பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K சிவன்
”சைக்கிள் பெடல்”- ஒரு அணா புஸ்தகம்.
மஹா பெரியவா நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். 13 வயது பள்ளிக்கூடத்தில் படிக்கும் பையன் ஒரே நாளில் சந்நியாசியாகி ஜகத் குருவானதாக உலகத்தில் எங்காவது கேள்விப்பட்டதுண்டா?. தன்னைத் தியாகம் செய்து கொண்டு சனாதன தர்மத்தைக் காப்பாற்றி வலுப்படுத்த பகவானே அவதாரம் செய்த உருவம் தான் மஹா பெரியவா. நூறு வருஷங்கள். ஒரு நாள் வியாதி என்று படுத்ததில்லை. எப்போதும் லோக க்ஷேமத்துக்கு பூஜை, தவம், தியானம், மௌனம், உபவாசம், கால்நடையாக நடந்தே நாடு பூரா திக்விஜயம் சென்றவர். உலகெங்கும் பேசும் தெய்வம் என்று போற்றப்படும் ஒரே எளிய மனிதர் உலகில் இருந்தார் என்றால் அது நம் மஹா பெரியவா. ஆஹா என்ன அதீத ஞானம். சிந்தனை. ஸ்புடம் போட்ட ஆராய்ச்சி. அலசல். எந்த விஷயத்தையும் ஆய்ந்து ஆராய்ந்து நுண்ணறிவோடு பகுத்து பார்க்கும் பேரறிவாளன், ப்ரம்ம ஞானி மஹா பெரியவா.
நாம் தான் உலகத்தில் புத்திசாலி நம் வாயால் உதிர்த்த சொற்கள் எல்லாம் பொன்னெழுத்தில் பொறிக்கத்தக்கவை என்று எண்ணி இறுமாந்து போகிறோம். உண்மையில் பொன்னாலான சொற்களை உதிர்த்த அந்த மஹா புருஷரின் வாக்கு ஒரு அணா புஸ்தககமாக வெளிவந்தது. சில ஓரணா புஸ்தகங்களை நான் படித்து உங்களுக்கும் அனுப்புபவன்.இதோ ஒரு ஓரணா புஸ்தகம். 1930-40களில் மஹா பெரியவா எழுதியதைச் சுருக்கி தருகிறேன் படித்துப் பாருங்கள். நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
மஹா பெரியவா சின்ன வயசில் சைக்கிள் ஒட்டி பழகி இருக்கிறார் போலிருக்கிறது. அனுபவ பூர்வமாக சொல்கிறார்.
”ஒருத்தன் சைக்கிள் ஓட்டறான் . பெடலை வேகமாக மிதித்து சுற்றுகிறான். சைக்கிள் வேகமாக ஓடுகிறது. கெட்டியாக கைப் பிடியை பிடித்துக்கொண்டு காலுக்கு ரெஸ்ட் கொடுக்கிறான். அவன் பெடலை மிதிக்கா மலேயே வண்டி வேகமாக ,முன் நோக்கி ஓடுகிறது.
இப்போ மேலே சொன்ன உதாரணமான சைக்கிளை விட்டு வேறு ஒரு விஷயம் சிந்திப்போம். அரசாங்கம் எல்லோருக்கும் பல போட்டிகள், பரிக்ஷை கள் வைத்து வேலைக்கு ஆள் தேர்வு செய்கிறது. அந்த பரிக்ஷைகள், போட்டிகளில் அதிக மார்க் வாங்கி ப்ராமண பிள்ளைகள் வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள். நன்றாக படித்து குறிப்பிட்ட மார்க் வாங்கினால் மெரிட் ஸ்காலர்ஷிப் தந்து காசில்லாமல் மேலே படிக்க வசதி தந்தால் அதிலும் ப்ராமண பிள்ளைகள் அதிக மார்க் வாங்கி முதலிடங்களை எல்லாம் பெறுகிறார்கள்.மற்ற வகுப்பு பிள்ளைகளுக்கும் அவர்களுக்கும் என்ன வித்யாசம்.? மற்ற வகுப்பு பிள்ளைகள் சிலரும் ஆசார அனுஷ்டா னங் களில் ப்ராமண பிள்ளைகளைவிட சிறந்தவர்களாகவும் இருக்கிறார்களே. எப்படி ப்ராமணபிள்ளைகள் பாஸ் ஆகிறார்கள்? அந்தணர்களை விட மற்றவர்கள் மோசம் இல்லையே? சில பிராமணர்கள் மற்றவர்களை விட ரொம்பவே மோசமாகவும் இருக்கிறார்களே. பகவான் எந்த பாரபக்ஷமும் காட்டுவதில்லை. அப்படி இருக்கும்போது பிராமணர்களின் வெற்றிக்கு என்ன காரணம்?
இன்றைக்கு மூன்று நான்கு தலைமுறைக்கு முன் இருந்த அந்தணர்கள், ப்ரம்ம தேஜஸ் பெற தேவைக்கு மேல் அனுஷ்டானங்களை விடாமல் ஸ்ரத்தையாக கடைப்பிடித்து, பக்தியோடு புனித வாழ்க்கை எனும் ”சைக்கிள் பெடலை அழுத்தி மிதித்து வேகமாக சுற்றி விட்டுவிட்டார்கள்.” அவர்கள் மிதித்த மிதியில் இன்றும் சைக்கிள் வேகமாக ஓடுகிறது. அவர்களை மாதிரி அனுஷ்டானம் செய்யாமலேயே அவர்கள் பெயர் எனும் ”சைக்கிள் கைப்பிடியை” கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பேசாமல் அமர்ந்திருக்கிறோம். தானாகவே சைக்கிள் ஓடுவது போல் நாம் நமது முன்னோர்கள் செய்த பலனால் ”பாஸ்” செய்து விடுகிறோம்.
நம் முன்னோர்களுக்கும் நமக்கும் அப்படி என்ன வித்யாசம்?அவர்கள் காலை 4 மணிக்கு ப்ரம்ம முகூர்த் தத்தில் எழுந்து குளித்து விட்டு அனுஷ்டானங்கள், பூஜைகள் செய்தவர்கள். நாம் சூரிய உதயத்திற்கு அப்புறம் ரெண்டு மூணு மணி கழித்து எழுந்து அனுஷ்டானம் செய்யாதவர்கள்.
அவர்கள் காலத்தில் சந்தியாவந்தனம் செய்யாதவனை தேடி கண்டுபிடிக்கவேண்டும். இப்போது பண்ணுவனைத் தேடி கண்டு பிடிக்க வேண்டி இருக்கிறது.
விடி காலையிலும் , சாயங்காலத்திலும் அப்போதெல்லாம் ஆற்றங்கரை, குளக்கரையில் படித்துறையில் ஸந்த்யாவந்தன கும்பல் இருக்கும். இப்போது காலையிலும் சாயந்திரமும் ”காபி ஹோட்டல் க்ளப்’, வேறுவித ”க்ளப்” களில் தான் நம் கும்பலை காண்கிறோம்.
ஆத்மாவுக்கு உணவூட்டாமல் அனாத்மாவுக்கு படைக்கிறோம். ஆத்மாவை குற்றுயிராக்கி ஆத்ம சக்தி இழக்கிறோம்.
இதர மதத்தினர் ஒவ்வொருநாளும் குறிப்பிட்ட நேரத்திலாவது, வாரத்தில் ஒருநாளாவது இறைவனை வழி பட்டு ஈசன் பலத்தினால் உலக நியாயம் சம்பந்தமில்லாமல் ஒரு ராஜ்யத்தையே பிடுங்கிக் கொண்டு போய் விட்டார்கள்.
ஹரிஹர புக்கனின் குரு வித்யாரண்யர், சத்ரபதி சிவாஜியின் குரு சமர்த்த ராமதாசர் ஆகியோர் ஆசார சீலர்கள், அனுஷ்டான தத் பரர்கள் , அனுபூதி நிஷ்டர்கள், நம் தர்மத்தைக் குலைக்க வந்த பாழ் செய்த எதிரிகளை ஒழித்து தர்ம சாம்ராஜ்யத்தை நிலை நாட்டினவர்கள்.
முன்னோர்கள் சரீரத்தில் ஏற்படும் மலஜல சுத்திகளுக்காக மண், ஜலபாத்திரமின்றி இருந்த தில்லை. அவ்வளவு பரிசுத்தம். ஜலமல சுத்தியைக்கூட சாஸ்த்ர பிரஹாரம் செய்பவர் இப்போதில்லை. மிருகங்களாகி விட்ட நாகரீக மனிதர்கள் நாம். சௌசம் எனும் முதல் ஆசாரத்தை கோட்டை விட்டவன் செய்யும் மற்ற எந்த கர்மாநுஷ்டானமும் பயனில்லாதது. வெறும் சாம்பலில் செய்யும் ஹோமம்.
மூன்று தலைமுறைக்கு முன்னர் வேகமாக பெடலை மிதித்து அவர்கள் செலுத்தியது இன்னும் எத்தனை நாளுக்கு நாம் பெடல் செய்யாமலேயே நம் வாழ்க்கை சைக்கிள் ஓடும்?
இப்போதே சைக்கிளின் ஓட்டம் வேகம் சற்று குறைந்துவிட்டதே. மங்கி விட்டதே. ஒரு தலைமுறை முந்தி நாம் பால்யத்தில் பார்த்த பிராமண சிறுவர்கள் முகத்தில் இருந்த தேஜஸ் இப்போது பல முகங்களில் காணோமே. படிப்பு திறமையும் அப்படியே ஆகிவிட்டது.
நமக்குப் பின் வரப்போகும் தலைமுறைகள், ஈஸ்வர அனுகிரஹத்திலும், ப்ரம்ம தேஜஸிலும், உத்தம மேதையில் குறையாமலிருக்க, வாழ்வு இனி வர வர மேலும் க்ஷீணமடையாமல் இருக்க, நாமும் கட்டாயம் தர்ம சாஸ்த்ரங்கள் எனும் சைக்கிளின் கர்மாநுஷ்டானம் எனும் சக்ரம் வேகமாக ஓட ஆசரணம் எனும் பெடலை விடாமல் இப்போதிலிருந்தே அழுத்தி வேகமாக மிதிக்க வேண்டும்.” ++
கும்பகோணத்தில் 1930-40களில் மஹா பெரியவா பேசியவைகளை, வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை புத்தங்களாக்கி ஓரணாவுக்கு விற்று பரப்பி தர்மத்தை நிலைநாட்டியதற்கு உங்கள் சார்பில் என் நமஸ்காரம்.. யாரிடமாவது இது போல ஓரணா புஸ்தகங்கள் இருந்தால் எனக்கு ஸ்கேன் பண்ணி அனுப்புங்கள். அதை பதிவிடுகிறேன் . மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்குமே? என்ன சொல்கிறீர்கள் ?