BAGAVAN RAMANA MAHARISHI – J K SIVAN

பகவான் ரமண மஹரிஷி   –   நங்கநல்லூர்  J K  SIVAN
நினைத்தாலே  போதும்.
சாந்தம்மாவுக்கு  பகவான் ரமண மகரிஷி மேல் இருந்த அன்புக்கும் பாசத்துக்கும் எல்லையே கிடையாது. அதை வார்த்தைகளால் எழுதி முடிக்க முடியாது. எழுத  சரியான வார்த்தையும்  புதிதாக  எங்காவதுஇருக்கிறதா  என்று  தேடவேண்டும்.
அன்று  ஞாயிற்றுக்கிழமை. ஆஸ்ரமத்துக்கு  வழக்கத்தை விட  அதிகமாக பக்தர்களின் வருகை உள்ள தினம்.  சாந்தம்மாவுக்கு ஒத்தாசையாக பலர்  சமையல்  கட்டில்  வேலை செய்தார்கள். வருவோர்க்கெல்லாம்  மத்தியானம்  சாதம், சாம்பார், ரசம், உருளைக்கிழங்கு கறி , மோர், ஊறுகாய். குறைந்தது நூறு இலையாவது  விழும் என்று எதிர்பார்த்து தயார் செய்தார்கள். 

இலையில் எல்லோருக்கும் பரிமாறினார்கள். சாந்தம்மா எல்லோருக்கும்  ரெண்டு மூணு  உருளைக்கிழங்கு கறி  இலையில் வைத்தவள்  மஹரிஷியின் இலையில்  ரெண்டு கிழங்கு  கூடவே வைத்தாள் .  அவள் பண்ணியது   அது.  அதை அவர் அதிகம் சாப்பிட வேண்டும் என்ற ஆசையோ? அவர்  அதை கவனித்து முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். கோபமோ?   அதற்கப்புறம் பரிமாறுபவர்கள் முகத்தையே பார்க்கவில்லை.  எது வந்தாலும் போதும் வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
சாயந்திரம் விளக்கேற்றிவிட்டு  தீபாராதனை முடிந்து பஜனை கோஷ்டி ஒன்று திருப்புகழ் தேவாரங்கள் பாடியது. ‘உள்ளது நாற்பது’  பாடல்களை  ஒரு கோஷ்டி பெண்கள் பாடினார்கள்.  மகரிஷி பேசாமல் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். மாலை ஏழுமணியாகியது.  கூட்டம்  கலைந்துபோய்விட்டது. சாந்தம்மா மகரிஷியிடம் வந்தாள். அவர்  பேசாமல் பார்த்துக்கொண்டே இருந்தார்.  பேசவே இல்லை.
”ஏன் அப்பா என்னோடு இன்னிக்கு பேசவே இல்லை? கோபமா?  நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா””இன்னிக்கு நீ என்ன பண்ணினே?”“Iஎனக்கு தெரியலையேப்பா, நான் என்ன தப்பு பண்ணினேன்?””எல்லோருக்கும் பரிமாறும்போது எனக்கு மட்டும் எதுக்கு உருளைக்கிழங்கு  ரெண்டு கூடவே போட்டே?’சாந்தாம்மாவுக்கு சிரிப்பு வந்தது.  ”இது தானா?“”அதுனாலே என்ன தப்பு அப்பா. ஆசையா இருந்தது பக்தியோடு  கால் கரண்டி கூட போட்டுட்டேன்”
“ மற்றவர்களை விட  நான் அதிகமாக சாப்பிடறது எனக்கு ரொம்ப அசிங்கமா இருந்தது.  எங்கிருந்தோ வந்த நீ  என்னை கொழுக்க வைக்கணும் என்கிற திட்டத்தோடு தான் இங்கே வந்தியா?  மற்றவர்களை விட எனக்கு நீ கொஞ்சம் குறைவாகத் தானே போடணும்.  எனக்கு கொஞ்சம் கூடவே   உருளைக்கிழங்கு போட்டா  உனக்கு அதனாலே ஸ்பெஷலா  மோக்ஷம் கிட்டப்போறதா?“எனக்கு உங்க மேலே இருக்கிற அதீத அன்பு, பக்தியால் அப்படி வித்யாசமா  நடந்துண்டுட்டேன் அப்பா.  என்னை மன்னிச்சுடுங்கோ’“மற்றவர்களை   நீ என்னைவிட  அதிகமாக  நேசிப்பதன்  மூலம் நீ என்னை அதிகமா நேசிக்கலாம். புரியறதா”
சாந்தம்மா ”அதற்கப்புறம் இந்த மாதிரி தப்புகள் பண்ணாமல் ஜாக்கிரதையாக நடந்து கொண்டேன்” என்கிறாள்.பகவான்  ரொம்ப கண்டிப்பான  ஒழுக்க சீலர். எல்லோரையும்  கண்காணித்து வருபவர்.  வாயைத் திறந்து ஒன்றும் சொல்லாமலேயே  சகலமும் சரிவர நடந்தது.   ”தோ  அங்கென்  பாரா  ஹாத்” , ரெண்டு கண்கள் பல கைகள்  என்ற  தீர்மானம் அவரைப் பார்த்து தான்  பிறகு சாந்தாராமுக்கு  தோன்றியதா?  அந்த ஆஸ்ரமத்தில். ஒவ்வொரு நாளும்  ஒவ்வொரு பரிசோதனையில்  நாங்கள் தேறி ஸ்புடம் போட்டவர்களாக மாறினோம் என்று கூட சொல்லலாம்”என்கிறாள்  சாந்தம்மா .
எங்களுடைய  ”நான், எனது” என்கிற  எண்ணங்கள் அவருடைய ஆத்ம ஞான  பார்வை எனும் பாறையில் மோதி சுக்குநூறாக வெடித்து சிதறியது.  அவரோடு  பழகி  பாடம் கற்றவர்கள்  அத்தனைபேரும் பாக்கியசாலிகள்.
”பகவானை தரிசிக்க வரும் அத்தனை பேரும்  சிறந்த பக்தர்கள் என்று சொல்ல முடியாது. அத்தனை  பேரும்  அவர் அருளைப்  பெறுவார்கள் என்றும் சொல்ல முடியாது.   அவர்  எல்லோரையும்  தனது கண்களால்  அழைத்து உறவாடுபவர். அவரது ஞானத்தையும் அருளையும்  மெளனமாக  கண்கள் மூலம்  நயன தீக்ஷை யாக  வழங்குபவர்.  அவர் உடலிலிருந்து வெளி கிளம்பும்   ஆத்ம அதிர்வலைகள் அந்த ஹாலில் அமர்ந்திருக்கும் அனைவர் மேலும் பாயும். அதில்   சிலர்  உடல்கள் மட்டுமே அதை  ஏற்கும் தகுதி பெற்றவை.  மரக்கட்டை மீது மின்சார சக்தி பாயாதே . சிலருக்கு கற்பூரம் உடனே  தீபத்திலிருந்து  ஒளியைப்  பற்றிக்கொண்டு சுடர் விடுவது போல் ஏற்கனவே தங்களை தயார் படுத்திக்கொண்டு அவரை தரிசிக்க வரும் நிலையில்  நிச்சயம் நல்ல பயன், பலன்  உண்டு.  சந்தோஷமாக  ”எனக்கு என்னவோ ஒரு  இனம் புரியாத சந்தோஷம், ஆனந்தம் கிடைத்தது”என்கிறார்கள்.
 மற்றவர்களின் மேல்  பாயும் ஞானசக்தி விரயம் ஆகி மஹரிஷியின் உடலை  சக்தி இழக்க செய்யும். அதை பகவான்  தியானம், ஆத்ம  விசாரத்தால் யோகத்தால்,  மீண்டும் பாட்டரி  ரீ  சார்ஜ்   செய்து கொள்வது போல் தன்னுடைய உடலில் புதுப்பித்துக் கொள்வோம்” என்று  லக்ஷ்மண சாமி என்ற அணுக்க தொண்டர் சொன்னதை அருகிலிருந்த எல்லோரும்  ஆமோதித்தார்கள்”  என்கிறாள் சாந்தம்மா.   மஹரிஷியை தரிசிக்க  நூற்றுக்க ணக்கானோர் தினமும்   ஆஸ்ரமத்துக்கு வரத் தொடங்கி விட்டார்கள். சிலருக்கு புன்சிரிப்பு மூலம் ஞானம் வழங்கினார்.
”சுவாமி, நீங்க நாடு முழுதும் பிரயாணம் பண்ணி  இங்கே  ஆஸ்ரமத்துக்கு  வர முடியாதவர்களுக்கு  தர்சனம் கொடுப்பீர்களா?”  என்று கேட்டார் ஒரு பக்தர்.
”நான் என்ன  புதுசா எல்லோரிடத்திலும் இல்லாத ஒன்றை கொடுக்க முடியும்.  இங்கிருந்தே எல்லோரையும்  நான் தரிசனம் செய்ய முடியுமே. அருணாசலன்  அப்படித்தானே  செய்கிறான்.நினைத்தாலே போதுமே  ‘ என்ற பதில் தான் வந்தது அவரிடமிருந்து.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *