HARI VAMSAM – J K SIVAN

ஸ்ரீ   ஹரி வம்ச புராணம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN

2.  ஒரு நீளமான பேர் பட்டியல்..

நமது குடும்பங்களில் எதையுமே  குறைகள் இன்றி  நிறைவாக  அமைய முதலில் விக்னம் போக்கும் விநாயகரை வணங்கி ஆரம்பிக்கிறோம்.  அதே போல்தான் இந்த புராணமும்  ஹரியின் குடும்பம், வம்சம், பற்றி சொல்லும் முன்பு  முதலில் விநாயகர், அப்புறம் வேதவியாசர், நாராயணன், ஸரஸ்வதி தேவி ஆகியோரை நமஸ்கரித்து  துவங்குகிறது.

ஸ்ரீமந் நாராயணன்  பிரம்மாவை பத்மநாபனாக  படைத்து,  அவரை  பிரபஞ்ச  ஸ்ரிஷ்டி கர்த்தா வாக்கினார். ஒரு முகம் போதாது என்று நான்முகன்.  ஆனால்   ப்ரம்மா ஒரு ஆளினால் பிரபஞ்சத்தில் சகல உயிர்களையும் படைத்து வழங்க நேரம் போதவில்லை.  ஆகவே  உற்பத்தி செய்யவென்று மக்கள் தலைவன், ப்ரஜாபதி  என்ற  அடையாளம் கொண்ட ஒரு சிலரை  சிருஷ்டிக்கு நியமித்தார்.  இந்த ப்ரஜாபதியை   சப்த ரிஷிகளிடமிருந்து உருவாக்கினார்.  சப்த ரிஷிகள்  யார் யார்  தெரியுமா? அத்ரி, பாரத்வாஜர்,  ஜமதக்னி, கௌதமர், காசியபர், வசிஷ்டர், விஸ்வாமித்ரர்.  இவர்களில் முதன்மையானவர்  வசிஷ்டர்,   அவரைத் தான்  ப்ரம்மா  முதலில் செலெக்ட் பண்ணினார்.  வசிஷ்டரின் இன்னொரு பெயர்  ஆபவர்.   ரிஷிகளுக்கு   அஷ்ட மா சித்திகள்  கை  வந்த கலை .   தானே  ஆணாகவும் பெண்ணாகவும் உடலைப் பிரித்துக் கொள்ளும் சக்தி உண்டு.  அப்படி   வசிஷ்ட ர் மூலம்  தோன்றிய  ஆண்  உருவம்  தான்  ப்ரஜாபதி ஸ்வயம்பு மனு . வசிஷ்டரின் உடலின் பெண்ணுருவம்  சதரூபி.  இவர்கள் மூலம்  ஆண்  பெண்ணாக  பல  ஜீவன்கள் பசுக்கள்,குதிரைகள் எல்லாம் தோன்றின.  ஸ்வயம்பு என்றால் தானாகவே என்று  அர்த்தம்.

 மனு என்பது  ஒரு பதவி.  இந்திர பதவி கொண்டவனை இந்திரன் என்று சொல்கிறோம் அது போல.   மனு என்பது ஏதோ ஒரு மனிதனின் பெயர் அல்ல.  உலகத் தில்  மக்கள் தோன்ற ஆதி காரணம் இந்த ஸ்வயம்பு மனு தான்.  காளைகள், ஆண்  குதிரைகள் , ஆண் யானைகள் , கலை மான்கள்  என்று பல ரகமான  ஆண்  பெண்  ஜீவன்கள் உற்பத்தியாயின. ஒவ்வொரு ஜோடியும்  சேர்ந்து வம்ச வ்ரித்தியாகி பல்லுயிர்கள் தோன்ற, ப்ரம்மாவின் வேலை சற்று குறைந்தது.

ப்ரஜாபதி ஆபவா எனும்  ஸ்வயம்பு மனு  சதரூபி  தம்பதி  மூலம் எண்ணற்ற உயிர்கள்  தோன்றின.  ஸ்வயம்பு மனுவிடமிருந்து 14 மனுக்கள்  தோன்றி னார்கள். அவர்கள் யார் தெரியுமா? இவர்களே  மனித வர்க்கத்தின்  ஆதி காரணம்.  1.ஸ்வயம்பு மனு, 2. ஸ்வாரோசிஸ  மனு , 3. அவுத்தமி மனு, 4.  தாமஸ  மனு  5. ரைவத மனு.  6.சாக்ஷ மனு.   மனுக்கள்  ஆளும் காலம்  ‘அந்தரம்’ எனப்படுவது.  உத்தேசமாக  71 யுகங்கள் கொண்டது ஒரு  மன்வந்தரம்.   மனு+அந்தரம்  மன்வந்தரம்.  

இப்போது நடப்பது கலியுகத்தில் 7 வது  வைவஸ்த மனு வின்  ஆட்சி.   ஆகவே  தான் நாம்  சங்கல்பம் செய்யும் போது  வைவஸ்த மன்வந்தரம்  என்று சொல்கிறோம். இன்னும்  7  மனுக்கள் இருக்கிறார்கள்,  அவர்களது மன்வந்தரங்கள் இருக்கிறது.
. சூர்யா ஸ்வாவர்ணி மனு,    சாவர்ணி  மனு,  தர்ம சாவர்ணி  மனு, , தக்ஷ சாவர்ணி  மனு, .  ருத்ர சாவர்ணிமனு, பிரம சாவர்ணி மனு , .ரௌச்ய மனு ,. பௌத்திய  மனு.  

பல கோடி வருஷங்கள் இப்படிப்பட்ட  மன்வந்தரங்கள் நீடிக்கப் போகிறது. நாம்  எங்கே  எந்த ரூபத்தில் அப்போது இருப்போமோ? யார் கண்டது?

இப்படி  உருவாகிய  பிரஜைகளில் சிலது நிர்  குண  ஸ்வரூபம்,, அவற்றை  சுத்த ப்ரம்மம்,சுத்த சைதன்யம்  என்பார்கள் . . அவை ப்ரக்ரிதி எனப்படும் இயற்கை யானது.
குணங்களோடு  உருவானவை  மூன்று குணங்களை கொண்ட பிரஜைகள்.  சத்வ, ரஜோ, தாமச குணங்களை கொண்டவை.  இந்த கலவை சபல ப்ரம்மம்,  மாய அவச்சின்ன சைதன்யம்  எனப்படும்.  

சத்வ குணம் கொண்டவர்கள்  ஞான சுகத்தை அனுபவிப்பவர்கள்.  ரஜோ குணம்  ராக த்வேஷத்தை   கொண்டது.   தமோ குணம் கொண்ட பிரஜைகள்  விபரீத  ஞானம் உடையவர்கள்,  நித்திரை, ஆலஸ்ய பழக்கம் கொண்டவர்கள் .  

பிரபஞ்சம் பெருகிவிட்டது.   பல வித நாமங்கள், பலவித  ரூபங்களில்  உயிரினம்  தோன்றியது.  பிரஜைகளுக்குள்   குண வித்தியாசத்தால்  வித்யாசம்  தோன்றியது.  எல்லாம்  ஈஸ்வரனின் மாயை.  

ஸ்வயம்பு மனுவின் ஒரு பிள்ளை  வீரா. அவன் தான் விராட் என அழைக்கப்படுகிறான்.  அவனுக்கு  ரெண்டு பிள்ளைகள்.  பிரியா வ்ரதன் ,  உத்தானபாதன்  என்று  அவர்களுக்கு  பெயர்.  உத்தானபாதன் தான் துருவனின் அப்பா.  

கர்தம பிரஜாபதி  என்பவர்  கர்தம ரிஷியிலிருந்து பிரிந்தவர்.   அவருக்கு  ஒரு பெண் பிறந்தாள் . அவள் பெயர் அவள் பெயர் காம்யா. அவள் ப்ரியவ்ரதனை புருஷன்காக  ஏற்றாள் .   அவர்களுக்கு நாலு பிள்ளைகள்,  சாம்ராட், குக்ஷி,  விராட், பிரபு  என்பவர்கள் அவர்கள்.

அத்ரி மஹரிஷியிலிருந்து வெளிப்பட்ட அத்ரி பிரஜாபதி  உத்தான பாதனை வளர்த்தான்.  உத்தானபாதனின் மனைவி தான் தர்மா  ரிஷியின் பெண் சுனிதா.  அவள்  மூலம் அவனுக்கு  4 பிள்ளைகள். அவர்கள்  தான்  துருவன், கீர்த்திமந்தன், சிவா , அயஸ்பதி.  

ஹரி வம்சம்  துருவன்  மூன்றாயிரம் வருஷங்கள் தவம் இருந்ததாக சொல்கிறது. அவன் தவத்தை மெச்சி முதலில் ப்ரம்மா தோன்றுகிறார். நாராயண தரிசனம் கிடைக்கிறது.

என்றும்  அழியாத  சப்த ரிஷி மண்டலத்தில் அவன்  துருவ நக்ஷத்திரம்  ஆனவன். அவனை  நமது சயன்ஸ் புஸ்தகம் வட துருவம் என்று சொல்கிறது.  சப்த ரிஷி மண்டலம் தான் URSA MAJOR.

துருவனுக்கு ரெண்டு பிள்ளைகள். ஷிஷ்டி,  பாவ்யா  என பெயர் கொண்டவர்கள். துருவனின் மனைவி  ஷம்பூ.  ஷிஷ்டிக்கு 5 பிள்ளைகள்,   அவர்கள் தான்  நாம் மந்திரங்களில் சொல்லும்  ரிபு, ரிபுஞ்சயன், புண்யன், வ்ரிக்லன், வ்ரிகதேஜன் .   இவர்களுக்கு தாய், அதாவது  ஷிஷ்டியின்  மனைவி சுசயா.

ரிபுவின் மனைவி  ப்ருஹதி  அவள் மகன் தான் சாக்ஷுஷன்.  அவர்களுக்கு ஒரு மகன் மனு,  அவன்  மனைவி புஷ்கரிணி . மகள் விரணா.

அடுத்த  சில  ஹரி வம்ச   ஒன்பது பிள்ளைகள் தான்   ஊரு, புரு, ஷதத்யும்னன், தபஸ்வி, சத்யவான், கவி, அக்னிஷ்துதன், அதிராத்ரன் , சுத்யும்னன்.10வது பிள்ளை அபிமன்யு. (அர்ஜுனன் பிள்ளை இல்லை இவன்)

ஊரு  அக்னியின்  பெண், அக்னேயி க்கு  ஆறு பிள்ளைகள்,  அவர்கள் பெயர்கள்  அங்கன், சுமனன் , க்யாதி,  க்ரது அங்கிரசன், கயன்.

இன்னும்  ஒரு வரி இப்படிப்பட்ட பெயர்களை எழுதி னால் எனக்கு உங்களிடமிருந்து  எதிர்ப்பு தோன்றிவிடும் என்று எனக்குள் ஒரு பக்ஷி சொல்கிறதால் இத்துடன் இன்றைக்கு நிறுத்திக் கொள்கிறேன்.

ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.  நம் வம்சத்தில் குப்பன்,கண்ணன், கோபாலன், ராமன்,கிட்டு பார்கவி என்று எத்தனையோ பேர்கள் இருக்கும்போது நமக்கு முன்னோர்கள் இவர்களுக்கு இப்படி பெயர்கள் இருக்கக் கூடாதா?  நம் வம்சத்திலே கோடிக்கணக்கான பெயர் கள் உண்டே.

டெலிபோன் டைரக்டரியில் புரட்டி பார்த்திருக்கி றீர்களா?     க்ரிஷ்ணமுர்த்தியிலேயே  பல நூறுகள் ஆயிரம் பேர்.   சென்னையில்  ஒரு வருஷத்தில்  டெலி போன் இருக்கும் கிருஷ்ணமூர்த்திகளே இவ்வளவு என்றால்  இந்தியா முழுதும் எத்தனை?  , டெலிபோன் இல்லாத கிருஷ்ண மூர்த்திகள் எத்தனையோ கோடி  இருக்க மாட்டார்களா?

மற்றொரு அதி முக்ய விஷயம் … இந்த தொடரின் பெயர் என்ன?  ”ஹரி வம்சம்” இல்லையா?   எல்லாமே, எல்லோருமே  ஹரியிடமிருந்து தோன்றியவர்கள் . அந்த வம்சம் எவ்வளவு பெரிது,?    எத்தனை யுகங்கள் கல்பங் களை, மன்வந்தரங்களை தாண்டியது?  நான் சொல்லி யது கொஞ்சூண்டு பெயர்கள் தான் இல்லையா?

நமக்கு ஒரு சில நல்ல,  கெட்ட,   காந்திகளை தான் தெரியும், தெரியாத காந்திகளை யார் பட்டியலிட முடியும் ??

 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *