THULASIDAS – J K SIVAN

ஸ்ரீ ராம தரிசனம் 7 – நங்கநல்லூர் J K SIVAN
துளசி தாஸர்
வடக்கே கம்பரைப்பற்றி அவர் எழுதிய ராமாயணத்தை பற்றி சொன்னால் காதில் விழாமல் எதிரே மேயும் பசு மாட்டின் மேல் கவனம் வைப்பார்கள். வால்மீகி துளசி தாசர் ராமாயணம் என்றால் கை கட்டி அதை கேட்க ஓடி வருவார்கள். அதே கதை தான் இங்கேயும். வால்மீகி ராமாயணம் வடமொழி அறிந்த நம்மவர் களுக்கு கொஞ்சம் தெரியலாம். துளசி தாசர் ராமாயணம் என்றால் யார் அவர்? என்பார்கள் .
துளசி தாசர் பற்றி இன்றைக்கு இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.
யாருக்காவது என்று மூச்சு உள்ளேயும் வெளியேயும் ஸ்ரீ ராம் என்ற சப்தத்தோடு பிரயாணம் செய்தால் அவரை ”நீங்கள் தான் துளசிதாசரா?” என்று கேட்டால் ‘ஆம்’ ‘ என தலையாட்டுவார். ஸ்ரீ ராமநாமம் தான் அவர் ஸ்வாசம். பல முறைகள் ராமனை நேரில் கண்டவர் பேசியவர் எனலாம். ஒருமுறை அவர் ஹனுமனை சந்திக்கிறார்.
” ஜெய் மாருதி வீரா, நமஸ்காரம் “
” ஜெய் ராம் சீதாராம். என்ன துளசிதாசரே இவ்வளவு தூரம்?”
” ஆஞ்சநேயா, மஹா வீரா எனக்குள் ஒரு ஆசை. உங்களுக்கு ராம – லட்சுமணரின் அனுக்கிரகம் கிட்டியது போல் எனக்கும் நேரவேண்டும் . அதற்கு நீங்கள் தான் அனுக்கிரஹம் செய்யவேண்டும்”
”துளசி தாசர், நீங்களே அழைத்தால் ஸ்ரீ ராமன் ஓடிவருவார். இதோ பாருங்கள் எதிரே தெரிகிறதே ஒரு ஊர், அது தான் சித்ர கூடம். இந்த இடத்திற்கு ராமகிரி என்றும் பெயர். ராமன் வனவாசம் செய்த இடம். அங்கே வெள்ளி உருகி ஓடுவதை போல் தெரிகிறது பார்த்தீர்களா? அது தான் புண்ய நதி மந்தாகினி. அங்கே சென்று அமர்ந்து ராமஜபம் செய்யுங்கள். ராம தரிசனம் கிட்டும் ”
”மாருதி ராயா, எனக்காக நீங்களும் சற்று நேரம் என்னுடன் உட்க்கார்ந்து நாம் இருவருமே ராம ஜெபத்தில் ஈடுபடலாமே. உங்களோடு சேர்ந்து நானும் ஸ்ரீ ராம நாம ஜபம் செய்வது என் பாக்யம் ” என்கிறார் துளசிதாசர்.
”ஓ, சந்தோஷம். கரும்பு தின்ன கூலியா வேண்டும்”
ஹநுமானோடு துளசி தாசரும் ராம ஜபம் செய்தார். உள் மனதில் ராமர் எப்போது வருவார், எப்படி வருவார்? தனியாகவா கூடவே லட்சுமணனுடனுமா ? சீதையை வாருங்கள் என்று நான் அழைக்காததால் ஒருவேளை அவள் வரமாட்டாளோ? அதனால் ராமர் அவளை அழைத்து வருவாரா மாட்டாரா? ராமர் எப்படி இருப்பார்? தலையில் ஜடாமுடியுடன் வருவாரா? (அ) வைரக்கிரீடம் அணிந்து வருவாரா? மரவுரி தரித்து வருவாரா? என்ற பல சிந்தனைகளோடு இடுப்பில் இருந்த துணியை வரிந்து கட்டிக் கொண்டார் துளசிதாசர்.. கண்களை இமைக்காமல் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தார்.
வெகுநேரமாகியது. சூரியன் மேலே ஏறி மெதுவாக மேற்கே இறங்கி விடுவான் போல் இருக்கிறதே. மலைப் பாதை குறுகலாக ஒற்றையடிப் பாதை மாதிரி வளைந்து சென்றது.. இருபுறமும் புதர். அங்கிருந்த ஒரு அகலமான பாறாங்கல்லில் நின்று கொண்டு ராம, ராம என்று ஜபித்து நர்த்தனமாடினார் துளசி தாசர்.
திடீரென்று மலை உச்சியில் இருந்து வேகமாக இரண்டு குதிரைகள் வந்தன. அதன் மீது இரண்டு ராஜ குமாரர்கள். துளசிதாசர் எத்தனையோ ராஜாக்களைப் பார்த்திருக்கிறார். ஆனால் குதிரையில் வந்த ராஜ குமாரர்களோ தலையில் தலைப்பாகை, அதைச் சுற்றி முத்துச் சரங்கள் கொண்டை மீது வெண்புறா இறகுகள் என்று வித்தியாசமாக இருந்தனர். குதிரையில் வந்தவர்கள் தாசரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கையாட்டி விட்டுப் போய்விட்டனர்.
துளசி தாசர் அந்த ராஜகுமாரர்களை அலட்சியமாக பார்த்தார். ,இவர்கள் யாரோ ராஜகுமாரர்களாக இருந்தால் நமக்கு என்ன. இவர்கள் என் ராம, லக்ஷ்மணனுக்கு ஈடாவார்களா? தலையில் ரத்ன கிரீடமும் மார்பில் தங்கக் கவசமும், தங்க ஹாரமும் கையில் வில்லும் இடுப்பில் அம்புறாத் தூளியும் கையில் ஒரு அம்பைச் சுற்றிக் கொண்டே என்ன அழகாக இருப்பார் என் ராமர் என்று ராமனைத் தியானித்தவாறே ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தார்.
நேரமாகி விடவே, ஹனுமான் எழுந்தார். துளசி தாசரைப் பார்த்து
”என்ன துளசி தாசரே ” ஆனந்தமாக ராம லட்சுமணர்களை தரிசித்ததில் சந்தோஷம் தானே?” என்கிறார்
” ராம லக்ஷ்மண தரிசனமா என்ன சொல்கிறீர் ஹனுமான்? ராமன் எங்கே வந்தான், எப்போது வந்தான்?. நான் பார்க்கவில்லையே”
” என்ன சொல்கிறீர்கள் நீங்கள், உங்களை பார்த்து புன்னகைத்து கை அசைத்து, வெகு அருகில் மெதுவாக குதிரை மேல் இருந்தவாறே காட்சி தந்தார்களே , நான் பார்த்தேனே” என்கிறார் ஹனுமான்.
”அடாடா, நான் கண்ட ராஜகுமாரர்கள் தான் ராம லக்ஷ்மணர்களா? ஏமாந்து கோட்டை விட்டு விட்டேனே. அப்படி வருவார்கள் என எதிர்பார்க்கவில்லையே ” என புலம்பினார் துளசிதாசர்.
”ராமர் உமது இஷ்டப்படிதான் வரவேண்டுமா? அவர் இஷ்டப்படி வரக்கூடாதா?” என்று கேட்டார் ஹனுமான்.
”ஸ்ரீ ராம தூதா, என்னை மன்னிக்க வேண்டும். ஒன்றும் அறியாத பேதை நான். ஏதோ கற்பனை செய்து கொண்டு ராம லக்ஷ்மணர்களை அலக்ஷியம் செய்து விட்டேனே ”.
”வாயுகுமாரா. இன்னும் ஒருமுறை தயவு செய்யுங்கள். ஸ்ரீ ராமன் எந்த வடிவில் வந்தாலும் ஆனந்தமாய் தரிசிக்கிறேன்” என்றார் துளசிதாசர்.
” சரி, நீங்கள் போய் மந்தாகினியில் இறங்கி நீராடி விட்டு மீண்டும் ஜபம் செய்யுங்கள் ராமாயண பாரா யணம் செய்யுங்கள். ராமன் மறுபடியும் வருவாரா பார்க்கலாம்” என்றார் ஹனுமான்.
மந்தாகினியில் மீண்டும் நீராடி துளசிதாசர் ராம நாம ஜபம் செய்தார். வால்மீகியின் ராமாயண பாராயணம் செய்தார், இரண்டு நாட்கள் ஓடிவிட்டது. அன்றைய தினம் ராமாயண பாராயணத்தில் பரதன் சித்ர கூடத் திற்கு வரும் முன்பு ராம, லக்ஷ்மணர்கள் சித்ர கூடத்தில் வசித்துக் கொண்டு காலையில் மந்தாகினியில் நீராடுகிறார்கள் என்று கட்டத்தைப் படித்துக் கொண்டிருந்தார். எதிரே மந்தாகினியில் குளித்து விட்டு இரண்டு இளைஞர்கள் நதியிலிருந்து கரை ஏறி துளசி தாசரிடம் வந்தனர்.
ஒருவன் நல்ல கருப்பு நிறம், மற்றவன் தங்க நிறம். முகத்தில் பத்துப் பதினைந்து நாள் வளர்ந்த தாடி,
கருப்பன் துளசிதாசரிடம் வந்தான்.
”சுவாமி, உங்களிடம் கோபி சந்தனம் இருக்குமா? என கேட்டான்.
ராம ஜபம் சொல்லிக்கொண்டே ”ம்ம். இந்தா . இருக்கிறது” என தாசர் சந்தனம் நீட்டினார்.
மற்றவன் ” சுவாமி, எங்களிடம் கண்ணாடி இல்லை. நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்களேன் ” என்றான்
”ஆஹா, இட்டு விடுகிறேனே”. இடது கையில் நீர் விட்டுக் கொண்டே சந்தனத்தைக் குழைத்த போது கருப்பு இளைஞன் எதிரே உட்கார்ந்து முகத்தை நீட்டுகிறான். துளசி தாசர் அவன் மோவாயைப் பிடித்துக் கொண்டு முகத்தைப் பார்க்கிறார். அவனது கண்கள் குருகுருவென்று இவரைப் பார்க்கின்றன. பார்த்தவுடன் தன்னை மறந்து விட்டார். அந்த இளைஞன் இவருடைய கையில் இருந்த கோபி சந்தனத்தைத் தன் கட்டைவிரலில் எடுத்து தன் நெற்றியில் தீட்டிக் கொண்டு அவருடைய நெற்றியிலும் தீட்டினான். தன்னுடன் வந்தவனுக்கும் தீட்டினான்.
அவர்கள் உட்கார்ந்திருந்த படித்துறைக்கு அருகில் ஒரு மாமரம், மரத்தின் மீது இருந்த கிளி கூவியது. அது ஸ்லோகமாக துளசிதாசர் காதில் விழுகிறது. கிளி என்ன சொல்லியது:
”சித்ர கூடகே காடபரே பகி ஸந்தக கீ பீர துளசிதாஸமே சந்தந கிஸே திலக தேத ரகுபீர.
”சித்ரக் கூடத்துக் கரையில் எப்போதும் சாதுக்கள் கூட்டம் அதிகமாக கண்ணில் படும். அங்கே ஒரு ஓரமாக துளசிதாசர் அமர்ந்து சந்தனம் குழைக்கிறார்.ஆனால் எதிரே இருந்த ராமன் அதை துளசிதாசருக்கு திலக மிடுகிறார்.
துளசிதாசர் திடுக்கிட்டு எதிரே உள்ள கருப்பனை பார்க்கிறார்: சிரித்துக்கொண்டே அவன் கேட்கிறான்:
”சுவாமி, என் நெற்றியில் நாமம் சரியாக இருக்கிறதா?
” ராமா, உனக்கு இதைவிட பொருத்தமான நாமம் ஏது?” துளசி தாசர் பக்தியில் திளைத்து கதறிக்கொண்டே அந்த இரண்டு இளைஞர்களையும் கட்டி அணைத்துக் கொண்டார். இளைஞர்களுக்கு பதில் அங்கே ராம லக்ஷ்மணர்கள் அப்போது அவருக்கு அவர் விரும்பியபடியே தரிசனம் தருகிறார்கள்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *