அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்.
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் என்று ஒருவர் இருந்ததே நூற்றுக்கு தொண்ணுத்து ஒன்போது பேருக்கு தெரியாது. அதுவும் அவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் என்பதும் தெரியாத சங்கதி. பெயரைப் பார்த்தால் ஏதோ இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரோ என்று தான் நினைக்கத் தோன்றும்.
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் பழைய காலத்தில் நடு நாட்டில் திருஎருக்கத்தம் புலியூர் என்னும் ஊரில் பாணர் குலத்தில் தோன்றியவர். இந்த ஊர் எது தெரியுமா? இப்போது சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ராஜேந்திர பட்டினம் என்ற ஊர் தான்.
பாணர்கள் பண்ணிசைத்துப் பாடுபவர்கள்.
இவர் சிவபெருமான் மேல் உள்ள பாடல்களை யாழ் என்ற வாத்தியத்தில் பண் இசைத்து பாடிக்கொண்டே வாசிப்பவர்.
பிற்காலத்தில் திருஞான சம்பந்த நாயனார் பாடல்களையும் யாழில் இசைத்தவர். பண்ணிசைத்து பாடுபவர்கள் பாணர்கள். யாழில் பண்ணிசைத்து பாடியதால் யாழ்ப்பாணர். திருநீலகண்டன் மேல் விடாமல் அப்படி பண்ணிசைத்து யாழில் பாடியதால் திருநீலகண்ட யாழ்ப்பாணர். அப்படியென்றால் அவருக்கு அப்பா அம்மா வைத்த பெயர்? வழக்கம் போல் எத்தனையோர் போல நமக்கு இவருடைய இயற் பெயரும் தெரியாது.
நாயனாருடைய மனைவி பெயர் மதங்க சூளாமணி அம்மையார். கணவனுக்கேற்ற மனைவி. நாயனாரைப் போலவே சிவபக்தை. நன்றாக சிவன் மேல் பாடுவார். இருவரும் சோழநாட்டு சிவாலயங்களுக்கு வெளியே நின்று, தம்முடைய யாழில் பண்ணிசைத்துப் பாடி வழிபட்டு பின்னர் மதுரையை வந்தடைந்தார். அக்காலத்தில் கோவிலுக்குள் எல்லோரும் நுழைய முடியாத பழக்கம் வழக்கத்தில் இருந்தது. மதுரைக்கு திருஆலவாய் என்று ஒரு பெயர். சொக்கேசன் கோவில் வெளியே நின்று திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம்பதியர் பாடினார்கள். அவர்களுடைய பக்தி சங்கீதம் பக்தர்களை கவர்ந்த தோடில்லாமல் சொக்கநாதரும் மீனாட்சி இருவருமே கேட்டு மகிழ்ந்தார்கள். சுந்தரேஸ்வரர் கோவில் அர்ச்சகர் கனவில் தோன்றி நாயனாரையும் அவர் மனைவியையும் கோவிலுக்குள் வடக்கு வாசலில் தனி வழி அமைத்து உள்ளே அழைத்து வர கட்டளையிட்டார். அதேசமயம் சுந்தரேஸ்வரர் யாழ்ப்பாணர் கனவிலும் தோன்றி ”உன்னை கோவில் அர்ச்சகர்கள் அடியார்கள் வந்து அழைப்பார்கள் என் முன்னே உன் மனைவியோடு வா” என்று உரைத்தார். இதைக் கேட்டு நாயனார் இறைவன் கருணையை திருவுளத்தை அறிந்து எவ்வளவு மகிழ்ந்திருப்பார் என்பதை நான் எழுதுவதை விட நீங்களே கண்மூடி ரசித்து மனதில் நினையுங்கள்.
மறுநாள் திருநீலகண்டர் தம்முடைய மனைவியுடன் திருக்கோவிலின் வெளியில் பண்ணிசைத்துக் கொண்டிருந்தபோது அடியவர்கள் இறையாணையைக் கூறி அவரையும் அவர்தம் மனைவியையும் திருக்கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
திருக்கோவிலுக்குள் சென்றதும் தரையில் அமர்ந்து இறைவன் புகழ் பற்றி யாழில் பண்ணிசைத்தார் திருநீலகண்ட யாழ்ப்பாணர். தரை ஈரமாக இருந்தது. அவர் கவலைப்படவில்லை. ஆனால் மதுரை சொக்கேசன் அசரியாக, ‘தரையில் குளுமையால் யாழ் நெகிழ்ந்து அதனுடைய சுருதி குறைந்துவிடும். ஆதலால் திருநீலகண்டருக்கு பொற்பலகை இடுக’ என்று ஆணை பிறப்பித்தார். பக்தர்கள் ஓடிப்போய் ஒரு தங்கப்பலகை எடுத்து வந்து அதில் நாயனாரை அமர்த்தினர்.
மதுரையில் சிலகாலம் தங்கியிருந்து ஆலவாய் அண்ணலை போற்றி பண்ணிசைத்து வழிபட்ட பின்னர் சோழ நாட்டு தலங்களை வழிபட தலயாத்திரை மேற்கொண்டு திருவாரூரை வந்தடைந்தார்.
திருவாரூர் தியாகேசன் கோவிலிலும் கோவிலின் வடபுறத்தில் வாயிலமைத்து திருநீலகண்டரை ஆலயத்துள் அழைத்துச் சென்றார்கள். வீதிவிடங்கரையும், தியாகேசரையும் பண்ணிசைத்து மனமார வழிபட்டார் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார். சீர்காழி சென்று எப்படியாவது ஒரு முறை திருஞான சம்பந்தரைக் காண துடித்தார். சீர்காழி சென்றபோது யாழ்ப்பாணர் தம்பதியரை திருஞான சம்பந்தர் வரவேற்று தம் வீட்டுக்கு அருகே ஒரு இல்லத்தை அமைத்துக் கொடுத்தார். அது முதல் திருஞான சம்பந்தருடன் இருந்து வந்த திருநீலகண்டர் சம்பந்தர் பெருமான் பாடிய பதிகங்களை தம்முடைய யாழில் பண்ணிசைத்து மகிழ்விக்கும் நற்பேற்றினைப் பெற்றார்.
திருஞான சம்பந்தரின் திருமணத்திற்குச் சென்ற திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் மற்றும் மதங்க சூளாமணியார் ஆகியோர் திருமணத்தின்போது தோன்றிய அருட்சோதியினுள் புகுந்து இறைபதம் பெற்றனர்.
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் குருபூஜை வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பின்பற்றப்படுகிறது.