கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா
கேள்வி பதில் ரத்னமாலை 246-260
246. யாரை தைரியசாலி எனலாம்?
”யாரும் பயப்படவேண்டாம், நான் இருக்கிறேன் பார்த்துக் கொள்கிறேன்” என்று முன் வருபவனை.
247. நம்மை காப்பாற்றுபவர் யார்?
பகவான் தான். வேறெவர் எல்லோரையும் காப்பாற்ற முடியும்?
248. எது அறியாமை?அஞ்ஞானம்?
ஆத்மாவை உணராமை. அதிலும் ஆத்மா நம்முள் இருக்கிறது என்று தெரியாமை.நம்முள் மட்டுமல்ல எங்கும் எதிலும் எவற்றிலும் உள்ளது என்று புரியாமை.
249. அறியாமை எங்கிருந்து உருவானது?
ஆரம்பம் முடிவு தெரியாத ஒன்று அது.
250. காயத்ரி மந்த்ரம், சூரியன், அக்னி, ஈஸ்வரன் இதில் என்ன இருக்கிறது?
சத்யம், ஞானம், சாஸ்வத நிரந்தர உண்மை.
251. யார் கடவுள்,சாஸ்வதமான,நிரந்தர உண்மை?
ஒவ்வொரு தாயும் தான் முதல் கடவுள்.
252. ஒரு குடும்பம் நலிவுற, அழிய எது காரணம்?
சுயநலமற்ற நல்லவர்கள் மனம் புண்படும்படி, ஒருவன் செய்யும் காரியங்கள்.
253. எதை எவரும் தவிர்க்கமுடியாது?
மரணத்தை.
254. பிறர் மதித்து வாழ ஒருவன் என்ன செய்யவேண்டும்?
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதில் திருப்தி அடைந்து சந்தோஷமாக இருப்பது.
255. எவன் விழிப்புள்ளவன்?
சாஸ்த்ர , வேத நீதி நூல்களைக் கற்று அவற்றின் படி நடப்பவன்.
256. எது தவறான பலனைத் தருகிறது?
கர்வம்.
257.அப்படியென்றால் நற்பயனைத் தருவது எது?
சத் சங்கம். நல்லோர் நட்பு.
258. மரணத்துக்கு சமம் எது?
முட்டாளாக இருப்பது
259. எதற்கு ஒவ்வொருவரும் பிரயாசைப்பட வேண்டும்?
கற்கவும், ஆரோக்யமாக இருக்கவும், தான தர்மங்கள் செய்யவும் ஒவ்வொருவரும் முயலவேண்டும்.
260.உலகில் வாழும் ஜீவர்களை எவனால் கட்டுப்படுத்த முடியும்?
எவன் உண்மை பேசுகிறானோ, மிருதுவாக இனிய சொற்களில் அதை எளிமையோடு கூறுகிறானோ அவனே தலைவன்.