ஸ்ரீமத் பாகவதம் – 10வது காண்டம்.
இங்கேயே இப்படியே கிட
யசோதைக்கு எப்போதும் கண்ணன் நினைவே தான். பால் காய்ச்சும்போது, தயிர் கடையும்போது, வீட்டில் இதர வேலைகளை செய்யும்போது.. அதான் எப்போதுமே என்று சொல்லிவிட்டேனே.அவன் செய்யும் விஷமங்களை பாட்டாக இட்டு கட்டி பாடுவாள். அதில் மெய்ம்மறப்பாள் . இது தான் சரணாகதி. இப்படி அடுப்பில் பால் பொங்குவது சற்று மறந்து கண்ணனுக்கு பால் கொடுத்துக்கொண்டு தயிர் கடைந்தவளுக்கு அடுப்பில் பொங்கும் பால் நினைவுக்கு வந்து எழுந்து ஓடினாள். பால் குடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணனுக்கு பாதியில் அவனை தரையில் கிடத்திவிட்டு அவள் ஓடியதில் கோபம். அங்கும் இங்கும் பார்த்தவன் கண்ணில் அந்த அறையில் மேலே உறியில் தொங்கும் வெண்ணை சட்டிகள் கண்ணில் பட்டதும் வேறு ஐடியா தோன்றி மெதுவாக நடந்து அந்த உரியின்கீழே இருந்த பழைய மர உரலில் மேல் ஏறி நின்று கொண்டு கொம்பால் சட்டியை உடைத்தான். வெண்ணை அபிஷேகம் அவனுக்கு.பானை கீழே விழுந்து உடைந்த சத்தம் கேட்டு ஓடிவந்த யசோதை வெண்ணைஅபிஷேக கண்ணனையும் கீழே நொறுங்கி கிடந்த பானையும் பார்த்ததும் இனியும் இவன் விஷமத்தை பொறுக்க முடியாது என்று அவனைத் தர தர வென்று இழுத்துக் கொண்டு கொல்லையில் அந்த மர உரலயிலேயே அவனை ஒரு தாம்புக்கயிற்றால் கட்டி தண்டனைக்கொடுத்தாள் என்று அறிந்தோம் அல்லவா? இது நடந்தது ஒரு தீபாவளி அன்று.
கண்ணன் எவ்வளவு பெரிய ஜாலக்காரன், மாயாவி, நடிகன் என்பதற்கு ஒரு உதாரணம். பல கொடூர ஆயுதங்களை கொண்டவர்கள், அதீத சக்தி வாய்ந்த ராக்ஷஸர்களை எல்லாம் எந்த வித ஆயுதமும் இன்றி தனது கையாலேயே கொன்ற கிருஷ்ணன் அம்மா தான் வெண்ணெய் திருடியதை பார்த்து விட்டாள் , பானையை உடைத்ததற்கு கையும் களவுமாக பிடித்துவிட்டாள் , இனி அவள் கையில் இருக்கும் மத்து கடையும் மரக்கட்டை,கொம்பினால் சரியான அடி நமக்கு விழப்போகிறது என்று தெரிந்ததும் சக்தி இல்லாதவனாக, பயந்தவனாக அழத் தொடங்கினான். கைகளை ஆட்டி கெஞ்சியவனாக இனிமேல் விஷமம் பண்ண மாட்டேன் என்று தலை ஆட்டினான். இந்த பிரபஞ்சத்தில் பல யுகங்கள் தவமிருந்தும் அடையமுடியாத பரப்ரம்மத்தை, அம்மா யசோதா வகையாக பிடித்துவிட்டாள் . அதோடு விடவில்லை. ஒரு தாம்புக்கயிற்றை எடுத்து அவனையும் அவன் உட்கார்ந்திருந்த மர உரலோடு சேர்த்து அல்லவோ கட்டி விட்டாள்!. பிடிபடமுடியாத பரமன் பிடிபட்டான். சகல கட்டுகளையும்,பற்றுகளை, பந்தங்களையும் நாம் அறுத்தெறிய உதவுபவன் தானே கட்டுண்டான். ஆனால் அதையும் ஒரு சாதகமாகவே எடுத்துக்கொண்டு அடுத்து தான் செய்ய வேண்டிய காரியத்தை செய்ய கொல்லைப்பக்கம் உரலோடு நகர்ந்தான். அங்கே தானே பல யுகங்களாக காத்திருந்த குபேரன் புத்திரர்களை மருத மரமாக நின்றவர்களை சாப விமோசனம் பெற வைத்தான்.
ஆனால் பார்ப்பதற்கு அப்பாவி குழந்தையாக நின்றான். உலகலந்தவன் ரெண்டரை மூணு அடி உயர குழந்தையாக, கண்களில் இட்டிருந்த மை அவன் கண்ணீரால் கலைந்து கன்னங்கள் பூராக கருப்பு சாயம் பூசியது. அழுது கண் சிவந்தது. ஜலம் கண்களில் கொப்புளித்துக்கொண்டிருந்தது. தான் சிறைப்பட்டது போல் இடுப்பில் கட்டியிருந்த தாம்பு கயிற்றையும் அதோடு இணைந்திருந்த மர உரலையும் திரும்பி திரும்பி பார்த்து அம்மா அம்மா என்று தினமாக ஈனஸ்வரத்தில் முனகினான்.
”கிருஷ்ணா, உன்னை கட்டிப்போட்டது இனிமேல் நீ இப்படி வெண்ணெய் திருடக்கூடாது,உன் நண்பர்களோடு சேர்ந்து அட்டகாசம் பண்ணக்கூடாது என்பதற்காகத்தான். கொஞ்ச நேரம், சில மணிநேரங்கள் இப்படியே கட்டுண்டு இங்கேயே கிட” என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள் யசோதை. கண்ணன் அங்கேயே அப்படியே கிடைக்கவா பிறந்தவன்? கொல்லையில் மருதமரமாக பல வருஷங்கள் காத்திருக்கும் குபேர புத்திரர்களை நோக்கி நகர்ந்தான்.
மாபெரும் நடிகனின் நடிப்பில் ஒரு காட்சி இது.