ஒரு சுவாரஸ்யமான கடிதம் – நங்கநல்லூர் J K SIVAN
சுவாமி விவேகானந்தர் பூமியில் எதற்கு பிறந்தாரோ அந்த கடமையை கர்மாவை கச்சிதமாக முடித்துக்கொண்டு 32 வயதிலேயே விண்ணுலகெய்திவிட்டார்.
அவர் கடமையை செய்தது இருக்கட்டும். நாம் எல்லோருமே ஒவ்வொரு கணமும் பூமியில் நாம் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று ஏதோ ஒரு கற்பனையில், எதிர்பார்ப்பில் வாழ்கிறோம். பாரதியே ”காணி நிலம் வேண்டும், அந்த கனவு மெய்யப்பட வேண்டும்” என்று ஆசைப்பட்டவர் தான். ஆகவே விவேகானந்தரும் ஆசைப்பட்டார். அவர் மனதில் இருந்த ஆசை, ஒரு எண்ணம் தோன்றியதை விவேகானந்தர் 27.12.1899 அன்று லாஸ் ஏஞ்செல்ஸ் என்ற ஊரில் வாழ்ந்த கிறிஸ்டினா என்ற அமெரிக்க பக்தைக்கு ஒரு கடிதத்தில் எழுதிய விஷயம் தான் இது:
அன்பு சகோதரி கிறிஸ்டினா, இப்போதெல்லாம் நீ சீக்கிரம் விழித்துக் கொள்கிறாய் என்று சொன்னாய். நல்லது விழித்திரு. இனி தூக்கம் வேண்டாம். என்னுடைய நல்லகாலம் நான் அமெரிக்கா வந்ததால் முதலில் என் தேகம் குணமடைந்தது. நடக்கிறேன். ஒவ்வொருநாளும் ராத்திரி சாப்பிட்டபின் 3 மைல் நடப்பது சௌகர்யமாக இருக்கிறது. சுகம்.
இங்கிலாந்தில் எனக்கு வரும்படியும் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 20 டாலர்கள். இன்னும் ரெண்டு மூன்று வாரத்தில் உடம்பு இன்னும் சற்று குணமான பின் சான்பிரான்சிஸ்கோ போய் அங்கே இன்னும் கூட சம்பாதிப்பேன். சீக்கிரமே ஒருநாளைக்கு 50 டாலர்களாக அதிகரிக்க இன்னும் உழைப்பேன். எல்லா பணத்தையும் என்னிடமே வைத்துக் கொள்வேன். வீணாக்க மாட்டேன். ஹிமாசலத்தில் 6000 அடி உயரத்தில் ஒரு குட்டி மலையை வாங்குவேன். நான் வாங்கப்போகும் அந்த மலை உச்சியிலிருந்து எங்கும் பனி சிகரங்களைப்பார்த்து மகிழ்வேன். ஊற்றுகள், சிறிய ஏரி, அந்த மலையில் இருக்க வேண்டும். இமயமலையில் சிடார் Cedars காடுகள் எப்போதும் உண்டு. அழகான பூக்கள் எங்கும் கண்ணைப் பறிக்கும். அதற்கு இடையில் ஒரு பர்ணசாலை அமைத்துக் கொள்வேன். நிறைய காய்கறி பழ தோட்டம் வளர்ப்பேன். நானே விதை விதைத்து, செடி நட்டு பாத்தி கட்டி நீர் வார்த்து வளர்ப்பேன். நிறைய புத்தகங்கள் வாசிப்பேன். மனிதர்களின் முகத்தை எப்போதாவது தான் ஒரு தடவை தான், வெகுநாட்களுக்கு பிறகு பார்ப்பேன். உலகம் தானே எப்படி எல்லாம் கெட்டொழிகிறதோ அது பற்றிய செய்தி காதில் விழும். எனக்கென்ன கவலை அதைப் பற்றி? என் வேலையை நான் திருப்தியாக ஓய்வில்லாமல் செய்து முடித்துவிட்டேன். சமூக ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்தாகி விட்டது. இனி ஒய்வு பெறுவேன். அப்பப்பா என் வாழ்வில் தான் எவ்வளவு அலைச்சல், சங்கடங்கள், எதிர்ப்புகள்.அத்தனையும் சமாளித்துவிட்டேன். பிறந்தது முதல் நான் ஒரு நாடோடி. மேலே சொன்னது தான் என் லக்ஷிய கனவு. என் கனவுகள் எப்படி வந்ததோ அப்படியே மறைந்துவிடுபவை. என் மற்றவர் நலன் தான் எனக்கு எப்போதும் பிரதானம்.
இங்கே தட்ப வெப்ப நிலை வட இந்திய சீதோஷ்ணநிலை போலவே இருக்கிறது. சிலநாள் வெப்பம் அதிகமாகவே இருக்கிறது. சிலநாள் சில்லென்று குளிர்ச்சி. இங்கே ரோஜா மலர்கள் நிறைய இருக்கிறது. அழகான விருக்ஷங்கள். எனக்கு பனி மூட்டம் பிடிக்கும். காலடியில் நொறுங்கும் பனிக்கட்டி பிரியமானது. எனும் வெண்மை வெண்மை வெண்மை.
என் சிறுநீரகத்திலோ இதயத்திலோ எதுவும் குறைபாடு இல்லை. அஜீரணம். அதுவும் சரியாகிவிட்டது. இன்னும் ஒரு மாசத்தில் பார். நான் சிங்கம் போல் வீறிட்டு எழுவேன். இங்கிலாந்து மக்களை போயர்கள் வாட்டுகிறார்கள். யுத்தம் தொடர்கிறது. எங்கும் துக்கம். எப்போது மனிதன் நாகரீகமாக வாழ கற்றுக்கொள்ளப் போகிறான்? என் அன்னை பவதாரிணி மட்டுமே அறிவாள். புது வருஷத்தில் நல்லவை நடக்கட்டும். நீயும் பகவானை வேண்டிக் கொள். விவேகானந்தா