பகவான் ரமண மஹரிஷி – நங்கநல்லூர் J.K. SIVAN
”ஜாடி கேட்டியே, இந்தா”
சாந்தம்மா பகவான் ரமண மஹரிஷியை ஒரு குருவாகவோ மஹா ஞானி யாகவோ பார்க்கவே இல்லை. அவளுக்கு அவர் அப்பா. அவ்வளவுதான். ஒருநாள் அவரிடம் சென்று ”அப்பா எனக்கு ஏதோ கனவிலே பகவான் உருவம் வந்துதுப்பா .அதுக்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டாள் .
மனதின் எண்ணங்களின் பிரதிபலிப்பு தான் நாம் விழித்துக் கொண்டிருக்கும் போது பார்ப்பதும், புரிந்து கொள்வதும், கனவில் காணும் காட்சிகளும். ரெண்டும் ஒன்றே தான். மனது விடாமல் நம்மை ஏதாவது வேலை வாங்கிக்கொண்டு தான் இருக்கும். அதன் குணம் அது. நீ எப்படி இருக்கிறாய் என்று கண்ணாடி முன்னால் நின்று கொண்டு பார்த்து தெரிந்து கொள்கிறாய். அதில் கண்டது நீ என்று நம்புகிறாய். புலன்களாலும் மனதாலும் அறியப்படுவது உண்மையே இல்லை. மனதின் வெளிப்பாடு அது. அதை நம்பினால் நீ முன்னேற முடியாது. யாருக்கு இந்த காட்சியெல்லாம், உருவமெல்லாம் தெரிகிறது என்று ஆராய்ந்து பார். கொஞ்சம் கொஞ்சமாக திரை விலகும். யார் இதற்கெல்லாம் சாக்ஷி? iஎன்று புரியும். எண்ணங்களே இல்லாத நிலை தான் உண்மையான ஆனந்த நிலை.
சாந்தம்மா மஹரிஷியுடன் பேசிக்கொண்டிருக்கும் நேரம் யாரோ ஒரு பக்தர் வந்தார். மகரிஷியை வணங்கினார்.
”சுவாமி, நான் தொலைதூரம் உள்ள ஊருக்குப் போகவேண்டும். என்னை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.. நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் மறுபடியும் இந்த ஆஸ்ரமத்துக்கு வருவேனா என்பது சந்தேகம்” என்று முடித்தார்.
பகவான் புன்சிரிப்போடு பதிலளித்தார்.
”என்னை மனதில் ஞாபகம் வைத்துக் கொள் என்கிறாயே, எனக்கு மனமே இல்லையே. மனமில்லாமல் எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வது? நீ எங்கோ போகிறாய் . உன் வேண்டுகோளை அருணாசலேஸ்வரனிடம் செலுத்தி விடுகிறேன். அவன் தானே எல்லோரையும் பார்த்துக் கொள்பவன். ஞாபகம் வைத்துக்கொள்பவன், அது அவன் வேலை”.
ஞானி ஒருவனை பக்தர்கள் சூழ்ந்து கொள்வது ஏதாவது ஒரு லாபம் கிடைக்குமா என்று தான். பாரபக்ஷமாக நடந்து கொண்டால் ஞானி எப்படி குருவாக முடியும்? பக்தர்களின் புகழில், சிஷ்ருஷையில் மயங்கும் முட்டாள் அல்ல ஞானி. அவனுக்கு தொலை தூரமோ, அருகிலோ, ரெண்டும் ஒன்று தான். எவன் தன்னைப் பூரணமாக அர்ப்பணித்து ஆத்மாவில் லயிக்கிறானோ அவனிடம் ஆனந்தத்தை காண்கிறார் குரு. அஹம்பாவம் , கர்வம், தான், என்ற எண்ணமில்லாத போ பொது தான் தன்னை அர்ப்பணிக்க முடியும். அப்படிப்பட்டவன் எங்கிருந்தாலும் அவனுக்கு குரு கடாக்ஷம் உண்டு. பகவானே அவனுக்கு துணையாக இருக்கும்போது வேறு யார் வேண்டும்? குளத்தில் பார் ஒரு தவளை வெகுகாலமாக தாமரை கோடி அருகிலேயே வாழ்கிறது. மலரின் அடியில் இருக்கிறது. வண்டு தவளையை லக்ஷியம் செய்யாமல் தாமரைப் புஷ்பத்தை தான் நாடி தேன் பெறுகிறது. தவளையிடம் என்ன பெற முடியும்?
சாந்தமாமாவுக்கு சமையல் கட்டில் தான் வேலை. அத்தனை பேருக்கும் சமைக்கும் அன்னபூரணி அவள். அவள் சமைக்கும்போது சில சமயம் மஹரிஷி அங்கே வருவார். அவள் சமைத்ததை ருசி பார்ப்பார். எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சொல்லுங்கள் என்று கேட்பாள். சொல்வார். ஒருசமயம் ” சாந்தா ,உனக்கு தெரியுமா, பெரிய மகாராஜாக்கள் அரண்மனையில் ராஜாவுக்கு சமையல் பண்ணும்போது அதை சரியாக இருக்கிறதா என்று ருசி பார்த்து சொல்வதற்காக சில அனுபவசாலிகளை வேலைக்கு வைத்திருப்பார்கள். அவர்களுக்கு நிறைய சம்பளம் அந்தஸ்து, வசதிகள் தருவார்கள். நான் உனக்கு ருசி பார்த்து சொல்கிறேனே, எனக்கு என்ன சம்பளம்?
”அப்பா, நானே ஒரு பிச்சைக்காரி, நான் உங்களுக்கு என்ன சம்பளம் தர முடியும். என் உயிரையே தருகிறேன். அது தான் என்னிடம் இருப்பது என்றாள் சாந்தம்மா” மகரிஷி அவள் தலையை அன்போடு தடவி ஆசிர்வதித்து விட்டு போய்விட்டார்.
அப்போது ஆஸ்ரமத்தில் மளிகை சாமான்கள் எல்லாம் வைக்க பெரிய ஜாடிகள் டப்பாக்கள் கிடையாது. சிறிய தகர குவளைகள், சட்டிகள் இதில் தான் வைத்திருப்பாள் சாந்தம்மா. சிலது ஒழுகும். தரை யில் வழிந்து ஓடும். அதனால் தரை வழுக்கும். எப்போ மகரிஷி வருவார் என்று தெரியாதே. வழுக்கி விழுந்து விட்டால் என்ன செய்வது? அதற்காக சாந்தாம்மா அடிக்கடி துணியால் அடிக்கடி துடைத்து, பெருக்கி சமையல் அறை தரையை ஜாக்கிரதையாக வைத்திருப்பாள். ஒருநாள் அப்படி எங்கும் பெருக்கி துடைப்பதை பார்த்த மகரிஷி. ”சாந்தா, நீ சமையல் அறையை ரொம்ப நீட்டாக வைத்திருக் கிறாய். சந்தோஷம்.
”என்ன ப்ரயோஜனம் அப்பா, நிறைய பேர் வந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள், சிலர் தரையில் எதையாவது சிந்தி, கொட்டி, மாவைக் கொட்டி, எண்ணெய் பிசுக்கு சேர்கிறது. மறுபடியும் அசுத்தமானவுடன் பெருக்கணும். துடைக்கணும். பெரிய ஜாடிகள் டப்பாக்கள் வேணும்.”
பத்து நாள் கழித்து மகரிஷி சாந்தம்மாவை அழைத்தார். ஹாலில் சிலர் மரப்பெட்டிகளை திறந்து கொண்டிருந்தார்கள். யாழில் அழகான பெரிய ஊறுகாய், எண்ணெய் நெய் , ஜாடிகள் புதுசாக இருந்தன. நீ ஜாடி கேட்டியே, இதெல்லாம் எடுத்துண்டு போ. யார் இதை அனுப்பியது? மகரிஷி எவரிடமும் இதை சொல்லவில்லை, எங்கோ ஒரு ரயில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆஸ்ரம விலாசத்துக்கு இந்த ஜாடிகள் இருந்த பெட்டிகளை யாரோ அனுப்பியிருப்பதால் வந்து சேர்ந்தது என்று சொன்னார். எந்த பக்தன் மனதில் என்ன எண்ணம் எப்படி எழுந்ததோ? பகவானுக்கு தான் வெளிச்சம்.