JAYADEVA’S RADHAKRISHNA J K SIVAN

ஜெயதேவரின் ராதா கிருஷ்ணன் – நங்கநல்லூர் J K SIVAN

ராதா துறு துறு வென்று எப்போதும் வண்டு மாதிரி சுறுசுறுப்பானவள். வாயாடி என்றால் அடேயப்பா, அவளை போல் பிருந்தாவனத்தில் பட் பட் என்று பேசக்கூடிய, பதில் சொல்லக்கூடிய அழகிய துடுக்குப் பெண் வேறு யாரு மில்லை. . குரல் குயிலை மிஞ்சும். நன்றாக பாடுவாள், ஆடுவாள். வேறென்ன வேண்டும். கிருஷ்ணன் மேல் அலாதி பிரியம் அவளுக்கு. வேறென்ன காரணம் வேண்டும் கிருஷ்ணனுக்கு ஏன் ராதாவை ரொம்ப பிடித்தது என்று சொல்வதற்கு?
உண்மையில் ஞானிகள், அறிஞர்கள், ராதா கிருஷ்ண உறவு ஜீவாத்மா பரமாத்மா தத்வம் என்று புரியும்.
” ராதா” வலம் இடமாக படித்தால் ‘தாரா ‘. இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்? ”ராதா” ஆதாரத்தை நோக்கி செல்வது. ”தாரா” ஆதாரத்திலிருந்து வெளி வருவது .
கொஞ்சம் யோசிப்போம். எல்லையில்லாத பெருங்கடல். அது ஆவியாகி, மேகமாகி, மழையாகி, மேலிருந்து கீழே தாரையாக பெய்கிறது.– மழை தாரை தாரையாக பெய்தது என்று சொல்லும்போதே ”தாரா” புரிகிறது. உற்பத்தி ஸ்தானத்திலிருந்து வெளிவருவது.
மழை ஜோ வென்று பெய்து மலை மீதிலிருந்து பிரவாகமாக கீழே பாய்ந்து சிறு நதி, பெரு நதியாகி வேகமாக ஓடி கடலையே அடைகிறது. கங்கை கடலில் ஐக்கியமாகிறாள். தெரிந்த விஷயம் தானே இது. இது ”ராதா ‘ . நாம் எல்லோரும் பிறவிப் பெருங் கடலிலிருந்து ஜனித்து (கிருஷ்ணலிருந்து, அவன் தானே சர்வ காரணன்), அவனையே நினைந்து, பாடி, ஓடி, அவனிலே சங்கமமாகிற (கிருஷ்ண சாகரம்) தத்வம் தான் கிருஷ்ண ப்ரேமி ராதை. பிறவி எடுத்த பயனைக் காட்டுபவள்.
கிருஷ்ணன் அருள் வேண்டுமானால் ராதாவின் கால்களை முதலில் பிடிக்கவேண்டும். RADHA இதை திருப்பி படித்தால் AADHAR ஆம் கிருஷ்ணனைப் பிடிக்க ஆதாரமாக இருப்பவள் ராதா. பிருந்தாவனத்தில் கிருஷ்ணனை தரிசிக்க போவோர்கள் ராதா கோவிந்தா என்று ஸ்மரித்துக்கொண்டே தான் செல்வார்கள். பிருந்தாவனம் மதுரா எந்த பக்கம் திரும்பினாலும் வண்டி ஓட்டிகள் முதல் பாதசாரிகள் நண்பர்கள் கடைக்காரர்கள் எல்லோருமே ”ராதே ராதே” ஸ்மாரணையாகவே இருப்பதை கண்ணால் பார்த்தேன், காதால் கேட்டேன். வியந்தேன்.
இரவில் வெள்ளி நிலவாக ஜ்வலிக்கும் சந்திரன் பகலில் இல்லை. பகலில் விகசிக்கும் தாமரை இரவில் சூம்பி விடுகிறது. ”என் பிரிய சகி ராதா, நீ இரவிலும் பகலிலுமே அழகு அறிவு இரண்டும் கலந்த உன் காந்த சக்தியை என் மீது அள்ளி வீசுகிறாய் ” என்று கிருஷ்ணனே வர்ணிப்பதாக ஒரு பாடல் ‘விதக்த மாதவா’ என்ற கோர்வையில் வருகிறது.
”நீ சிரித்தால், மகிழ்ச்சி அலைகள் ஒன்றின் மேல் ஒன்றாய் பொங்கி எழுந்து கன்னத்திலிருந்து பீறி வெளிக் கிளம்பி என்னைத் தாக்குகிறது. ராதையின் அழகிய வளைந்த புருவங்கள் மன்மதன் வில். அவள் கடை விழிப்பார்வையின் வீச்சு தேன் வண்டுகளின் ரீங்காரத்வனியை வாரி வீசும். அந்த தேன் வண்டு ”அடடா என் இதயத்தை துளைத்துவிட்டதே!” இது ஒரு சிறு சாம்பிள் வர்ணனை.
நிறைய வேண்டுமானால், முழுதும் ரசிக்க ”விதக்த மாதவா” வை கண்டிப்பாக படிக்கவேண்டும்.
அன்று வைகாசி விசாக பௌர்ணமி நாள். இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தான் பூர்ண சந்திரன். அவனது குளிர்ந்த வெள்ளி அலைகள் நிசப்தமான பிருந்தாவனத்தை குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. மெல்லிய தென்றல் வீசி எங்கிருந்தெல்லாமோ இனிய நறுமண மலர்களின் சுகந்தத்தை தன்னோடு சேர்த்து பரிமாறிக் கொண்டு இருந்தது மட்டுமல்லாமல் யமுனையின் மேல் பரப்பில் அணைத்து அத்தனை குளுமையையும் காற்றில் கலந்து இலவச AC ஸர்விஸ் செய்தது..
பிருந்தாவனத்தில் அழகிய மரங்கள் அடர்ந்த ஒரு இடத்திற்கு பாண்டீர வனம் என்று பெயர். அதில் யாரேனும் உலவினால் எளிதில் மற்றவர்கள் கண்களில் படமுடியாது. அங்கு தான் கிருஷ்ணன் ராதையுடன் உலாவுவான் என்று சொல்லவும் வேண்டுமா? இதோ அவர்கள் பேசுவது காதில் கேட்கிறதா?
”கிருஷ்ணா, இன்று என்ன விசேஷம். ஏன் என்னை இங்கு வரச்சொன்னாய்?
”உனக்கே தெரியுமே நான் சொல்ல வேண்டுமா?
”என்ன பெரிய ரகசியம்? நீயே சொல்லேன். ஏதோ உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகப்போகிறதா என்ன?”
”எப்படி சரியாகவே சொல்லிவிட்டாய் ராதா? நீ ரொம்ப கெட்டிக்காரி, புத்திசாலி என்பதால் தான் உன்னை எனக்கு பிடிக்கிறது. ”
”என்ன சொல்கிறாய் கிருஷ்ணா, விளையாடுகிறாயா? தீராத விளையாட்டுப்பிள்ளை என்று நிரூபிக்கிறாயே?”
” ஆமாம், ஆமாம் இன்று இங்கே இப்போதே உனக்கும் எனக்கும் கல்யாணம். நடத்தி வைப்பவர் ஜெயதேவர் போதுமா?”
ஒரு இடத்தில் படித்தேன் ரசித்தேன் அது இது:
”அந்த பாண்டிர வனத்தின் ஆல மரத்தின் கீழ் ராதா கிருஷ்ண திருமணம் நடந்ததாம். ஸ்ரீ மத் பாகவதம் கூறாத ராதையை- ராதா- கிருஷ்ண திருமணத்தை கீத கோவிந்தம் என்னும் சிருங்கார ரச காவியம் கூறுகிறது. இதனை இயற்றியவர் ஜெயதேவர். அதனை மிகவும் ரசிப்பார் காஞ்சிப் பெரியவர். ஒரு சந்நியாசி சிருங்கார ரசம் கலந்த கீத கோவிந்தத்தை ரசிக்கிறாரென்றால் அது சாதாரண சிருங்கார ரசமா? இல்லவே இல்லை, தெய்வீக பிரேமை. அந்த ஜெகந்நாதரே ரசித்த கீதமல்லவா!
விசாக-அனுஷ நட்சத்திரங்களுக்கு வேதத்தில் “ராதா’ என்று பெயராம். வட மொழியில் அனுஷத்திற்கு அனுராதா என்று பெயர். ராதைக்கு அடுத்தது. எனவே விசாகன் ராதையுமானான். சிவனே ராதையாகப் பிறந்து கண்ணனுடன் ராச லீலை புரிந்தான் என்று தேவி புராணம் கூறுகிறது. சிவனே கந்தனாக அவதரித்தான் என்று கந்தபுராணம் கூறுகிறது. ஆக, கந்தனே ராதையானான் என்றும் சொல்லலாம். ராதையின் மகிமையை கர்க சம்ஹிதை, பிரம்ம வைவர்த்த புராணம் , தேவி பாகவதம் போன்ற நூல்கள் கூறுகின்றன. அதன்படி ராதா- மாதவன் திருமணம் நடந்த தினம் விசாக பௌர்ணமியே. எனவேதான் மகாபெரியவருக்கு ராதா- கிருஷ்ண வைபவத்தில் விருப்பம் உண்டாயிற்று எனலாம். இப்போது புரிகிறதா?
கிருஷ்ண சைதன்ய மகாபிரபு ஒரு சந்நியாசி. அவரது சீடன் ஒருவன் பிச்சை யிட்ட பெண்மணியின் முகத்தைப் பார்த்தான் என்பதை அறிந்து அவனை டிஸ்மிஸ் செய்து விட்டார். அதனால் அந்த சீடன் தன் உயிரையே மாய்த்துக் கொண்டான். அத்தகைய சைதன்ய மகாபிரபு ராதா கிருஷ்ண இயக்க சந்நியாசி. அவர் 12 ஆண்டுகள் பூரி ஜெகந்நாதர் கோவிலிலேயே வாழ்ந்து, தனது 50-ஆவது வயதில் ஜெகந்நாதரின் திருவடியில் கலந்தார். எனவே சந்நியாசிகளின் ராதா- கிருஷ்ண பிரேமை என்பது மிகவும் உயர்ந்த நிலை.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *