பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
உறியடி உதாரணம்.
காஞ்சிபுரத்தில் மடத்தில் இருந்தாலும் ,கலவை யிலிருந் தாலும், வேறெங்கோ யாத்திரையில் இருந்தாலும் மஹா பெரியவா இருக்குமிடத்தில் பக்தர்கள் எப்படியோ சேர்ந்து விடுவார்கள். வெல்லம் இருக்கும் இடத்தை யாரும் எறும்புகளுக்கு சொல்லவோ ”இங்கே வெள்ளம் இருக்கிறது வாருங்கள்”என்று அழைக்க வேண்டாம். எறும்புகள் கண் இமைக்கும் நேரத்தில் தானாகவே வந்து வெல்லத்தை மொய்த்து விடும்.
ஒருநாள் ரிக்வேத கனபாடிகள் ஒருவர் தன்னுடைய ஐந்து மாணவர்களுடன் மஹா பெரியவாளை தரிசனம் பண்ண காஞ்சிபுரத்துக்கு வந்தார். தான் கற்றுக் கொடுத்த பாடங்களில் ஒரு பகுதியை அந்த மாணவர்கள் மஹா பெரியவா முன்னிலையில் சொல்லி காட்டச் சொன்னார். மாணவர்கள் அப்படியே உரக்க சொன்னார்கள். அவர்கள் உச்சரித்த ஸ்வரம், அபஸ்வரமாக இருந்தது. அத்துடன் மாணவர்களுக்கு ஸமஸ்க்ரித ஞானம் போதவில்லை. ரொம்ப குறைவாக இருந்தது. அது அவர்கள் குற்றமல்ல, வாத்யார் மேல் பிசகு இருக்கிறது. மஹா பெரியவா ளுக்கு இது புரியாதா?
கனபாடிகள் தான் கற்றுக் கொடுத்ததை மஹா பெரிய வா ரொம்ப ஆசையாக கேட்டுவிட்டார் என்று ரொம்ப திருப்தி பட்டார்.
குழந்தைகள் ஒப்பித்து முடிக்கும் வரை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார் மஹா பெரியவா. கனபாடிகளுக்கு சந்தோஷம் தலை கால் புரியவில்லை.
“ பெரியவா, குழந்தைகளுக்கு வேதம் கற்றுக் கொடுப் பது ‘ ரொம்பச் சிரமம்’ பேசாம அவர்களை இங்கிலீஷ் படிப்புக்கு அனுப்பிவிடலாம்னு தோண்றது” என்றார் கனபாடிகள்.
”கனபாடிகளே, சத்தே இப்படி வந்து உக்காருங்கோ..” பெரியவா அவரை அருகே வந்து உட்காரச் சொன்னார்.
“கனபாடிகளே, என்ன நீங்க அப்படி சொல்லிட்டீள் . உலகத்திலே எல்லாக் காரியங்களுமே பண்றது சிரமம் தான்! சமையல் செய்வது சிரமம். அடுப்பு மூட்டணும் . உலை வைக்கணும். கஞ்சி வடிக்கணும் . கறிகாய் நறுக்கணும். வேக வைக்கணும்.. துணி தோய்ப்பது சிரமம் – தோய்த்து, அலசி , பிழிந்து, உதறி உலர்த்தணும் . எல்லாமே சிரமம். வரகூர் உறியடி உற்சவம்னு கேள்விப் பட்டிருப்பேளே ?
சறுக்கு மரம் ஏறி மேலே கட்டியிருக்கும் மூட்டையை எடுக்கணும். சறுக்கு மரத்திலே கத்தாழை- விளக்கெண் ணை பூசியிருப்பா. ஒரே வழவழப்பா இருக்கும். அது மேலே ஏறவே முடியாது.. அது தவிர , பீச்சாங்குழல் மூலம் தண்ணீர் வேறே கண்ணை மறைக்க அடிப்பார்கள் ! ரொம்பச் சிரமம்.
ஆனாலும் வழுக்கு மரத்தில் ஏறி வெற்றி பெறணும்னு எக்கச் சக்கமா போட்டா போட்டி! கடைசியிலே யாரோ ஒருவர் உறியடி கம்பால் அடிச்சு பானையை உடைச்சு ஜெயிப்பார். தெரியு மோல்லியோ?
அதனாலே, நீங்க இன்னும் கொஞ்சம் பிரயாசை எடுத்து முயற்சி பண்ணினால் குழந்தைகள் நன்றாக வேதம் கற்றுக் கொள்வார்கள். வேதம் பிரும்ம வித்தை. வேதம் படிக்கக் குழந்தைகள் வருவதே அபூர்வம். இருக்கிற குழந்தைகளையும் இங்கிலிஷ் படிக்கப் போன்னு போகச் சொல்லிட்டா, எப்படி சொல்லுங்கோ?”
கனபாடிகளுக்கு நாசூக்கா, வாழைப்பழத்தில் ஊசி ஏத்தற மாதிரி தப்பு அவர் மேலே தான்; அபஸ்வரம், சமஸ்க்ரித ஞானம் போதாமல் இருப்பது அவருடைய குறை தான் என்று சொல்லாமல் சொல்லி ‘இன்னும் கொஞ்சம் பிரயாசை எடுத்துக்கோங்கோ ‘ என்று சொல்லியது கனபாடிகளுக்கும் புரிந்து விட்டது. நமஸ்காரம் பண்ணிட்டு போய்விட்டார்.
ரிக்வேத கனபாடிகளுக்கு பெரியவாளுடைய அறிவுரை உயர்ந்த தாகப் பட்டது. தன் சிரமத்தைப் பாராட்டாமல் முழு ஆர்வத்துடன் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்.
ஐந்து ஆண்டுகள் கழிந்தன. வேத ரக்ஷண நிதி டிரஸ்ட் நடத்தும் பரீட்சைக்கு ஐந்து மாணவர்களும் வந்து பரீக்ஷை கொடுத்தார்கள்.
ரிக்வேத பரீட்சையில் கனபாடல்களின் ஐந்து மாணவர் களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்கள். அதற் கான கணிசமான சம்பாவனையையும் பெற்றார்கள். ஆசிரியரின் முயற்சி வீண் போகவில்லை என்பதை சிஷ்யர்கள் நிரூபித்தார்கள்.
பெரியவாளுடைய வாக்குப் பலிதமாகாமல் போனதாக சரித்திரம் உண்டா? நமக்கு இப்படி இன்னொரு மஹா பெரியவா மறுபடியும் எப்போ கிடைப்பார்?