடுத்த நாள் இரவு பக்கத்து வீட்டில் வசித்த பொன் வேலை செய்யும் தட்டான் ரங்கநாத ஆச்சாரி மனைவி கூச்சல் போட்டாள் . இருபது சவரன் உருக்கி தங்கக் கட்டியாக்கி அதை தலையணைக்குள் மூடி மறைத்து வெகு நாளாக வைத்துக் கொண்டு இருந்ததை யாரோ தெரிந்து கொண்டு அறிந்து அன்றிரவு அந்த தலையணையை கொண்டு போய் விட்டான். ஆசாரியின் மனைவி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு லபோ திபோ என்று கத்தினாள். அண்டை அசல் எல்லாம் கூடி விட்டது. சேஷாத்ரி ஸ்வாமிகள் முதலியார் மனைவியை பார்த்து ”நான் சொன்னேன் இல்லியா உனக்கு. நீ எதற்கும் பயப்படாதே. நான் தான் உனக்கு துணை ”
அதற்கு அடுத்து ரெண்டு நாள் கழித்து ஒரு நாள் இரவு ராத்திரி 11க்கு மேலே திடீரென்று ஸ்வாமிகள் வந்து சுபபலக்ஷ்மி வீட்டு கதவைத் தட்டினார். அந்த வீட்டின் குல தெய்வம் ஸ்வாமிகள். எனவே அவர் எப்போது வந்தாலும் மரியாதையோடு வரவேற்பார்கள். முதலியார் அம்மா கதவை திறந்து வரவேற்று கைகட்டி நின்றாள்.
”சுப்புலக்ஷ்மி, உனக்கு நாராயணனையும் பார்வதி பரமேஸ்வரர்களையும் காட்றேன் பார்க்கிறியா” என்று அவளை படுக்கையில் படுக்க வைத்தார். அவள் நெஞ்சில் தனது வலது கையை ஊன்றி ”மேலே நிமிர்ந்து பார்” என்கிறார்.
பார்த்தாள் . கண கண வென்று வெண்கல மணிகளின் நாதம், நிறைய சோப் குமிழிகள் போல் கலர் கலராய் பெரிய சிறிய உருண்டைகள் எங்கும் வியாபித்து சுற்றின. பளபளக்கும் தங்கப் பந்துகள் போல் பெரிதும் சிறிதும் எங்கும் அசைந்து ஆடி ஓடி வண்ணங்களை வீசிக்கொண்டு அலைந்து கொண்டிருந்தன. பட்டை பட்டையாக வண்ணக் களஞ்சியமாக மேலிருந்து கீழே நோக்கி நிறைய ஒளிக்கதிர்கள் வீசின, முதலியாரம்மாவுக்குக் கண் கூசியது. பெரிய வெள்ளை யானை ஒன்று எதிரே வந்து நின்றது. அதன் மேல் ஒரு சுந்தரன் . அந்த சப்தங்கள், வண்ணங்களின் ஒளிக்கற்றை , யானை, அதன் மேல் ஒரு வீர புருஷன் எல்லாம் பார்த்து சுப்புலக்ஷ்மி ”ஆ” வென்று கத்தினாள்.
”அதோ பார். யானைமேல் இருப்பவன் தான் இந்திரன். அவன் யானைக்கு பேர் ஐராவதம். தேவலோகம் எப்படி இருக்கு? அங்கே பார் திரிசூலத்தோடு ருத்ரன் இருக்கிறார். அவர் அருகிலே பார்த்தாயா? பச்சைப் பெண் தெரியறாள் இல்லியா, அவள் தான் பர்வதராஜ குமாரி பார்வதி. அவள் எதிரே பார் புஸ் புஸ என்று மூச்சு சப்தம் கேட்க நிற்கிறதே அந்த பெரிய ரிஷபம் தான் நந்திகேஸ்வரன். அவன் உன்னைப் பார்க்கிறான் பார். இந்த பக்கம் திரும்பிப் பார். விஷ்ணு கையில் பார்த்தாயா சுதர்சன சக்ரத்தை. எப்படி தகதக வென்று மின்னுகிறது பார்.’
”இது யார் தெரியுமா? இவரைப் பார்த்திருக்கியா?” என்று எல்லா தேவர்கள் பெயரையும் சொல்லி அறிமுகப்படுத்தினார். சுப்புலக்ஷ்மி மூர்ச்சை போட்டு விழுந்தாள். அவள் நெஞ்சிலிருந்து ஸ்வாமிகள் கையை எடுத்தவுடன் அவள் பார்வை இழந்தாள் . அவளை முதுகில் பட் என்று அடித்தார்.
”எழுந்திரு” உனக்கு பாக்யமில்லை. நான் என்ன செய்யமுடியும்? . உன் ஊழ்வினை நிறைய பாக்கி இருக்கே. சரி சரி நன்றாக குறட்டை விட்டு தூங்கு, போ”
ஸ்வாமிகள் சொல்லிவிட்டு போய்விட்டார். அன்று இரவு கழிந்தது. மறுநாள் காலை எழுந்தவளுக்கு இரு கண்களும் தெரிய வில்லை. தட்டுத் தடுமாறி சுவற்றைப் பிடித்துக் கொண்டு நடந்தாள் .
காலை 11 மணிக்கு சுவாமி மீண்டும் வந்த போது அழுதாள்.
”ஏன் அழறே?”
”என்னை குருடாக்கி விட்டீர்களே. இது அடுக்குமா””
சுவாமி தனது மேல் வேஷ்டி நுனியால் அவள் கண்களை துடைத்தார். முன் போல் பார்வை நன்றாக ஆகி விட்டது.
ஏன் ஸ்வாமிகள் அவளுக்கு தேவலோக தரிசனம் காட்ட விழைந்தார்.? அவள் பார்த்தும் ஏன் விருப்பமின்றி பயந்தாள்?, ஏன் குருடானாள்? , எப்படி ?…… இதெல்லாம் விடை யில்லா வினாக்கள்.
சித்தர்கள் மஹா புருஷர்கள் செயலுக்கு நாம் யார் காரணம் கற்பிக்க?. என்னென்னவோ அற்புத சக்திகள் தொடர்ந்து நடக்கின்றன. சிலது கூட நமக்கு இன்னும் புரியவில்லை என்பதை விட புரிந்துகொள்ளும் சக்தியை நாம் வளர்த்துக் கொள்ள வில்லை. இன்னும் எத்தனை ஜென்மம் எடுக்கவேண்டுமோ? எவ்வளவு பாக்கி இருக்கிறதோ ?