”திருப்தியா? த்ருப்தியா?த்ருப்தியா? – நங்கநல்லூர் J K SIVAN
முன்னோர் என்று சொல்லும்போதே இப்போது இல்லாதவர்கள் என்று தானே அர்த்தம். இறந்து, உடல் எரிக்கப்பட்டோ புதைக்கப்பட்டோ போனபின் அவர்கள் இங்கே நம்மோடு இல்லை, சரி, எங்கே இருக்கிறார்கள்? அடுத்த பிறவி எடுக்க தயாராக பித்ரு லோகத்தில் கர்ம வினைகளுக்கு எம தர்பாரில் விளைவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கருட புராணம் சொல்வதை உங்களுக்கு எழுதியிருந்தேன். அப்போது அவர்களுக்கு தாக சாந்தி, பசிக்குணவு எள்ளும் தண்ணீரும் தான் என்றும் சொன்னேன். அதை மாதாமாதம், மற்றும் சில குறிப்பிட்ட நாட்களில் பித்ருக்கள் என்று அழைக்கப்படும் அவர்கள் தங்கள் பிள்ளைகள், வாரிசுகளிடமிருந்து ஆவலோடு எதிர்பார்த்து வருவார்கள், ஸ்ராத்தம் அதனால் நடத்தப்பட்டு, பிண்டங்கள் அவர்களுக்கு அளிக்கப் படுகிறது.
ராமாயணத்தில் ஒரு காட்சி இது விஷயமாக பார்ப்போமா?
அடுத்த ராஜா ராமன் என்று அறிவிக்கப்பட்டு பட்டாபிஷேக நாள் குறித்தாகிவிட்டது. குறித்தவர் பிரதம ரிஷி வசிஷ்டர். அந்நேரத்தில் கூனியின் பேச்சை கேட்டு கைகேயி தசரதரிடம் முன்பு பெற்ற வரங்களால் ராமனை மரவுறி தரித்து பதினான்கு வருஷங்கள் காட்டுக்கு வனவாசம் அனுப்புகிறாள். வனவாசம் தொடங்கியது. ராமனோடு லக்ஷ்மணனும் சீதையும் சேர்ந்து வனவாசம் அனுபவித்தார்கள். ஒரு வருஷம் ஓடியது. தண்ட காரண்ய வனம் மரங்களும் மலைகளும் நிறைந்த செழிப்பான காடு. அருகில் கங்கையைப் போல பல்குணி ஆறு ஓடிக்கொண்டிருந்தது.
காட்டில் ஒருநாள்.
காலண்டர் இல்லாத அந்த காலத்தில் எல்லோரும் வருஷம், மாசம், நாள்,திதி, நக்ஷத்ரத்தை மனதளவில் நினைவில் வைத்து வாழ்க்கை நடத்தியவர்கள். ஆகவே ராமனுக்கு அன்றைய தினம் தனது அருமைத் தந்தை தசரத மஹா ராஜா மறைந்த ஸ்ராத்த திதி நாள் என்பது சட்டென்று நினைவுக்கு வந்தது.
அதிகாலை நேரத்தில் பல்குணி நதிக்கரையிலேயே தந்தைக்குத் திதி கொடுத்துவிடலாம் என்று ராமன் எண்ணினான்.
அருகே இருந்த தம்பியிடம் “லக்ஷ்மணா, நான் காட்டை விட்டு வெளியேறக்கூடாது. ஆகவே நீ அருகில் இருக்கும் கிராமத்திற்குப் போய் அப்பா ஸ்ராத்தத்துக்குத் தேவையான தானியங்கள், பொருட்கள் தர்ப்பைகளை எடுத்துக் கொண்டு சீக்கிரம் வா” என்று கட்டளையிட்டான் ராமன்.
லக்ஷ்மணன் விரைந்தான். காட்டின் எல்லையில் ஒரு சின்ன கிராமம். அங்கே போய் ஸ்ராத்த தேவைகளுக்கு சாமான் களை சேகரிப்பதில் மும்முரமானான். அதற்குள் சீதை காட்டில் இருக்கும் பழங்களைப் பறித்து வந்தாள். ராமனோ ஆற்றில் நீராடி விட்டுத் திதி செய்வதற்காக இடத்தைச் சுத்தப்படுத்தினார். ஸ்ராத்த திதிக்கு குறிப்பிட்ட நேரம் காலம் உண்டு. பஞ்சாங்கங்களில் ஸ்ராத்த திதி எத்தனை நாழி என்று காட்டுவார்கள். அது நெருங்கி விட்டது, கிராமத்திற்கு ஸ்ராத்த சாமான்கள் வாங்கச் சென்ற லக்ஷ்மணன் இன்னும் திரும்ப வில்லையே! பித்ருக்கள் உணவிற்காகக் காத்திருப்பார்களே, என்ன செய்வது? என்ற கவலையுடன் ”சீதா இங்கேயே நீ ஆற்றங்கரையில் உட்கார்ந்திரு” என்று சொல்லிவிட்டு லக்ஷ்மணனைத் தேடி ராமன் காட்டின் எல்லைக்கு புறப்பட்டான்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. தனியாக உட்கார்ந்திருந்தாள் சீதா, கிராமத்திற்குச் சென்ற ராம லக்ஷ்மணர்கள் ரெண்டு பேருமே இன்னும் ஏன் திரும்பவில்லை? ஸ்ராத்தப் பொருள்களைக் கொண்டுவந்தால்தானே சமைக்க முடியும்? சீதா கண் கலங்கினாள். மனதில் ஒரு தீர்மானம். உடனே எழுந்து மரங்களில் தான் பறித்து வந்த பழத்தைச் சுத்தப்படுத்தினாள், அருகில் இருக்கும் தாழம்பூப் புதரிலிருந்து தாழம்பூ வைப் பறித்து இலையில் வைத்தாள்.
ஸ்ராத்த திதி காலம் முடிய வெகு சில நாழிகைகளே இருக்கிறது. அப்புறம் அசுர கணம் வந்துவிடுமே, அதற்குள் தன்னுடைய மாமனார் தசரதருக்கு பித்ரு பிண்டம் படைக்கவேண்டும். தசரத மஹாராஜா பட்டினியாக இருப்பாரே”
வேறுவழியின்றி, ஸ்ராத்த நேரம் முடிவதற்குள் இலையில் தான் பறித்து வந்த பழங்களை ஸ்ராத்த நைவேத்யமாக வைத்து தன் மாமனாரை நினைத்து மனதார பிரார்த்தனை செய்தாள்.
அப்போது ஆகாசத்தில் தசரதனின் குரல் ஒலித்தது, “சீதா, நீ படைத்த உணவை நான் ஏற்றுக்கொண்டேன். நலமுடன் வாழ்க” என்றது. சந்தோஷம் தாங்கவில்லை. ஆயினும்,
”அடடா, நான் முறையாக பித்ரு பூஜை ஸ்ராத்தமாக செய்ய இயலவில்லையே’. வணங்கவில்லையே, ஸ்ராத்த பிண்டத்தை முறைப்படி அளிக்கவில்லையே, புத்ரர்கள் ராம லக்ஷ்மணர்களும் ஸ்ராத்தத்தில் பங்கேற்க வில்லையே , எப்படி தசரதர் திருப்தியாக நான் அளித்ததை ஏற்றுக்கொண்டார்? ஒருவேளை வேறுயாரோ? தசரதர் இல்லையோ?”என்று சந்தேகம் எழுந்தது.
“சுவாமி, நன்றி, நீங்கள் யார் என்று நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்”- என்றாள் சீதை.
”சீதா, நான் தான் உன் மாமனார் தசரதன்” என்று கூறி க்ஷண காலம் தோன்றி தசரதர் அவளுக்கு ஆசிவழங்கி மறைந்தார்.
சீதைக்கு பரம சந்தோஷம். நான் கண்ட இந்த அற்புதக் காட்சியை சொன்னால் யாரும் நம்ப மாட்டார்களே, ராம லக்ஷ்மணர்கள் ஏற்பார்களா?” என்று மனதில் எண்ணம் தோன்றியது. இருந்தாலும் தான் பறித்துவந்த தாழம்பூவும், பல்குணி ஆறும், அருகில் இருக்கும் பசுவும் சாட்சி சொல்லும் என்று தனக்குள்ளேயே ஆறுதல் அடைந்தாள்..
வெகு தொலைவிலிருந்த கிராமத்தில் இருந்து ஸ்ராத்த திரவியங்கள், தானியங்கள், கனி, ஆகியற்றை ராமலக்ஷ்மணர்கள் எடுத்துக் கொண்டு திரும்பி வர கால தாமதம் ஆகிவிட்டது, சிராத்தம் செய்ய நேரம் வெகு சில நேரமே இருக்கிறது என்று ராமனுக்கு துடிப்பு.,
”இந்தா சீதா, ஸ்ராத்த காலம் முடியப்போகிறது அதற்குள் இதெல்லாம் வைத்து உடனே ஸ்ராத்தசமையல் செய். சீக்கிரம்.” என்றான் ராமன்.
சீதா தயங்கியபடியே, நடந்ததைச் சொன்னாள் .
”பாவம் தனியாக இருந்த போது பயந்து ஏதோ கனவு கண்டிருப்பாய் ” ராமன் சீதையின் சொல்லை நம்பவில்லை.
”நாதா நான் சொல்வது உண்மை என்பதற்கு இந்த பல்குணி நதி, ஒரு பசு, தாழம்பூவுமே சாக்ஷி. அவற்றை கேளுங்கள்” என்றாள் சீதை.
‘ராமன் நம்பாதபோது, நாம் அதை எதிர்த்து சொல்லக்கூடாது என்று பயந்து து பசுவும், பல்குணியும், தாழம்பூவும் எதுவுமே சொல்லவில்லை.
ஆகவே சீதை சமைத்ததும், அப்பாவுக்கு திதி கொடுக்கத் துவங்கினார் ராமன். அப்போது மீண்டும் வானில் இருந்து பித்ருக்களின் குரல் கேட்டது,
”ராமா. நிறுத்து சீதா பரிமாறிய பழங்களை நாங்கள் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டோம், திருப்தியும் அடைந்துவிட்டோம்” என்றது தந்தை தசரதனின் குரல். ராமலக்ஷ்மணன் சீதை மூவரும் குரல் வந்த திசையில் வணங்கினார்கள். மகிழ்ந்தார்கள்.
”சீதா நான் நீ சொன்னதை நம்பாமல் போனது தப்பு ” என ராமன் மிகவும் வருந்த, சீதா உண்மையை கூறாமல் இருந்த பல்குணி நதியை சபித்தாள். அவள் பசு,தாழம்பூ, ஆகியவற்றையும் சபித்தாள்.
”இனி நீ பூமிக்கு மேலே செல்லாமல், பூமிக்குக் கீழே யார் கண்ணுக்கும் தெரியாமல் ஓடுவாயாக”,
”தாழம்பூவே, இனி நீ ஈஸ்வரன் பூஜைக்குப் பயன்படாமல் போவாயாக,
” பசுவே நீ வாயைத் திறந்து உண்மையைக் கூறாததால் உன் முகத்தில் வசிக்கும் லட்சுமி தேவி பின்புறம் செல்லட்டும்” அதன் படியே ஆயின.
இன்று ஆடி அமாவாசைக்கு இது பொருத்தமான புராண கதை என்று படிக்கும்போது எனக்கு தோன்றியது. எந்த புராணம் என்று கேட்காதீர்கள். எனக்கே தெரியவில்லை. இதிலுள்ள நீதியை உணர்ந்தால் போதும் என்று மேலே தேடவில்லை.
நம் பித்ருக்களை அன்போடு அழைத்தாலே நமக்காக ஓடி வருவார்கள். அவர்களை மறக்காமல் நினைவில் வைத்திருப்பதே அவர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு …