பார் போற்றும் பரமஹம்ஸர் – நங்கநல்லூர் J K SIVAN
யானைக்கதை.
ஒரு ஞாயிறு மாலை. தக்ஷிணேஸ்வரம் பவதாரிணி ஆலயத்தில் ஒரு சிறிய அறையில் ராமகிருஷ்ணர் தரையில் அமர்ந்திருக்க அவரைச் சுற்றி நிறைய பக்தர்கள். ஒரு 19வயது காலேஜ் மாணவனும் அந்த கூட்டத்தில் ஒருவன். பெரிய கண்கள்.துறுதுறுவென்று இருந்தான். பேச்சு கணீரென்ற குரலில் வெளிப்பட்டது.
உலக வாழ்க்கை பற்றியும், நாம் எப்படி வாழவேண்டும் என்றும் பரமஹம்சர் சொல்லிக்கொண்டிருந்தார்.
ப: ”யார் யார் என்னென்னவோ சொல்வார்கள் அதெல்லாம் லட்சிய படுத்த கூடாது. தெருவில் ஒரு பெரிய யானை நடந்து போகும்போது சில நாய்கள், எதிர்த்து குறைக்கும், யானை அதைப் பார்ப்பது கூட கிடையாது. தான் பாட்டுக்கு போகும். நரேந்திரா, நீ என்ன சொல்றே?”அந்த காலேஜ் மாணவனைப் பார்த்து கேட்டார் பகவான் ராமகிருஷ்ணன்.
நரேந்திரன்: ”நாய்கள் என்னைப் பார்த்து குறைத்துவிட்டு போகட்டுமே”
பரமஹம்சர் சிரித்துக்கொண்டே ”பகவான் எல்லோரிலும் இருக்கிறார். நல்லவர்களோடு மட்டும் நாம் சத்சங்கம் வைத்துக் கொள்ளவேண்டும். துர் சகவாசம் வேண்டாம். புலியிலும் பகவான் இருக்கிறான்.அதற்காக புலியை போய் கட்டிக்கொஞ்ச முடியுமா? புலியிலும் தானே கடவுள் என்று நீ சொன்னால் அதே நேரம், புலி கிட்டே போகாதே என்று சிலர் உனக்கு எச்சரிக்கை கொடுக்கிறார்களே அவர்களிலும் தானே கடவுள் இருக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும் .அவர்கள் சொல்லை இகழலாமா?
ஒரு கதை சொல்றேன் கேளுங்கோ.ஒரு காட்டிலே ஒரு ரிஷி. அவருக்கு நிறைய சிஷ்யர்கள். ”எல்லோரிலும் கடவுள் இருக்கிறார் நமஸ்காரம் பண்ணு” என்கிறார். ஒரு சிஷ்யன் காட்டில் விறகு சேகரிக்கப்போனவன் எதிரே ஒரு மதம் பிடித்த காட்டு யானை.
”யானை வருது. எதிரே கண்ணில் படாதே ஓடு ஓடு. ஓடி உயிர் தப்பித்துக் கொள் ‘ என்று அதன் மேல் இருந்த மாவுத்தன் கத்தினது அந்த சிஷ்யன் காதில் விழுந்தாலும் குரு உபதேசம் அவனை யானைக்கு முன் நமஸ்காரம் பண்ணவைத்து அடுத்த கணமே யானை அவனை தும்பிக்கையால் தூக்கி தூர எறிந்தது. அவனது அதிர்ஷ்டம் அவனைக் காலடியில் போட்டு மிதிக்கவில்லை. தூரத்தில் போய் விழுந்த அவனுக்கு எலும்புகள் முறிந்து மயங்கி விழுந்து கிடந்தான்.
அவனுக்கு சிச்ருஷை செய்தவர்கள் ” ஏண்டா மதயானை வருதுன்னு தெரிஞ்சவுடனே ஓடி இருக்கலாமே நீ” என்று கேட்டார்கள்.
”என் குரு பகவான் எந்த ரூபத்திலும் வருவார் என்று சொன்னது ஞாபகம் வந்து ஓடாமல் எதிரே வணங்கினேன் ”
”வாஸ்தவம். ஆனால் யானை மேலிருந்த ஒருவன் ”ஓடு தூரப்போ என்று சொன்னதை நீ கேட்கவில்லையே. கடவுள் அவன் ரூபத்திலும் வந்து உபதேசித்ததை ஏன் அலட்சியம் செய்து இந்த அவஸ்தையைப் பட்டாய் ” என்றார்கள் மற்றவர்கள்.