கருடபுராணம் – நங்கநல்லூர் J K SIVAN
கருடபுராணத்தை வீட்டிலே படிக்கலாமா? கெடுதலா? என்றெல்லாம் கேள்விகள் எழும்புகிறது. காரணம் என்ன தெரியுமா? அது ரொம்ப பயமுறுத்துகிறது. தப்பு செய்ய பயப்படுவதில்லை, தண்டனையை பற்றி சொன்னால் பயம் உடம்பை வியர்க்க வைக்கிறது. அது நமது ஸ்வபாவம். கருட புராணம் ஸ்ரீமந் நாராயணனால் கருடனுக்கு சொல்லப்பட்டது. அதை கருடன் ரிஷிகளுக்குச் சொல்லி நமக்கு தெரியவந்தது. ஆகவே தப்பு செய்யாமல் இருக்க முடியுமா என்று முதலில் யோசிப்போம்.
ரிஷிகள் அடிக்கடி சென்று மற்ற ரிஷிகளை சேர்ந்து பலவிதமான யாகங்கள் நடத்துவது, சந்தித்து விவாதம் செயது விஷயங்களை பரிமாறிக் கொள்ளும் வனம் நைமிசாரண்யம். அங்கே ஒருநாள் சௌனகர் மற்றும் சில முனிவர்கள் சுத மஹரிஷியை சந்திக்கிறார்கள்.
”குருநாதா, பல விஷயங்களை உபதேசம் செய்தீர்கள். எம தர்மன் ஆட்சி, நீதி பரிபாலனம் பற்றி சொல்லுங் கள். மாறிவரும் உலகம், அதில் உண்டாகும் சுக துக்கங்கள், அவற்றிலிருந்து விடுதலை பற்றி எல்லாம் சொல்லவேண்டும்” என்று கேட்கிறார்கள்.
”ரொம்ப அருமையான ஒரு கேள்வி கேட்டீர்கள். எமதர்மன் நல்லதும் செய்கிறான். இரக்கமில்லாமல் தண்டனையும் தருபவன். அவரவர் செய்வினை பற்றி அவை அமைகிறது. அவன் நல்லது செய்வதை எவரும் நினைவில் கொள்வதில்லை, தண்டனை தருபவன், கொடியவன், இரக்கமில்லாதவன் என்ற பட்டம் தான் அவன் பெறுகிறான். எமன் எமலோகம், எமதூதர்கள், நரகம் என்ற பயம் மட்டும் எல்லோர் மனத்திலும் பதி கிறது” என்று சிரித்தார் சுத மகரிஷி.
ஒருவிஷயம் தெரியுமா உங்களுக்கு, நீங்கள் கேட்ட இதே கேள்வியை உங்களுக்கு முன் கருடன் ஒருநாள் ஸ்ரீமந் நாராயணனை கேட்டான். கருடன் கேட்டறிந்த விஷயம் தான் அவன் மூலம் கேட்டு அறிந்த நானும் உங்களுக்கு சொல்கிறேன்.”
இப்படி தான் கருட புராணத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தி ரெண்டு மூன்று பதிவுகள் ஆகிவிட்டது. மேலே தொடர்வோம்.
”கருடா, இன்னும் சொல்கிறேன் கேள் என்று பரமாத்மா ஸ்ரீமந் நாராயணன் தொடர்ந்தார்:
எவன் ஒருவன் நம்பிக்கை, அன்பு, இவற்றை கொன்று, குடும்பத்துக்கே துரோகம் செயகிறானோ அவன் தனியாக வாத்து ஒன்றாக உணவுக்கு அலைவான். தாய் தந்தை, குரு, உடன் பிறந்த சகோதர சகோதரிகளுடனும் எதிர்த்து சண்டை போடுகிறவன் உருவமெடுக்காமல் கருவிலேயே சிதைவான். ஆயிரம் முறை இப்படி துடிப்பான். கணவனை துறந்து பிரானுடன் செல்பவள் பல்லி , பெண் பாம்பு, பெண் நரியாக பிறப்பாள் . வம்சத்தை தொலைப்பவன் ஓநாயாக, முள்ளம்பன்றியாக பிறக்கிறான். பெரிய மனுஷியாக ஆகாத பெண்ணை கடத்தி செல்பவன் காட்டில் பாம்பாக அலைவான். பாலைவனத்தில் பேயாக சுற்றுவான். நண்பனின் மனைவியை கடத்தியவன் அடுத்த ஜென்மத்தில் பொதிசுமக்கும் கழுதை. பாபங்களை கூசாமல் செய்பவன் சேற்றில் உழலும் பன்றியாவான். இறந்தவனுக்கு படைக்கும் 11ம் நாள் உணவை தின்பவன் சொறிநாயாக தெருவில் அலைவான். தங்கத்தை, ஆபரணத்தை திருடுபவன் புழுவாகிறான். நண்பன், பிராமணனின் சொத்தை ஏமாற்றி அனுபவிப்பவன் ஏழேழு ஜென்மங்கள் தேளாக பிறப்பான்.
கோவில்சொத்து , பிராமணர்களின் உடமைகளை திருடியவன் ஆக்ரமித்து அனுபவிப்பவன், குடும்பத்தோடு ஆறு ஜன்மங்கள் கண்டால் கொல்லப்படும் விஷப்பூச்சிகளாக பிறப்பான். பிறர் சொத்துக்கு ஆசைப்படுபவன் தொடர்ந்து பல ஜென்மங்கள் குருடனாகவே பிறந்து பிச்சை எடுத்து உழல்வான். அநியாயமாக பிறர் சொத்தை அபகரிப்பவன் மலப்புழுவாக அறுபதினாயிரம் ஜென்மங்களில் அவதிப்படுவான். திருடுபவன் நொண்டி நாயாக நடக்கமுடியாமல் அடிபடுபவன்.
எல்லோருக்கும் உதவுபவன் லக்ஷம் பசு தானம் செய்த பலனைப் பெறுகிறான்.
(ஸ்ரீமந் நாராயணன் எத்தனையோ இன்னும் சில பாபங்களையும் அதற்கான தண்டனைகளையும் சொல்கிறார். கால நிலையை உத்தேசித்து அவற்றை எழுதவில்லை. எழுத முடியாதபடி இருக்கிறது. அதெல்லாம் எழுதினால் பலரின் கோபத்துக்கு ஆளாகும் பாபம் செய்தவனாகிவிடுவேன். நாராயணா, கருடா என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் காலம் வேறு, நான் வாழும் கலிகாலம் ரொம்ப ரொம்ப வேறு. உங்கள் காலத்தில் முகநூல், வாட்ஸாப்ப் எல்லாம் கிடையாது. இப்போது அப்படியில்லை. எழுதிய உடனேயே எழுதிய என் ‘கை மேல் பலன்’ கிடைக்கும்.)
”கருடா, இன்னும் சொல்கிறேன் கேள்: நான் சொன்னதெல்லாம் தான் கர்மாவின் பலன்கள். அதை புரிந்த ஜீவன் உடலில் இருக்கும்போது மட்டும் அல்ல அப்புறமும் கூட அதன் பலனை அனுபவிக்க வேண்டும். நரகத்தில் பலன்களை கட்டாயம் அனுபத்து கர்மாவை தீர்க்க வேண்டுமே. எத்தனையோ லக்ஷக்கணக்கான மிருகங்கள், பக்ஷிகள் ஊர்வன போன்ற ஜந்துக் கள் உருவங்களில் பிறவி எடுத்து அதனதன் கர்ம பலனை அனுபவிக்கவேண்டி இருக்கும். கடைசியில் தான் ஒரு ஜீவனுக்கு மனித பிறவி கிடைக்கிறது. (ஆஹா நாம் எத்தனை பிறவிகள் எடுத்து இதை எழுதும், படிக்கும், கேட்கும் பாக்யம் அடைந்த மனிதர்கள். நாம் உண்மையில் புனிதர்கள். இனியாவது எந்த சின்ன தப்பும் பண்ணாமல் நம்மை காப்பாற்றிக் கொள்ளவேண்டாமா?. இனி தண்டனை இல்லை என்பதில்லை, பாபங்கள் நாம் செய்வதற்கென்றே கண்ணெதிரில் காத்திருக்கிறது.ரொம்ப ஜாக்கிர தையாக அவற்றிலிருந்து தப்பி நம்மை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் மேலே சொன்ன ஜென்மங்கள் எடுத்து செய்த தப்பு தண்டாவுக்கான தண்டனைகள் மீண்டும் சுழற்சியாக அனுபவிக்க வேண்டுமே. நாம் மறந்தாலும் சித்ரகுப்தன் விடாமல் கவனித்து நோட்புஸ்தகத்தில் எழுதி வைத்து விடுகிறான். எமதூதர்களை சரியான அட்ரசுக்கு தக்க நேரத்தில் அனுப்பி நம்மை பிடித்துக் கொண்டு போகிறான்
தான, தர்மம் நிறைய செய்யவேண்டும். எல்லோ ருக்கும் ஏதாவது ஒரு உதவி செய்யவேண்டும். அது எத்தனையோ தண்டனைகளை தவிர்க்கும். ஏழ்மையில் தான் பாபங்கள் அதிகம் செய்யப்படுகிறது. மனச் சாக்ஷிமறுக்கப்படுகிறது. நரகம் காத்திருக்கிறது. எத்தனை யுகமானாலும் கர்மாவிலிருந்து தப்பவே முடியாது. நமக்கு தான் உடல் கிடையாதே. அதை எரித்து விடுகிறார்களே, புதைத்து விடுகிறார்களே, அப்புறம் எப்படி நரக வேதனை,தண்டனை எல்லாம்? என்று கேட்பவர்களுக்கு ஒரு வார்த்தை.
இந்த உடல் போய்விட்டதால் கதை முடிவதில்லை. அப்புறம் நமக்குள்ளே இருக்கும் ஒரு கட்டை விரல் அளவு ஸூக்ஷ்ம உடல் இறந்த உடலை விட்டு பிடித்துக் கொண்டு போக ப்படுகிறது. அதற்கு தான் அத்தனை தண்டனையும். அந்த வேதனையை கட்டைவிரல் அளவு ஜீவன் தாங்கி ஆகத்தான் வேண்டும். எம தூதர்களிடம் மாட்டிக்கொள்வது அது தான்.