SUR SAGARAM – J K SIVAN

ஸூர் சாகரம் –   நங்கநல்லூர்   J K  SIVAN
ஸூர்தாஸை  தெரிந்து கொள்வோம்.
கண்ணில் பார்வை இருந்தாலும்  அவனுக்கென்று எந்த திசையிலும்  ஆதரவாக  எவரும்  இல்லை என்றால் அவன் திக்கற்றவன். அவன் கதியே இப்படி என்றால்  கண்களில் பார்வையும் இல்லை என்றால் இன்னும் எவ்வளவு துயரமான நிலை. அது தான்  ஏழை  ஸூர தாஸர் நிலை.  ஆனால் நமக்கெல்லாம் தெரிந்த ஒரு பழமொழி, ”திக்கற்றவனுக்கு தெய்வமே துணை”   ஸூர் தாஸ் விஷயத்தில் அவற்றிற்கும் திக்கு நோக்கி ஓடிவந்தான்  கண்ணன்.  என்ன காரணம்?  ஸூர் தாஸ  கண்ணனின் மேல்  வைத்திருந்த அளவற்ற  பக்தி,பாசம், நேசம்.  அக்பர் இந்தியாவை ஆண்ட காலத்தில் வாழ்ந்தவர்  ஸூர் தாஸ்.   1478ல் பிறந்தவர் என்கிறார்கள்.  எந்த ஊர்  என்ற விவரமெல்லாம் இல்லை.   1581-1585 கால கட்டத்தில் மறைந்தவராம். 

ஒருமுறை ஸ்ரீ வைஷ்ணவர், கிருஷ்ண பக்தர் ஸ்ரீ வல்லபாச்சார்யர் வ்ரஜ் கிராமம் வந்தபோது  ஸூர்தாஸ் கௌகட் என்ற ஊரில் இருப்பதை அறிகிறார்.   ஸூர்தாஸ் அருகே இருந்த  சில பக்தர்கள்,  சிஷ்யர்கள்,
”குருநாதா, ஸ்ரீ வல்லபாச்சார்யர் இங்கே வந்திருக்கிறார் ” என்கிறார்கள்.  ”அப்படியா, எவ்வளவு பெரிய மஹான் அவர், என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள். அவர் பாதத்தில் விழுந்து வணங்க வேண்டும்”..
”ஸூர்தாஸ்  , உங்கள் கிருஷ்ண பக்தி என்னை இங்கே இழுத்து வந்திருக்கிறது. வாருங்கள் உட்காருங்கள் என்று அவரை கையால் அணைத்து அமரச் செய்கிறார்  வல்லபாச்சார்யர்.
 ”சுவாமி உங்கள் வாயால் நேராக ஒரு கிருஷ்ணன் பாடல் பாடி கேட்கும் பாக்யம் எனக்கு அருளவேண்டும் ” என்று வேண்டுகிறார்.   ஸூர்தாஸ் என்னபாடினாரோ, ஆங்கிலத்தில்  எனக்கு கிடைத்தது இது.  

 சூர் தாசரைப்பற்றி  இது வரை அறியாதவர்க ளும் சரி  தெரிந்தவர்களும் சரி,   மிக ஆவலோடும்  ஆர்வமோடும்  என்னுடைய  கட்டுரைகளை படிக்கும்போது  நான் பட்ட ஸ்ரமம்  இன்ப  அனுபவமாக இனிக்கிறது. 18-20மணி நேரம் தினமும் உழைப்பவனை  இன்னும்  நேரம் கிடைக்குமா  என்று தேட வைக்கிறது. எனக்கே தெரிகிறது.  நான் நிறைய   பெரிய பெரிய  விஷயங்களை ஒரே  நேரத்தில் கையாள்கிறேன் என்று,  ஸ்ரீமத் பாகவதம், மஹா பாரதம், மகா பெரியவா,  ஸ்லோகங்கள், கருடபுராணம்,  ஸ்ரீமத் பாகவதம்,  சங்கரரின்  விவேக  சூடாமணி, ராமக்ரிஷ்ண  பரமஹம்ஸர் , ரமணர் ஆலயங்கள் பற்றிய  க்ஷேத்ர விஷயம்   என்று பல  அற்புதமான விஷயங்களில் மூழ்கி திளைக்கிறேன். உங்களோடு அனுபவிக்கிறேன். ஆனந்தமாக இருக்கிறது. இன்னும் நிறைய  கூட  பரிமாறவேண்டும் என்ற ஆசை. வயதும் நேரமும் ஒத்துழைக்கவில்லை. மனதில் கிருஷ்ணன் நிறைய  ஒத்துழைக்கிறான்.அவனைப் பாடக்கூட  வைக்கிறான்.
சூர் தாஸர்  கண்ணில்லாமலேயே கண்ணனை கண்ணார  அகத்தில் கண்டவர் அவர்.   அவர் கண்ணன் மேல்  ப்ரிஜ்பாஸி மொழியில் பாடியது   ஸுரஸாகர்  என்று ஹிந்தியில் இருக்கிறது.  கிருஷ்ண சமுத்திரம்.  எனக்கு ப்ரிஜ் பாஸி   தெரியாவிட்டால்  என்ன?  ஆங்கிலத்தில் படித்து  புரிந்துகொண்டு  தமிழில்  முடிந்தவரை எளிமையாக தருகிறேன்.
தன்னை முழுதாக  இழந்து  கிருஷ்ணனோடு  மூச்சாக கலந்தவர் ஸூர் தாசர். அதனால் தான் அவர்  சொற்களில் கிருஷ்ணனை நாம்  உணரமுடிகிறது.  பாரதியாரை, கம்பரை, தமிழிலே தானே அனுபவிக்க முடியும்.  நமக்கு  பிரிஜ் பாஸி தெரியாததால்  சூர் தாசரை நிறைய பேருக்கு அறிமுகமில்லை.   வடக்கே  சூர்தாஸ்  என்றால் சூரியன், துளசிதாஸ்  என்றால்  சந்திரன்,  வடுகன் கேசவ தாஸ்  என்றால்  நக்ஷத்திரம்  என்று  பக்தர்கள்  சொல்வார்கள்.
உண்மையான  பக்தன் மனதில்  ஊற்றாக பக்தி பெருகும்போது அதை வெளிப்படுத்த  அவனுக்கு தனியாக  ஒரு  குளுகுளு  அறை , நிறைய  பேனா, பேப்பர் வேண்டியதில்லை.  வயிறு நிறைய  ஆகாரம்  ‘தாக  சாந்தி’….. எதுவும் வேண்டாம்.  நினைத்த இடத்தில் அமர்ந்து அவன் கண்ணை மூடி வாய் திறந்தால்  மடை திறந்த வெள்ளமாக  பாடல்களும் பாசுரங்களும், பதிகங்களும் வெளிவருவதை பற்றி நாம் அறிவோம். நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள் அவை.

சூர்  தாஸ் இப்படித்தான்  ஒரு மரத்தடியில் அமர்ந்து மனதில் தோன்றிய கற்பனை வளத்தை உபயோகித்து இட்டு கட்டு பண்ணி கிருஷ்ணன் வாழ்க்கை பற்றிய  சம்பவங்களை  பாடல்களாக  பாடினார்.ஒரே ஒரு   வித்யாசம்  அவர்  கண்ணை மூடிக்கொண்டு  பாடவில்லை, கண் பார்வை பிறவியிலிருந்தே கிடையாதே.  

அவர் பாடல்களைக் கேட்டு வருவோர் போவோர் கொடுத்த ஆகாரம் தான் ஜீவனம். அருகே ஒரு பெரிய ஏரி. பிருந்தாவனம் மதுரா போவோர்  செல்லும் வழி. அங்கே வந்து மரத்தடியில் தங்கி ஓய்வெடுப்பார்கள். அவர்கள்  பேச்சுகள்  மூலம் காதில் விழுவது தான்  கிருஷ்ணனைப் பற்றிய  செயதிகள், சரித்திரம், உலக ஞானம்.

பதினாலு வயதில் ஏதோ குறி சொல்ல வந்தது. சொன்னது நடந்தது. ஊர் மக்கள் அவரை போற்றி பாதுகாத்தனர். கிருஷ்ணன் தன்னை நம்பினோரை ஏமாற்றுவானா? ஒரு வழி காட்டினான்  . ”இவன் ஒரு அதிசய பையன்” என்று  அந்த ஊரே நம்பியது.

அந்த ஊர் பஞ்சாயத்து தலைவனின் பிள்ளை  ஒரு சிறு பையன் ஒருநாள் வழி தவறி எங்கோ போய் விட்டான். பஞ்சாயத்து தலைவன்  திண்டாடுகிறான். சூர் தாஸ்   மனதில் தோன்றிய  ஏதோ ஒரு இடத்தின் பெயர் சொல்லி அங்கே போய் பார் உனக்காக அழுகிறான் என்று சொல்லி, அவன் அங்கே சென்று பார்க்க  அந்த பையன்  அழுது கொண்டு நின்றான்.   அப்புறம் என்ன  கிருஷ்ணன் அருளால்  சூர் தாஸுக்கு ஒரு கூரை போட்ட ஆஸ்ரமம் கிடைத்தது. ஊர்க்காரர்கள் ஒரு ஒற்றை கம்பி  ”டொய்ங்   டொய்ங் ”  வாத்யம் ஸுர் தாஸிடம்   கொடுத்தார்கள். அதை உபயோகித்துக் கொண்டே ஏதோ ஒரு சுருதியில் அதை சேர்த்து,   அதோடு கூடவே  பாடுவார் சூர்தாஸ். நிறைய சிஷ்ய பிள்ளைகள் சேர்ந்தார்கள். அவர்கள் தான் சூர் தாஸ் பாட பாட எழுதி வைத்தவர்கள்.  அதில் தான் நமக்கு  8000 மிஞ்சியது  என்று சொன்னேன்.  அதில்  ஒரு  நூறாவது எனக்கு  ஆங்கில அர்த்தத்துடன் கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாக உங்களுக்கு எழுதுவேன்!!எல்லாம் கிருஷ்ணன் அருள்!

இன்னும் சொல்வேன். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *