ஒரு தாயின் குமுறல் – நங்கநல்லூர் J K SIVAN
நீங்களே சொல்லுங்கள்? யாருக்கு ராமாயணம், மஹாபாரதம் , ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ பக்தவிஜயம் கதைகள் தெரியாது? தானாக படிக்காவிட்டாலும் யார் சொல்லியாவது கதைகள் காதில் விழுந்திருக்குமே. மேலே சொன்ன நான்கில் நிச்சயம் ராமன் கதையும் கிருஷ்ணன் கதையும் எல்லோரும் அறிந்தது என்று தாராளமாக சொல்லலாம்.
கிருஷ்ணன் சிறையில் பிறந்தான். அவன் அம்மா தேவகி அப்பா வசுதேவர் ரெண்டுபேருமே கைகால்களில் இரும்பு சங்கிலி விலங்குகளோடு சிறைச்சாலையில் இருந்த போது கிருஷ்ணன் தோன்றினான் என்று தெரியும். மதுராவில் கம்சன் கோட்டை, அதில் சிறைச்சாலை, கிருஷ்ணன் தோன்றிய சிறை அறை எல்லாம் இன்றும் இருக்கிறது. வரிசையாக நின்று பார்த்தேனே. பிறந்ததும் சாகவேண்டியவன் கிருஷ்ணன். இது பெற்றோர்களுக்கு நன்றாக தெரியும். சாவு சொந்த மாமன் கம்சன் கை வாளால். இதற்கு முன் பல குழந்தைகளை அப்படிக் கொன்றிருக்கிறானே! ஆகவே இந்த குழந்தை தப்பவேண்டும். சாகக்கூடாது என்று விரும்பினதில் தப்பில்லை. ஆனால் அந்த குழந்தை தானாகவே தப்ப திட்டம் வகுத்து அப்பா வசுதேவரைத் தன்னை தூக்கிச் செல்லச் செய்தது. நாட்கள் ஓடிவிட்டன. இதோ தேவகி தனியே சிறையில் அழுது கொண்டிருக்கிறாள். அவள் மனதில் ஓடும் எண்ணங்கள் உரக்க நமக்கும் கேட்கிறது:
”யார் உண்மையிலேயே சிறையில் இருந்தது.? நானும் என் மகன் கிருஷ்ணனும் தான். வேறு வேறு சிறைகள். நான் இருப்பது இந்த கல்லால் கட்டிய சிறை. அவன் இருப்பது என் உள்ளம் எனும் மனச் சிறையில். என் உடல் தான் இங்கிருந்ததே தவிர மனசெல்லாம் என் மனம் பூரா, அவன் மேலேயே இருக்கிறதே. பாவி, நான் கொடுத்து வைக்காதவள். என் கஷ்டம் இனி வேறெவருக்கும் வரவேண்டாம். நான் தனியளாகி விட்டேனே. இருந்தும் இல்லாதவளாகிவிட்டேனே.
இந்த தாய்க்கு ஏழும் பிறந்து ஒட்டாமல் போனதால் எட்டாவதாக நீ பிறந்து எங்கோ வாழ்ந்து எனக்கு எட்டாதவனாகவே போய் விட்டாயோ?. கிட்டா என்று உன்னை கூப்பிடுவது கூட நீ எட்டாமலே இருப்பதாலா, கிட்டாமல் இருப்பதாலா?
அவனைப் பற்றி அவன் விஷமங்களை பற்றி, அவன் நண்பர்களை பற்றி அவன் விரும்பியவற்றை பற்றி, அவன் சாகசங்களை பற்றி நிறைய நிறைய கேட்கவேண்டும் போலவே இருக்கிறதே.
எங்கும் எதிலும் அவனையே நான் நினைத்துகொண்டிருக்கிறேனே தவிர அவனை நெருங்க முடிய வில்லையே!!.இது கொடுமையிலும் கொடுமையல்லவா? ஒவ்வொரு முறையும் அவன் பற்றிய ஏதாவது செய்தி வராதா? என்று கண்ணிமைக்காமல் காத்திருந்தே என் வாழ்க்கை முடியப் போகிறதா?.
எங்கிருந்தாலும் அவன் நன்றாகவே வளரட்டும், வாழட்டும். அவர் இரவும் பகலும் காத்து வளர்க்கும் அவர்கள் நன்றாக இருக்கட்டும். நான் செய்யத் தவறியதை, செய்யவேண்டும் என்று எண்ணினாலும் செய்ய முடியாததை, யாரோ எங்கோ செய் கிறார்களே. எத்தனை கோடி நன்றி சொல்லுவேன் அவர்களுக்கு?
அவன் சந்தோஷம் ஒன்றே என் சந்தோஷம். நான் துக்கப்படுகிறேனோ? ஏன்? எதற்கு இந்த துக்கம்? தேவையில்லையே. அவன் தான் நன்றாக வளர்கிறானே. விளையாடுகிறானே. குழல் நன்றாக ஊதுகிறானாம்!. பசுக்கள் கன்றுகள் எல்லாம் கூட அவன் பின்னாலேயே அவன் குழலோசையில் மயங்கி அவனை தொடர்கின்றனவாம். முழு கிராமமும் கூட்டமாக கோபியர்கள் கோபர்களாக கூடி அவன் அருகில் சிலையாக நின்று அவன் இசையில் மூழ்கு கிறார்களாமே. நான் தான் காதிருந்தும் செவிடாயிற்றே. என்று எங்கு எப்போது என் மகன் அவன் குழலோசையை கேட்பேன்? ஊருக்கும் பேருக்கும் தான் நான் பெற்ற தாய். ஆனால் உண்மையில் நான் தான் ”மற்றதாய்” விட்டேனே. ஊருக்கு தான் நான் பத்து மாதம் சுமந்த தாய். அவன் குரல் கேட்காத செவிடி அவனைக் காணாத குருடி.’ நான் அம்மாவே இல்லை, வெறும் ”சும்மா” தான்.”
தேவகி குமுறினாள் குமைந்தாள்.
கண்ணன் அவள் குறை தீர்க்க தீர்மானித்து விட்டானே.
“ பொறுத்திரு தாயே காலம் கை கூடி வரப்போகிறது. உன்னைச் சிறை மீட்பேன். உனக்கு சிறைவாசம் சிறிது காலம் தானே. ஆனால் நான் தான் உன் மனச்சிறையில் என்று மிருப்பேனே. எனக்கு அதிலிருந்து விடுதலையே வேண்டாமே, திருப்தியா?” என சங்கல்பித்தான் கண்ணன்.
கிருஷ்ணனும் பலராமனும் மதுராவிற்குச் சென்று கம்சனைக் கொன்று மதுரா நகர் மன்னனாகி தேவகி வசுதேவர் சிறை மீண்டனர் என்பது தெரிந்த கதையல்லவா?