ஸ்ரீமத் பாகவதம் 10வது காண்டம் – நங்கநல்லூர் J K SIVAN
பகாசுரன் வாய் பிளந்து மாண்டான்
பிருந்தாவனத்தில் ஒவ்வொரு ஒவ்வொரு நாளும், ஏன், ஒவ்வொரு வினாடியும் கோலாகலம். குதூகலம், கொண்டாட்டம். கிருஷ்ணன் இருக்கிறானே வேறே என்ன வேண்டும்? அதே சமயம் யமுனைக்கு அக்கரையில் மதுராவில் எரிமலைக் குமுறல்,நெருப்பு பெருமூச்சு கொழுந்து விட்டு எரிந்தது. கம்சனைச் சுற்றி தலையைக் கவிழ்ந்து கொண்டு ராக்ஷஸர்கள். உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.
”ஒரு சிறு பயலை உங்களால் எதிர்க்க, வெல்ல,கொல்ல முடியவில்லை என்றால் எதற்கு உங்களுக்கு மீசை, ஆயுதம், பலமிக்க ராக்ஷஸர்கள் என்ற பெரிய பேர்.. இதுவரை நான் வெல்வேன், நான் கொல்வேன் என்று சொல்லி சென்ற அத்தனை பேரில் ஒருவராவது உயிரோடு திரும்பி வரவேயில்லை. பிருந்தாவனத்திலிருந்து நேராக எம பட்டணம் சென்று விட்டார்கள். ஒரு சிறு பயன், எந்த ஆயுதமும் இல்லாதவன் அவனை உங்களால் பிடித்துக் கொண்டு வரமுடியவில்லை, கொன்றுவிட்டு வரமுடியவில்லை. வெட்கமாக இல்லையா உங்களுக்கு.?அடுத்தது யார் போகப்போகிறீர்கள், தோற்கப் போகிறீர்கள், சாகப்போகிறீர்கள்?” கர்ஜித்தான் கம்சன்.
”நான் வெற்றியோடு திரும்பிவருவேன், கிருஷ்ணன் உயிரைக் குடித்துவிட்டு தான் மறுவேலை” . பகாசுரன் என்ற அசுரன் சபதம் செய்துவிட்டு கிளம்பிவிட்டான்.
பிருந்தாவனத்தில் கிருஷ்ணன், பலராமன், மற்றும் நண்பர்கள் கன்றுக்குட்டிகளுக்கு மேய்ச்சல் காட்டிவிட்டு, யமுனையில் குளிப்பாட்டி நீர் அருந்தச் செய்துவிட்டு நீரில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆற்றங்கரையில் ஒரு பெரிய கொக்கு. மலைமாதிரி உருவம்.”டேய் எவ்வளவு பெரிய கொக்கு பாருடா.”
”கிட்டப்போகாதே விழுங்கிடும். ரொம்ப பெரிய கூரான அலகு”
திடீரென்று அந்த கொக்கு ஒரு தாவு தாவி வாயைத் திறந்து சில பையன்களை விழுங்கிவிட்டது. கிருஷ்ணன் அருகே நின்று கொண்டிருந்தவனை குறிபார்த்து விழுங்க வந்த அந்த ராக்ஷஸ நாரையாக கண்மூடி திறக்கும் நேரத்தில் கிருஷ்ணனை விழுங்கிவிட்டான் பகாசுரன். பலராமன் மற்றும் நண்பர்கள் திகைத்து ஆவென்று வாயைப் பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்கள். கிருஷ்ணனை விழுங்கிவிட்டது என்ற எண்ணமே பலரை மயக்க மடையச்செய்தது.
பகாசுரன் வாய்க்குள் சென்ற கிருஷ்ணன் என்ன செய்தான் தெரியுமா?. தன்னைச்சுற்றி ஒரு நெருப்புருண்டையை உருவாக்கிக் கொண்டான். அவனை விழுங்கிய பகாசுரனின் நெஞ்சு, வாய், நாக்கு தொண்டை எல்லாம் கபகப என்று எரியத் தொடங்கியது. வலி எரிச்சல் தாங்க முடியாமல் கிருஷ்ணனையும் மற்றவர்களையும் அப்படியே வெளியே துப்பி விட்டான் பகாசுரன்.
வெளியே வந்து விழுந்த கிருஷ்ணன் ஒரு வித அடி,, காயம் இன்றி வெளியே உயிரோடு வந்துவிட்டான் என்ற கோபத்தால் பகாசுரன் கிருஷ்ணனைத் தாக்க ஆரம்பித்தான். தயாராக இருந்த கிருஷ்ணன் அந்த பூதாகார நாரையின் வாயை மேலும் கீழுமாக விரித்து, பலமாக பிளக்க ஆரம்பித்தான். கிருஷ்ணனின் பலத்துக்கு முன்னால் ஈடு கட்டமுடியாத பகா சூரன் வாய் பிளக்கப்பட்டு உயிரிழந்து கீழே சாய்ந்தான் . தேவர்கள் விண்ணிலிருந்து மலர் மாரி பொழிந்தார்கள். சங்க நாதம் எங்கும் எதிரொலித்தது.
உயிர் தப்பிய கோப சிறுவர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் சந்தோஷம். கிருஷ்ணனின் தீரச்செயல் அவர்களை மெய் சிலிர்க்க வைத்தது. அவர்கள் உயிரைக் காத்தவன் கிருஷ்ணன் என்ற நன்றியோடு அவனை அணைத்துக் கொண்டார்கள். எல்லோரும் கன்றுகளைக் கூட்டிக்கொண்டு வீடு திரும்பினாலும் எல்லா வீடுகளிலும் கிருஷ்ணனின் சாகசமே பேச்சாக இருந்தது. இது அடிக்கடி நிகழும் நிகழ்ச்சிதானே .
வ்ரஜபூமியில் எல்லோருக்கும் ஒரு பக்கம் அதிசயம், மற்றொரு பக்கம் அதிர்ச்சி. சிறுவன் கிருஷ்ணன் உயிருக்கு எத்தனை ஆபத்துகள் ஒன்று மாற்றி ஒன்று வந்து கொண்டே இருக்கிறது. ஏதோ தெய்வம் துணை இருந்து அந்த சிறுவனைக் காத்து வருகிறது என்று தெய்வத்துக்கு நன்றி தெரிவித்தார்கள். வேண்டிக்கொண்டார்கள். எல்லோரும் கிருஷ்ணனை ஆவலோடு கட்டிப் பிடித்து அன்பான முத்த மழை பொழிந்தார்கள்.
நந்தகோபன் மற்றும் அனைத்து கோபர்களும் ஏதோ ஒரு தெய்வ சக்தி ஒன்றுமறியா இளம் பாலகன் கிருஷ்ணனைக் காப்பாற்றி வருகிறது. கர்க முனிவர் சொன்னது முற்றிலும் உண்மை. கிருஷ்ணன் ஒரு தெய்வீக குழந்தை, நம்மைக் காக்க வந்தவன் என்று ஒருமனதாக தீர்மானித்தனர்.
இதெல்லாம் லக்ஷியம் பண்ணாத கிருஷ்ணன் பலராமன் இருவரும் மற்ற நண்பர்களோடு சந்தோஷமாக ஓடிப்பிடித்து, தாவிக் குதித்து நீச்சலடித்து எந்தவித கவலையுமின்றி விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்து பிருந்தாவன கோபியர்கள், கோபர்கள் நிறைய வெண்ணையோடும் பக்ஷணங்களோடும் அவர்கள் வீடு திரும்ப காத்திருந்து அவற்றை அளித்து மகிழ்ந்தார்கள்.