பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
‘பஞ்ச ஸங்க்யோபசாரிணி’
வெள்ளிக்கிழமை ஸ்ரேஷ்டமான அம்பாளை உபாசிக்கும் நாள். அதுவும் ஆடி வெள்ளிக்கிழமை என்றால் அதன் மஹிமை சகலரும் அறிந்தது. அம்பாள் என்றால் எனக்கு காமாக்ஷி தான் நினைவுக்கு வருகிறாள். காமாக்ஷி என்றால் அவள் உருவத்தில் மஹாபெரியவா மட்டுமே கண் முன் தோன்றுகிறார். இதோ என் எதிரே படமாக நின்று அபய ஹஸ்தம் அளித்து என்னை சகல துன்பங்களிலிருந்தும் காக்கிறார். அவர் கண் ஒளி சகல தீமைகளையும் சுட்டெரிக்கிறது. இதை பக்தர்கள் அனுபவித் தவர்கள். வெளியே விவரிக்க வார்த்தைகள் எவ்வளவு தேடியும் இப்போதுவரை எனக்கு கிடைக்கவில்லையே. நான் என்ன செய்யட்டும்”
ஆடி வெள்ளிக்கிழமை ஸ்பெஷலாக ஒரு சம்பவம் சொல்கிறேன்.இதை ஏற்கனவே நானும் எழுதி இருக்கிறேன். பலர் மூலமாகவும் நீங்கள் அறிந்திருக்கலாம். இன்றைய மஹத்வத்துக்கு பொருந்திய விஷயம் அல்லவா. ஆகவே ஞாபகப் படுத்துகிறேன்.
++++
அன்றும் ஆடி வெள்ளிக்கிழமை. காஞ்சி மடத்தில் மஹா பெரியவா இருக்கிறார்.விடி காலையிலிருந்தே பிசுபிசுவென்று விடாமல் குளிர்ச்சியாக மழை தூற்றல். மனதில் பெரியவாளை தரிசிக்க போகிறோம் என்ற குளிர்ச்சியும், உடலில் மழை தூற்றல் குளிர்ச்சியும் ஒன்று சேர எண்னற்ற பக்தர்கள், ஆண்கள் சட்டையில்லாமல், வெறும் அங்கவஸ்திரத்தை இடுப்பில் பஞ்ச கச்சத்தின் மேல் சுற்றிக்கொண்டு கையில் தட்டுகள் காணிக்கைகளோடு காத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் தரிசனம், பிரசாதம், ஆசி, வழங்கிய பின் மஹா பெரியவா எழுந்து தனது அறைக்கு போகும் சமயம் ஒரு வயதான பாட்டி, ஒரு சின்ன பெண். ஓடி வருகிறார்கள். அவர்களை பார்த்ததும் முகத்தில் புன்னகை, சந்தோஷம் மஹா பெரியவாளுக்கு.
“ஓஹோ, மீனாக்ஷி பாட்டியா? என்ன அதிசயமா காலம்பறயே வந்திருக்கே? அது ஆரு, ஒம் பேத்தியா, என்ன பேரு ?”
”பெரியவா, நா எத்தனையோ வருஷமா மடத்துக்கு வந்து ஒங்கள தர்சனம் பண்ணிண்டிருக்கேன். ஆனால், என்னைப் பத்தி சொல்லிக்கலை . இப்போ சந்தர்ப்பம் வந்துருக்கு. இதோ நிக்கறாளே.. இவ எம் ஒரே பொண் வயத்துப் பேத்தி. இங்கேயே காஞ்சி புரத்தில் பொறந்தவ. ‘காமாக்ஷி’ ன்னு பேரு வெச்சுருக்கு. பன்னண்டு வருஷத்துக்கு முன்னாலே, இவளை எங்கிட்ட விட்டுட்டு என் பொண்ணு போய்ட்டா. என்னவோ வியாதி பேர் சொன்னா. மனசிலே நிக்கல. அவளுக்கு முன்னாலேயே அவ புருஷன், அதான், என் மாப்பிள, இந்த பொண்ணோட அப்பா, மாரடைப்புல போய்ச் சேர்ந்துட்டான். அப்பலேர்ந்து இவளை வெச்சுண்டு அல்லாடிண்டிருக்கேன். பள்ளிக்கூடத்துல சேத்துப் படிக்க வெச்சேன். படிப்பு ஏறலே. அஞ்சாங் கிளாஸோடு நிறுத்தியாச்சு. வயசு பதினஞ்சு ஆறது. .இவளை ஒருத்தங் கிட்ட கையப் புடுச்சு குடுத்துட்டேன்னா எங்கடமை விட்டுது”
“தினமும் நீ கார்த்தால பத்து பத்தரை மணி சுமாருக்கு சந்த்ரமௌலீஸ்வர பூஜைக்கு பாரிஜாத புஷ்பம் கொண்டு வருவே. இன்னிக்கு விடி காலம்பற வந்து நிக்கறதப் பார்த்த ஒடனேயே ஏதோ விசேஷத்தோடு தான் வந்துருக்கேங்கறத புரிஞ்சுண்டேன்.என்ன விஷயமா வந்தே?”
”இவுளுக்கு ஏத்தாப்ல ஒரு வரன் வந்திருக்கு. பையனும் இந்த ஊர் தான். பள்ளிக்கூட வாத்தியார். அறுவது ரூவா சம்பளமாம். நல்ல குடும்பம், பிக்கல் புடுங்கல் இல்லே. ரெண்டு பேர் ஜாதகமும் நன்னா பொருந்தி இருக்குனு சொல்றா.எப்படியாவது இந்த கல்யாணம் நீங்க தான் நடத்தி வெக்கணும் பெரியவா…” என்று நமஸ்கரித்தாள் மீனாக்ஷி பாட்டி.
“என்னது? கல்யாணத்த சந்நியாசி, நா நடத்தி வெக்கற தாவது… என்ன பேசறே நீ..சரி…நா என்ன பண்ணணும்னு எதிர்பாக்கறே?”
”இவ கல்யாணத்துக்காக அப்டி இப்டினு ஐயாயிரம் ரூவா சேத்து வெச்சுருக்கேன். அதுல கல்யாணத்த நடத்தி முடுச்சுடு வேன்.ஆனா, அந்த புள்ளயாண்டானோட அம்மா, “பாட்டி, நீங்க என்ன பண்ணுவேளோ, ஏது பண்ணுவேளோ.. ஒங்க பேத்தி கழுத்துல எட்டு பவுன்ல ரெட்ட வட சங்கிலி ஒண்ணு போட்டே ஆகணும்’ னு கண்டிஷனா சொல்லிப்டா.பவுன்ல நகை நட்டுன்னு என் வருமானத்துல இவுளுக்கு பெரிசா ஒண்ணும் பண்ணி வைக்க முடியலே. தலா ஒரு பவுன்ல இவ ரெண்டு கைக்கு மாத்ரம் வளையல் பண்ணி வெச்சுருக்கேன்… அதான் என்னால முடிஞ்சது. நா எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிக்கு எங்கே போவேன் ….பெரியவா நீங்கதான்…”
“ஓஹோ ரெட்ட..வட சங்கிலிய எட்டு பவுன்ல நா பண் ணிப் போடணும்கறயா, சொல்லு?”
“அபசாரம்..அபசாரம் பெரியவா, நா அப்டி சொல்ல வரலே. ஒங்களை தரிசனம் பண்றதுக்கு நித்யம் எத்தனையோ பணக்காரப் பெரிய மனுஷாள்ளாம் வராளே.. அவாள்ள யாரையாவது நீங்க கை காட்டி விட்டு இந்த எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிய பூர்த்தி பண்ணித்தரச் சொல்லக்கூடாதா?ன்னு தோணித்து.”
“தரிசனத்துக்கு வர பெரிய மனுஷாள்ட்ட நானாவது கை காட்டி விடறதாவது? அப்படியெல்லாம் கேக்கற வழக்கமில்லே. நீ வேணும்னா ஒன் சக்திக்குத் தகுந்த மாதிரி, எட்டு.. பத்து பவுன் கேக்காத எடமா பார்த் துக்கோ. அதான் நல்லது”
“பெரியவா அப்படி சொல்லப்டாது என் பிரார்த்தனை யை பெரியவா காதுலே போடணும்னு ஆசை. இப்ப பாத்திருக்கிறது ரொம்ப நல்ல எடம் பெரியவா, பையன் தங்கமான குணம், அவாத்துல ரெண்டு பொண்களுக் கும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கறச்சே எட்டெட்டு பவுன்ல ரெட்ட வடச் சங்கிலி போட்டுத்தான் அனுப்பிச் சாளாம். அதனால வர்ற மாட்டுப் பொண்ணும் ரெட்ட வடத்தோட வரணும்னு ஆசைப்படறா…
மஹா பெரியவா சில நிமிஷங்கள் கண்ணை மூடி தியானம் பண்ணிவிட்டு கருணையோடு பேச ஆரம்பித்தார், “நா ஒரு கார்யம் சொல்றேன் .. பண்றயா?”
“கண்டிப்பா பண்றேன். என்ன பண்ணணும்னு சொல்லுங்கோ” . பரபரத்தாள் பாட்டி.
“ஒம் பேத்தி காமாக்ஷி யை அழச்சிண்டு அஞ்சு நாளைக்கு காமாக்ஷியம்மன் கோயிலுக்குப் போ. ரெண்டு பேருமா சேந்து,” எட்டு பவுன்ல ரெட்ட வட சங்கிலி போட்டு கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கணும்…. நீதாண்டி அம்மா நடத்தி வைக்கணும்னு பிரார்த்திச் சுண்டு ரெண்டு பேருமா சந்நிதியை அஞ்சு பிரதட்சணம் பண்ணுங்கோ, அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்டுக் கெளம்புங்கோ. இப்டி அஞ்சு நாளக்கி பண்ணுங்கோ… ஒம் மனசுல நெனச்சிண்டி ருக்கறபடியே காமாக்ஷி நடத்தி வெப்பா” என்று சிரித்துக்கொண்டே மஹா பெரியவா அனுக்ரஹித்தார்.
“அதென்ன பெரியவா… எல்லாமே அஞ்சஞ்சா சொல்றேளே. அப்டி பண்ணா பேத்தி காமாட்சிக்கு அம்பாள் காமாக்ஷி கல்யாணத்த நடத்தி வெச்சுடுவாதானே” அஞ்ஞானத்தோடு பாட்டி கேட்டாள்.
“அஞ்சஞ்சுனு நானா சொல்லலே. அம்பாளுக்கு, ‘பஞ்ச ஸங்க்யோபசாரிணி’னு ஒரு பெருமை உண்டு.அஞ்சஞ்சா பண்ற உபசாரத்திலே சந்தோஷப்பட்டு அனுக்கிரகம் பண்றவ காமாக்ஷி அம்பாள். , அதத் தான் சொன்னேனே தவிர, வேற ஒண்ணுமில்லே” சிரித்துக்கொண்டே மஹா பெரியவா சொன்னார்.
“இத நாங்க எப்ப ஆரம்பிக்கட்டும் பெரியவா?”
“சுபஸ்ய சீக்ரஸ்ச ”ன்னு சொல்லிருக்கு. இன்னிக்கு ஆடி வெள்ளிக்கிழமை. இன்னிக்கே ஆரம்பிச்சுடேன்” என உத்தரவு கொடுத்தார்.
“சரி பெரியவா. அப்டியே பண்றேன்”
பேத்தியுடன் காமாக்ஷி அம்மன் கோயிலை நோக்கி நடந்தாள் பாட்டி. எப்போதுமே காஞ்சி காமாக்ஷி தரிசனம் கிடைக்க கூட்டத்தில் பொறுமையாக நிக்கணும். அன்று ஆடி வெள்ளி ள்ளிக்கிழமை. கேட்கவேண்டுமா? ஏகக் கூட்டம். அன்னை
காமாக்ஷி விசேஷ அலங்காரத்தில் ஜொலித்தாள். இருவரும் கண்களை மூடிப் பெரியவா சொன்னது போலவே பிரார்த்தித்துக் கொண்டனர். பேத்தியின் நக்ஷத்திரத்துக்கு ஓர் அர்ச்சனை பண்ணி பிரசாதம் வாங்கிக்கொண்டாள், பாட்டி.
“எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி’ யையே பிரார்த்தித் தபடி பாட்டியும் பேத்தியும் ஐந்து பிரதட்சணம் வந்தனர்.
ஸ்வாமிகள் சொன்னபடி அம்பாளுக்கு முன்பாக ஐந்து நமஸ்காரம் பண்ணினார்கள். பிறகு நம்பிக்கையுடன் வீடு திரும்பினர்.
மறுநாள் சனிக்கிழமை காலையில் பேத்தியை அழைத்துக்கொண்டு மீனாட்சி பாட்டி, வழக்கம் போல பாரிஜாத புஷ்பங்களை நிறைய பறித்துக் கொண்டு சங்கர மடம் வந்தாள் .ஏகக் கூட்டம். மீனாக்ஷி பாட்டி இருபது முப்பது பக்தர்களுக்குப் பின்னால் பேத்தியுடன் நின்றிருந்தாள்.
கூட்டத்தில் பாட்டிக்கு முன்னால் நின்றிருந்தவர் தனக்கு அருகிலிருந்தவரிடம் என்னவோ சொல்கிறாரே அது என்ன?.
“இன்னிக்கு அனுஷ நக்ஷத்ரம். பெரியவாளோட நக்ஷத்ர மாம். அதனால் ஸ்வாமிகள் இன்னிக்கி மௌன விரதம்.
யாரோடயும் பேசமாட்டாராம். முக தரிசனம் மட்டும் தானாம் ”
மீனாக்ஷி பாட்டிக்குக் கவலை. இன்னிக்கும் பெரியவாளைப் பாத்து எட்டு பவுன் ரெட்ட வடச் சங்கிலி யைப்பத்தி ஞாபகப்படுத்தலாம்னு நெனச்சுண் டிருந் தேனே, அது இப்ப முடியாது போலருக்கே?” கவலையில் முகம் சோர்ந்து வாடியது.கண்களில் கண்ணீர். மெதுவாக வரிசையாக நகர்ந்து பெரியவா கிட்டே வந்தார் கள். மஹா பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தனர். ஒருவித சலனமும் இல்லாமல் எதிரே மெளனமாக பரப்பிரம்மம்.
”எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி” பத்தி சட்டென்று வாய் திறந்து ஸ்வாமிகள் ஏதாவது சொல்ல மாட்டாரா” — பாட்டிக்கு ஏக்கம்.
” நகருங்கோ… நகருங்கோ… பெரியவா இன்னிக்கு மௌன விரதம். பேசமாட்டார். பின்னாலே எத்தனை பேர் காத்துண்டுருக்கா பாருங்கோ” அணுக்க தொண்டர் ஒருவர் விரட்டினார். பெரியவா தரிசனம் ஆனபின் நேராக பாட்டியும் பேத்தியும் காமாக்ஷியம்மன் கோயிலுக்கு நடந்தார்கள். பெரியவா கூறியபடி ‘பஞ்ச ஸங்க்யோபசார’த்தை அர்ப்பணித்து வீட்டுக்கு சென்றார்கள்.
அடுத்தடுத்து ஞாயிறு, திங்கள், இரு நாட்களும் மஹா ஸ்வாமிகள் மௌன விரதம் அந்த ரெண்டு நாளிலும் பெரியவாளை தரிசனம் மட்டும் செய்துவிட்டுத் திரும்பினர் பாட்டியும் பேத்தியும்.”
பெரியவா சொன்ன பிரகாரம் அஞ்சுல நாலு நாள் பூர்த்தியாயிடுத்தே, இன்னும் ஒரு நமஸ்காரம் தான் பாக்கி . அம்பாள் அனுக்ரஹம் எப்பவோ? காமாக்ஷி கண் திறந்து பார்ப்பாளா, மாட்டாளா?” பாட்டிக்கு கவலை.
செவ்வாய்க்கிழமை விடிகாலை வழக்கம் போல காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் மிகவும் கலகலப்பாக இருந்தது. ஆரணியிலிருந்து ஒரு பஜனை கோஷ்டி வந்து எங்கும் பக்திப்ரபாவம் நிரம்பி இருந்தது. மஹா பெரியவா வழக்கமான இடத்தில் உட்கார்ந்திருந்தார்.ஆஹா முகத்தில் என்ன ஒரு மஹா தேஜஸ்! தபஸ்வி இன்று மௌனம் கலைத்துவிட்டார் பக்தர்கள் எண்ணற்றவர் கூட்டம்.
வரிசையில் வந்த ஒரு நடுத்தர வயது மாமி, முகத்தில் மகிழ்ச்சி பொங்க ஸ்வாமி களுக்கு முன் வந்து நமஸ்கரித்து எழுந்தாள். அந்த அம்மா முகத்தில் அப்படி ஒரு குதூகலம். தான் கொண்டு வந்திருந்த பெரிய ரஸ்தாளி வாழைத் தார், மட்டைத் தேங்காய்கள், சாத்துக்குடி, ஆரஞ்சு, பூசணி, மொந்தன் வாழைக்காய் வகையறாக்களை ஆச்சார்யாளுக்கு முன் சமர்ப்பித்துவிட்டு, மீண்டும் ஒரு தடவை நமஸ்கரித் தாள்.
எதிரிலிருந்த பதார்த்தங்களை ஒரு தடவை பெரியவா பார்வையிட்டார். கண்களை இடுக்கிக் கொண்டு அந்த பெண்மணியை கூர்ந்து நோக்கி
” நீ நீடாமங்கலம் மிராசுதார் கணேசய்யரோட ஆம்படையா [மனைவி] அம்புஜம்தானே? ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்திருந்தே.. ஏதோ சொல்லி துக்கப்பட்டுண்டே.. இப்போ சந்தோஷமா பெரிய வாழத்தாரோட நீ வந்துருக்கறதைப் பாத்தா காமாக்ஷி கிருபையில அதெல்லாம் நிவர்த்தி ஆயிருக்கும்னு படறது. சரிதானே!”
”வாஸ்தவந்தான் பெரியவா. மூணு வருஷமா எங்க ஒரே பொண் மைதிலிய அவ புக்காத்துல தள்ளி வெச்சிருந் தா. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒங்க கிட்ட ஓடி வந்து இந்த அவலத்தைச் சொல்லி அழுதேன். நீங்கதான் இந்த ஊர் காமாக்ஷியம்மன் கோயில்ல அஞ்சு நாளக்கி, அஞ்சு பிரதட்சிணம், அஞ்சு நமஸ்காரம் பண்ணி.. அபிஷேக ஆராதனையும் பண்ணச் சொன் னேள். சிரத்தையா பூர்த்தி பண்ணிட்டுப் போனேன். என்ன ஆச்சரியம் பாருங்கோ.. பதினஞ்சு நாளக்கி முன்னாடி, ஜாம்ஷெட்பூர் டாடா ஸ்டீல்ல வேல பாக்கற எம் மாப்ள ராதாகிருஷ்ணனே திடீர்னு வந்து மைதிலிய அழைச் சிண்டு போய்ட்டார். எல்லாம் அந்த காமாக்ஷி கிருபையும், ஒங்க அனுக்கிரஹமும்தான் பெரியவா”
என்று ஆனந்தக் கண்ணீர் மல்கக் கூறினாள் அம்புஜம் மாமி.
“பேஷ்..பேஷ்.. ரொம்ப சந்தோஷம். தம்பதி க்ஷேமமா இருக்கட்டும். ஆமா… இவ்வளவு பெரிய வாழத்தார் எங்க புடிச்சே. பிரமாண்டமா இருக்கே!” என்று கேட்டுவிட்டு இடிஇடியென்று சிரித்தார்.
அம்புஜம் அம்மாள் சிரித்துக்கொண்டே, ”இது எங்க சொந்த வாழைப் படுகையில வெளஞ்சது பெரியவா. அதான் அப்டி பெரிய தாரா இருக்கு” என்று பவ்யமா பதில் சொன்னாள்.
” சரி…சரி.. ஒம் பொண்ணு, மாப்ளய திருப்பியும் அம்மா காமாக்ஷிதான் சேத்து வெச்சிருக்கா, அதனால் நீ இந்தப் பெரிய வாழத்தார எடுத்துண்டு போயி காமாக்ஷி அம்பாளுக்கு காணிக்கையா அர்ப்பணம் பண்ணிட்டு அங்க வர பக்தாளுக்கு விநியோகம் பண்ணிடு” என்று கட்டளையிட்டார்.
“இல்லே பெரியவா… இது மஹா பெரியவா சந்நிதானத்துலயே இருக்கட்டும். அம்பாளுக்கு அர்ப்பணிக்க இதே மாதிரி இன்னொரு வாழத்தார் கொண்டு வந்திருக்கேன். பெரியவா கிட்டே உத்தரவு வாங்கிண்டு அம்பாளை தரிசனம் பண்ணிட்டு பிரார்த்தனையைப் பூர்த்தி பண்ணிட்டு வந்துடறேன்” என்று நமஸ்கரித்தாள்.
“பேஷா, பிரார்த்தனையை முடிச்சுண்டு வந்து மத்யானம் நீ மடத்ல சாப்டுட்டுத்தான் ஊருக்கு திரும்பணும்.. ஞாபகம் வெச்சுக்கோ” — பெரியவா உத்தரவு கொடுத்தார்.
அன்று காமாக்ஷியம்மன் கோயிலில் அவ்வளவாகக் கூட்டமில்லை. காலை 11 மணி வழக்கத்தைவிட நேரமாகி விட்டதால் பேத்தியுடன் கோயிலை நோக்கி வேகமாக நடையைக் கட்டினாள் மீனாக்ஷி பாட்டி. கோயில் வாசலில் அர்ச்சனைத் தட்டு வியாபாரம் செய்கிற கடைக்கு முன் நின்ற பாட்டி, பேத்தியிடம் சொன்னாள்:
“அடியே காமாக்ஷி, இன்னிக்கு அஞ்சு நாள் பூர்த்தி ஆறுது. அதனால எல்லாத்தயுமே ஆச்சார்யாள் சொன்னபடி அஞ்சஞ்சா பண்நுவோம். அர்ச்சனைக்கு அஞ்சு தேங்கா, அஞ்சு வாழப்பழம், வெத்தல பாக்குனு எல்லாமே அஞ்சஞ்சா வாங்கிண்டு ஓடி வா, பார்ப்போம்’ காசை வாங்கிக்கொண்டு பாட்டி சொன்னபடியே எல்லாம் வாங்கிக்கொண்டு வந்தாள் பேத்தி. அம்பாளுக்கு அர்ச்சனை பண்ணி, கண்களில் நீர் மல்கப் பிரார்த்தித்துக் கொண்டாள்.
“அம்மா காமாக்ஷி, ஒன்னைத்தாண்டியம்மா பூர்ணமா நம்பிண்டிருக்கேன். ஒன்னையும் மஹா பெரியவாளையும் விட்டா வேற கதி நேக்கு இல்லேடிம்மா. நீதான் எப்டியாவது அந்த எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிக்கு ஏற்பாடு பண்ணித் தந்து பேத்தி கல்யாணத்தை நல்ல படியா முடிச்சு வெக்கணும்..”
பாட்டி விசும்ப, பேத்தியும் விசும்பினாள். பாட்டி முன் செல்ல பேத்தி பின்தொடர இருவரும் பிராகாரத்தை ஐந்து பிரதக்ஷணம் ஆரம்பித்தார்கள். 4 வது பிரதட்சிணம், வடக்குப் பிராகாரத்தில் வந்துகொண்டு இருக்கும்போது “
பாட்டீ…பாட்டீ….பாட்டீ…!” .பேத்தியின் உரக்க கத்தினாள். “ஏன் இப்டி கத்றே? என்ன பறி போய்டுத்து இப்போ இப்படி கத்த..” பாட்டி கோபமாக கேட்டாள்
.“ஒண்ணும் பறிபோகலே பாட்டி,ஆனால் கெடச்சிருக்கு! இப்டி ஓரமா வாயேன் காட்றேன்!” ஓரமாகப்போய் தன உள்ளங்கையை திறந்து காண்பித்தாள் பேத்தி. அதில் முகப்புடன் கூடிய அறுந்த நிலையில் ஒரு இரட்டை வட பவுன் சங்கிலி!ஏதுடி இது?” பாட்டிக்கு ஆச்சர்யம்.“நோக்குப் பின்னால குனிஞ்சுண்டே வந்துண்டிருந்தேனா..அப்போ ஓரமா கெடந்த இந்த சங்கிலி பளபளன்னு மின்னிண்டு என் கண்ல பட்டுது… அப்டியே ‘லபக்’னு எடுத்துண்டுட்டேன். யாருமே இல்லை. இது அறுந்துருக்கே பாட்டி.. பவுனா.. முலாம் பூசினதானு பாரேன்”
பாட்டி அதை கையில் வைத்து எடையைத் தோராயமாக அனுமானித்த பாட்டி, “பவுனாத்தான் இருக்கணும்னு தோண்றதுடி, காமாக்ஷி, எட்டு.. எட்டரை பவுன் இருக்கும்னு நெனக்கிறேன். பெரியவா கிருபைல காமாக்ஷியே நமக்கு அனுக்கிரகம் பண்ணியிருக்கா. சரி…சரி….வா, வெளியே போவோம், ரங்கு பத்தர் கிட்டே போய் கட்டி விவரம் எல்லாம் கேட்போம் மொதல்லே”
புடவைத் தலைப்பு நுனியில் சங்கிலியை முடிந்துகொண்டு, வேக வேகமாக வெளியேவந்தாள் பாட்டி. இந்த ஆச்சர்ய சம்பவத்தில் “பஞ்ச ஸங்க்யோபசார’த்தை 5வது ப்ரதக்ஷணத்தை ரெண்டு பேருமே மறந்து போய்விட்டார்கள். பதற்றம்.
பெரியவாளை பார்க்க மடத்துக்கு ஓடி வந்தார்கள். நல்லவேளை கூட்டமே இல்லை. பேத்தியுடன் வந்த மீனாக்ஷி பாட்டி பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தாள். பெரியவா முகத்தில் புன்னகை. பெரியவா கிட்டே 8 பவுன் சங்கிலி கிடைச்சதை சொல்லலாமா… வேண்டாமா. என பாட்டியின் மனதில் போராட்டம். பெரியவாளே பேசினார்:
“இன்னியோட நோக்கு காமாக்ஷியம்மன் கோயில்ல பஞ்ச ஸங்க்யோபசார பிரதட்சிணம் கிரமமா பூர்த்தியாகி இருக்கணுமே .முதல் வெள்ளிக்கிழமை வந்தே. ஆனா ஒம் பேத்தி கைல கெடச்ச ஒரு வஸ்துவால அது பூர்த்தியாகாம போயிடுத்து! அந்த சந்தோஷம்…. நாலு பிரதக்ஷணம் போறும் னு விட்டுட்டியா. காமாக்ஷி பூர்ணமா அனுக்ரஹம் பண்ணிப்டதா நெனச்சுண்டு வேகமா வந்துட்டே… என்ன நான் சொல்றது சரிதானே?”
மீனாக்ஷி பாட்டிக்கு அதிர்ச்சி. ஆச்சர்யம். தூக்கிவாரிப் போட்டது. மென்று விழுங்கினாள். கை கால் ஓடவில்லை. “பெரியவா என்னை தப்பா எடுத்துண்டுடப்டாது. பேத்தி கைல அது கிடச்ச ஒடனே, அம்பாளே அப்டி பிராகாரத்துல போட்டு பேத்திய எடுத்துக்கச் சொல்லியிருக்கான்னு தான் தோணித்து.. அப்படி நெனச்சுண்டுட்டேன்…. அந்த சந்தோஷத்துல இன்னொரு பிரதட்சிணம் பண்ணணும்கறதையும் மறந்து போய்ட்டேன்” . பாட்டி தயங்கித்தயங்கிச் சொன்னாள்.
“அது மட்டும் மறந்துட்டயே ஒழிய, அந்த வஸ்துவ எடுத்துண்டுபோய் காசுக்கடை ரங்கு பத்தர்ட்ட எட போடறத்துக்கோ…. அறுந்தத பத்த வக்கறத்துக்கோ மறக்கலியே நீ? அது போகட்டும்…. எட போட்டயே….சரியா எட்டு இருந்துடுத்தோல்லியோ” என முத்தாய்ப்பு வைத்தார்.
“நீங்க சொன்னதெல்லாம் சத்யம் பெரியவா” என்றாள் பாட்டி.
“நியாயமா சொல்லு, அந்த பதார்த்தம் யாருக்குச் சொந்தம்?”
“அம்பாள் காமாக்ஷிக்கு.” நீயே சொல்லு… அத ரகசியமா எடுத்து ஒம் பொடவ தலப்பிலே முடிஞ்சிக்கலாமா?”
“தப்பு…தப்புதான்! என்ன மன்னிக்கணும், தெரியாம அப்டிப் பண்ணிப்டேன்”
உடம்பு நடுங்க பாட்டி அந்த ரெட்டை வட எட்டு பவுன் சங்கிலியை எடுத்து, பெரியவா முன்னால் இருந்த பித்தளை தாம்பாளத்தில் வைத்தாள்.
அப்போது மத்தியானம் மணி இரண்டு, மீனாக்ஷி பாட்டியையும், பேத்தியையும் எதிரில் அமரச்சொன்னார் பெரியவா.,
ஆச்சர்யமாக அதே நேரம் காலையில் புறப்பட்டுச் சென்ற நீடாமங்கலம் கணேசய்யரின் தர்மபத்தினி அம்புஜம்மாள், சோகமே உருவாகத் திரும்பி வந்து மஹா பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தாள். பொலபொலவென்று கண்களில் நீர் வழிந்தது.
“அடடா…எதுக்கு நீ இப்படி கண் கலங்கறே? என்ன நடந்தது?” “வேற ஒண்ணுமில்லே பெரியவா, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒங்க உத்தரவுபடி காமாக்ஷியம்மன் கோயில்ல அஞ்சு நாள் சேவை பண்றச்சே, ”பிரிஞ்சிருக்கிற எம் பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஒண்ணா சேத்து வெச்சயானா, எங்கழுத்துல போட்டுண்ருக்கற எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிய நோக்கு அர்ப்பணம் பண்றேன்”னு அம்பாள்ட்ட மனப்பூர்வமா பிரார்த்திச்சுண்டேன். தம்பதிய ஒண்ணா சேத்து வெச்சுட்டா அம்பாள். வேண்டிண்டபடி அந்த ரெட்ட வடத்த சேத்துடலாம்னு கார்த்தால கோயிலுக்குப் போனேன். அந்த செயின் கழுத்லேர்ந்து நழுவி எங்கேயோ விழுந்துடுத்து. போன எடத்தெல்லாம் தேடிப் பார்த்துட்டேன். ஒரு எடத்லயும் கிடைக்கலே… இப்ப என்ன பண்ணுவேன் பெரியவா?” என்று புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.மஹா பெரியவா மீனாக்ஷி பாட்டியின் பக்கம் திருப்பி, அர்த்தபுஷ்டியுடன் பார்த்தார்.
பாட்டி புரிந்து கொண்டு எழுந்து பெரியவாளை நமஸ்கரித்துவிட்டு அவர் முன்னால் தாம்பாளத்தில் இருந்த ரெட்ட வட பவுன் சங்கிலியைக் கையில் எடுத்தாள்
”அம்மா அம்புஜம்… நீ தவறவிட்ட ரெட்ட வடம் இதுவா பாரு?” காட்டினாள் .கையில் வாங்கி பார்த்த அம்புஜம் .“இதேதான்….இதேதான்…..பாட்டி.. இது எப்படி இங்கே வந்தது? ஆச்சரியமா இருக்கே!” என்று வியந்தாள். நடந்த விஷயங்கள் அத்தனையையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் பாட்டி.மீனாக்ஷிப் பாட்டியை கட்டியணைத்துக் கொண்ட அம்புஜம் அம்மாள் “பாட்டி, நீங்க கவலையே படாதீங்கோ. பெரியவா முன்னாலேயே இதை தெரிவிக்கிறேன்.
”எட்டு பவுன்ல ஒங்க பேத்திக்கு புதுசா ரெட்ட வட சங்கிலி பண்ணி போட்டுக் கல்யாணம் ‘ஜாம்ஜாம்’னு நடக்கும், நா கழுத்தில போட்டுண்டிருந்த இந்த ரெட்ட வடத்தத்தான் அம்பாளுக்கு அர்ப்பணிக்கறதா வேண்டிண்டு இருக்கேன். இன்னிக்கு சாயந்தரமே ஒங்களையும், பேத்தி காமாக்ஷியையும் இந்த ஊர் நகைக் கடைக்கு அழச்சிண்டு போய், எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி ஒண்ணு வாங்கித்தரேன். அதோட கல்யாணச் செலவுக்காக ஐயாயிர ரூபாயும் தரேன்” என்று அம்புஜம் ஆறுதல் அளித்தாள்
.மஹா பெரியவா கண்மூடி காமாக்ஷியை த்யானம் பண்ணிக்கொண்டிருந்தார். கண்ணை திறந்து அவர்களை பார்த்தார்.
மீனாக்ஷி பாட்டியைப் பார்த்து,
”இன்னிக்கு நீயும் ஒம் பேத்தியும் கோயில்ல அஞ்சு பிரதட்சிணம் பண்ணலே. சாயந்தரமா போயி அஞ்சாவது பிரதட்சிணம் பண்ணி நிறைவேத்திடுங்கோ. , அஞ்சு நமஸ்காரம் பண்ணி அம்பாள பார்த்துட்டு வாங்கோ”
பிரசாதம் கொடுத்து ஆசீர்வாதம் பண்ணி எல்லோரையும் அனுப்பியது அந்த பேசும் தெய்வம்.
+++
இதைக்காட்டிலும் இன்னிக்கு ஆடி வெள்ளிக்கிழமைக்கு என்னால் உங்களுக்கு விஷய தானம் பண்ண முடியுமா சொல்லுங்கோ?”