ஒரு அற்புத ஞானி – நங்கநல்லூர் J K SIVAN
கண்ட விதேக யோகம்ஷீர்டி சாய் பாபா பற்றி அறிந்தவர்களுக்கு நான் புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒரு ஆச்சர்யமான விஷயம் ஷீர்டி சாயி பக்தர்களுக்கு தெரிந்திருக்கும். சில சமயம் அவர் தங்கியிருந்த மசூதியில் மேலே ஊஞ்சல் மாதிரி ஒரு தொங்கும் சிறிய பலகையில் அவர் காணப்படுவார். நம்மைப் போல் படுக்கை இல்லை. கை கால்கள் ,தலை உடம்போடு இருக்காது. அவர் இருந்த அந்த சிறிய அறையின் நாலா பக்கங்களிலும் கை, கால், தலை எல்லாம் மூலை மூலையாக சிதறி கீழே இருக்குமாம். எஞ்சிய உடல் மட்டும் மேலே தொங்கும் பலகையில் இருக்கும். அறையில் எங்கும் அக்னி. அடேடே யாரவது பாபாவைக் கொன்று விட்டார்களா என்று கண்ணீர் விடவேண்டாம். இது கொலையோ தற்கொலையோ இல்லை. ஒருவித யோகம். கண்டம் என்றால் துண்டு துண்டாக. விதேகம் என்றால் உடலை விட்டு யோகம் என்றால் ஆத்மா நிலைத்திருப்பது. இப்படி உடலை பல துண்டங்களாக பிரித்துக் கொள்ளும் யோகம் தான் கண்ட விதேக யோகம்.மஹா தபஸ்விகள்,யோகிகள் இதெல்லாம் செய்வார்கள்.
போளூர் விடோபா ஸ்வாமிகளும் இப்படித்தான் படுப்பார். இது முக்கியமாக ரகசியமாக தான் நடக்கும். எங்கோ எப்போதோ சிலர் பார்த்துவிட்டால் தான் விஷயம் வெளியே கசியும். இதை நாலு பேர் பார்ப்பதற்காக அவர்கள் செய்வதில்லை.
தெல்லாகுளம் வெங்கட்ராம செட்டியார், ஈயகுளத்தூர் ஸ்வாமிகள், மொளவ நாயக்கர் ஆகியவர்கள் விடோபா ஸ்வாமிகளின் பக்தர்கள். போளூரில் அவர் இருந்த இடத்தில் அவரோடு சேர்ந்து ஒரு இரவில் படுத்துக் கொண்டிருந்தார்கள். நடு ராத்திரி மூவரில் யாரோ ஒருவர் எழுந்து அருகிலே பார்த்தபோது விடோபா ஸ்வாமிகளை காணோம். மற்றவர்களை எழுப்பி விஷயம் சொல்லி மூவரும் தேடினார்கள். நடுநிசியில் எங்கோ ஒரு சப்பாத்தி கள்ளி புதர் அருகில் விடோபா ஸ்வாமிகள் கால் அங்கொன்றும் இங்கொன்றுமாக, சற்று தள்ளி புதர் ஓரத்தில் தலை, மற்றும் சற்று தள்ளி கைகள் துண்டாக கிடக்க பயந்து அலறினார்கள்.
‘ஐயோ, ‘யார் இப்படி ஸ்வாமிகளை கொலை வெறியோடு தாக்கியது?” என்று ஓவென்று கத்தி அலறி ஊரைக் கூட்டி விட்டார்கள். பாவம் சாது,பணம் நகை எதுவுமே இல்லாதவர், வாய் வார்த்தையில் கூட யாரையும் துன்புறுத்தாதவர் அவருக்கு இவ்வாறு ஒரு கோர முடிவா?
ஊரே திரண்டு வந்துவிட்டது. ஹரிக்கேன் விளக்குகள் எடுத்து தேடிக்கொண்டு சப்பாத்தி கள்ளி காட்டுக்கு வந்து பார்த்தனர். எங்குமே அவர் உடல் முழுதாகவோ துண்டாகவோ காணோம்.
செக்குமேட்டில் சாக்கடைக்கு அருகே வழக்கம்போல் விடோபா அமர்ந்திருந்தார். அவர்களைக் கண்டதும் ஒரு மெல்லிய புன்சிரிப்பு. தலை அசைப்பு. ஊர்மக்கள் கோபமாக அந்த மூன்று பக்தர்களையும் பார்த்த பார்வையில் ”இப்படி நடு ராத்திரி எங்களை தூக்கத்திலிருந்து எழுப்பி ஒரு அதிர்ச்சி கொடுத்து விளையாடியதற்கு உங்களுக்கு கை கால் வேறு தலைவேறு தண்டனை தரலாமோ ?”என்று யோசிப்பது போல் இருந்தது. விட்டிருந்தால் அந்தமூன்று பக்தர்களுக்கும் கண்டா விதேக யோகம் பண்ணி விட்டிருப்பார்கள்.
இன்னொரு அற்புத சம்பவம் சொல்கிறேன்.
மதராஸில், இப்போது சென்னை, சுப்பராய முதலியார் என்று ஒருவர் வயிற்று வலியில் வாடி வருந்துபவர். எந்த மருந்தும் குணப்படுத்தவில்லை. வலியால் அவர் துடிப்பது பார்ப்பவர்களுக்கு துக்கம் தரும்.
ஒருநாள் அவருடைய கனவில் யாரோ ஒரு சுவாமியார். யாரென்றே தெரியவில்லை. ”போளூருக்கு என்னிடம் வா” என்று அழைத்தமாதிரி கனவோடு தூக்கம் கலைந்தது.
முதலியாருக்கு ஆச்சர்யம். போளூர் எங்கிருக்கிறது என்றே தெரியாதே . யார் அந்த சாமியார் என்றும் தெரியாதே. சிலரிடம் தனது அதிசய கனவைச் சொன்னார்.யாரோ ஒருவர் போளூர் எங்கிருக்கிறது என்று சொன்னதும் வயிற்றில் வலியோடும் மனதில் நம்பிக்கையோடும் தேடி விசாரித்துக்கொண்டு நடந்தார், போளூர் வந்து சேர்ந்தார். . போளூரில் தேடி விசாரித்ததில் விடோபா ஸ்வாமிகள் பற்றி அறிந்து கொண்டு அங்கே வந்து தரிசித்தபோது தான் ஆச்சர்யம் அதிகமாயிற்று. ஆம் அதே உருவம், முகம். .கனவில் கண்ட சாமியாரே தான்.
வேலு முதலியார் என்ற பக்தர் விடோபாவிடம் ‘ சுவாமி இந்த ஜீவன் இப்படி வழியால் புழுவாக துடிக்கிறதே.அருள் புரியாமல் இருப்பது நியாயமா? என்று கெஞ்சினார்.