கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா
கேள்வி பதில் ரத்னமாலை 116-130
116. புத்திசாலித்தனம், அறிவு கூர்மையை யாரிடத்தில் காண முடிகிறது?
வேத சாஸ்திரங்களை நன்றாக அறிந்து புரிந்து கொண்டு அதில் கண்டபடி, சேவை புரியும் வயது முதிர்ந்த வேதியர்களிடம் அறிவு கூர்மை புத்திசாலித்தனம் இவற்றை காணலாம்..
117. யாரை முதியவர் என்கிறோம்?
வயதானால் போதாது. மரத்துக்கு கூட வயதாகிறது. தர்மத்தை நன்றாக அறிந்து அதன் சாரத்தை உணர்ந்தவர்கள் தான் முதியவர்கள்.
118. மற்றவர்களால் புகழப்பட்ட, போற்றப்பட்டவனுக்கு, எது மரணத்தை விட மோசமானது எனலாம்
எல்லோராலும் அறியப்பட்டு, பேரோடும் புகழோடும் வாழ்ந்தவர்கள் ஒரு கால கட்டத்தில் மற்றவர்களால் அறியப்படாமல் இருக்கும்போது. லக்ஷியம் செய்யப்படாத போது அந்த மனிதர்கள் மரணத்தை காட்டிலும் கொடிய வேதனையை அனுபவிக்கிறார்கள். .
119. இந்த உலகத்தில் நாம் யாரை வசதியாக வாழ்பவன் என்கிறோம்?
நமக்கு உண்மையான செல்வம் என்றால் என்ன வென்றே தெரியாத நிலையில்,கட்டு கட்டாக காந்தி காகிதம் வைத்திருப்பவனை செல்வந்தன் என போற்றுகிறோம். சரியான வேடிக்கை இது.
120. ஓஹோ, எதை செல்வம் என கருதுவது பொருத்தமாகும் ?
எதன் மூலம் ஒருவன் தனக்கும் பிறருக்கும் உபயோகமானதை அடைய முடியுமோ அதை அவன் அடைந்த போது அது அவனுக்கு செல்வம் ஆகும்.
121. எதை நாம் அவசியம் அடைய வேண்டும்?
ஏழைகளின் துயர் தீர்க்க கருணையையும் மனதில் இரக்கத்தையும் தவிர நல்லோர் சத்சங்கத்தை அவசியம் தேடவேண்டும்.
122. எவனுடைய மனத்தை மாற்றவே முடியாது ?
சந்தேகம் ஒன்றையே மனதில் நிரப்பிக் கொண்ட வனை, நன்றி உணர்ச்சி இல்லாதவனை, எப்போதும் எதிலும் குறை காண்பவனை அவ்வளவு சீக்கிரம் மாற்ற முடியாது. காலம் தான் அவனை திருத்த வேண்டும்.
123 எவரை நல்லவர்கள் என்கிறோம்?
பண்பட்ட இதயம், நல்ல குணங்கள் மட்டுமே உள்ளவர்களை.
124.அப்படியென்றால் கெட்டவர்கள் யாரப்பா, சொல்?
மோசமான குணத்தை கொண்ட மனிதனாக பிறந்த அவலமான ஜென்மங்கள்.
125.தெய்வமே யாரைத் தொழும்? பிறருக்கு உதவி செய்ய ஓடுபவரை, மனதில் அன்பும், இரக்கமும், தயாள குணமும் கொண்டவர்களை தெய்வமே தொழும். அவர்கள் தான் தெய்வத்தின் பிரதிநிதிகள்.
126. மனிதன் எதைக்கண்டு அஞ்சவேண்டும்?
உலக வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஈர்ப்பு களை அடையாளம் கண்டுகொண்டு அவற்றின் ஆதிக்கத்துக்குள் சிக்காமல் இருக்க வேண்டும். அத்தகைய ஈர்ப்புகளை கண்டு அஞ்சவேண்டும்.
127 எவனால் உலகத்தை ஆளுமை செய்ய முடியும்.?
உண்மையையே எப்போது பேசுபவன், இன் சொல்லால் அனைவரையும் கவருபவன், அடக்கம், பொறுமை, இரக்கம் கொண்ட எளிமையானவன் தான் தலைவன்.
128. எப்படி எதை காண்கிறோமோ , எதை காணவில் லையோ அதை அடையலாம்,?
நீதி, நேர்மை, நியாய த்தின் பாதையில் செல்லும்போது எதை அடையவேண்டுமோ, எது கிடைக்கவில்லையோ அதை அடையலாம்.
129 எவன் பார்வையற்றவன்?
நன்றாக கற்றறிந்தும், மன சாக்ஷியை அடகு வைத்து விட்டு தீய செயல்களில் ஈடுபடுபவன் விழி கண் குருடன்.
130. அப்படியென்றால் காதிருந்தும் கேளாதவன் யாரோ?
நல்ல விஷயங்கள் நிறைய இருந்தும் அதில் மனம் போகாமல் அவற்றை கேளாமல் தீய விஷயங்களை நாடி செல்பவன்.