AADI PURAM – J K SIVAN

பெரியாழ்வார் புத்ரி    –     நங்கநல்லூர் J K  SIVAN 

ஆடிப்பூரம் நல்ல நாள்  இன்று.  அம்பாளுக்கு  உகந்த  நாள். அம்பாள்  ஒரு  சக்தி தேவியாக  பூமியில் அவதரித்த நாள். சைவர்கள்  உமா தேவி  தோன்றிய நாள்  என்றும்  வைணவர்கள்  பூமாதேவியே ஆண்டாளாக  அவதரத்த  திருநாள்  என்று  கொண்டாடுகிறார்கள்.  பக்தர்களின் மகிழ்ச்சி தான் முக்கியம். ஆண்டாள் பிரபலமானவள். ஒவ்வொரு வீட்டிலும் நினைவில் இருப்பவள்.  

பல  நூறு வருஷங்களுக்கு முன்  ஒரு நாள்  தென் கோடியில்   வில்லிபுத்தூர்  என்கிற  கிராமத்தில்  ஒரு நந்தவனம்  அதோ தெரிகிறது பாருங்கள். 

 சுற்றுமுற்றும் யாரும் இல்லாத  தனித்த  நந்தவனம்  நாலாபக்கமும் முள் வேலி  போட்டு  அதில் அழகாக மலர் செடிகள், கொடிகள்,  துளசியும்  பச்சை பசேல் என்றும் வண்ணவண்ணமாகவும் கண்ணைப் பறிக்கிறது. இதை அமைத்தவர்  விஷ்ணு சித்தர்  என்கிற முதிய விஷ்ணு பக்தர்.

சதா சர்வகாலமும்  விஷ்ணுவையே சித்தத்தில் கொண்டதால் அவரை எல்லோரும் விஷ்ணு சித்தர்  என்று தான்  அறிவார்கள்.  அந்த  நந்தவன பிரதேசத் தின் மத்தியில் ஒரு சிறிய  ஓலை வேய்ந்த  குடில் தான் அவரது  ஆஸ்ரமம்.

 மஹா விஷ்ணுவான ஸ்ரீமந் நாராயணனைப் போற்றி பாடி  வழிபாட்டு வாழ்ந்து வரும் விஷ்ணு சித்தர்  தினமும் விடிகாலை  அந்த நந்தவனத்தில் தான் வளர்த்த  மலர்களை,  துளசி தளங்களை  பறித்து  விஷ்ணுமேல்  ஸ்தோத்திரங்கள் சொல்லிக்கொண்டே    மாலையாக கட்டி  அந்த மாலையை  அருகே  உள்ள  பெருமாள் ஆலயத்தில்  குடிகொண்டிருந்த  வட பத்ர சாயிக்கு. ரங்க மன்னாருக்கு,   அணிவித்து  மகிழ்வது  அன்றாட  வழக்கம்.  

அன்று ஆடி மாதம்  பூரா நக்ஷத்திரம்.  காலையில்  என்றுமில்லாமல்  சற்று பிசு பிசு என்று குளிர்ந்த காற்றோடு மெல்லிய மழைத்தூறல்.  உடல் நனையாத  ஈரம்..இதமாக இருந்தது.    வழக்கம்போல்   தோளில்  பூக்குடலையை மாட்டிக்கொண்டு  குடிலின் கதவை  சார்த்திவிட்டு  பெரிய  நந்தவனத்துக்குள்  பெருமாள் மேல் பாடிக்கொண்டே  மலர்களையும்  துளசி தளங்க ளை பறிக்கிறார்.   

எங்கிருந்தோ ஒரு சிறிய   குழந்தையின் அழுகுரல்.. கண்ணுக்கெட்டிய  தூரத்தில் எவரும் இல்லாத  அந்த பிரதேசத்தில் எப்படி அதிகாலை ஒரு குழந்தையின் குரல். ஒருவேளை எனக்கு பிரமையோ  என்று சற்று யோசித்து அங்குமிங்கும்  பார்க்கிறார். நடக்கிறார்.  அவருடைய  துளசி வனப்  பகுதியில் இருந்தல்லவோ சப்தம் வருகிறது.  ஆச்சர்யரமாக  அங்கே  சென்று தேடுகிறார் விஷ்ணு சித்தர். 

துளசி தலங்களுக்கு இடையே மெது மெத்தென்று துளஸீ மேல் படுத்துக்கொண்டு ஒரு அழகிய சிறு பெண் குழந்தை அவரைப் பார்த்தது அழுகையை நிறுத்தி விட்டு சிரிக்கிறது.
ஆஹா  யார்  இந்த குழந்தை?  தெய்வீகமாக இருக்கி றாளே இந்த குழந்தை. யார் வீட்டு குழந்தை?. எப்படி இங்கே வந்து கிடக்கிறாள்?. யாராக இருந்தாலும் வந்து கேட்கும் வரை இவளைக்  கொடுக்கப்போவதில்லை. இனி இவள் என்னவள்.  

அவளைத் தாயாக  வளர்த்து, தமிழ் அறிவித்து,  பாசுரங் கள் கற்பித்து,எழுதவும் படிக்கவும் சொல்லிக் கொடுத்து தந்தையை மிஞ்சிய  ‘தனயள்”  ஆகிவிட்டாள் . அவளுக்கு விஷ்ணு சித்தர்  இட்ட பெயர்  கோதை. கோதை என்றால் பூமி தானமாக கொடுத்தவள் என்று ஒரு அர்த்தம்.  அவள் வளர்ந்தாள் . விஷ்ணு சித்தை  ஆனாள்.   

யாருக்கு சொந்தமோ அவர்கள் கேட்டால் கொடுக்கி றேன் என்று தானே அவளை எடுத்து விஷ்ணு சித்தர் வளர்த்தார். தக்க நேரத்தில் ஆண்டவனே  ”இவள் என்னை சேர்ந்தவள் இவளை என்னிடம் கொண்டு வா” என்று ஸ்ரீ ரங்கத்திலிருந்து கட்டளையிட்டான்.  ஆண்டவன் கேட்டால் மறுப்பு ஏது ? ஆண்டானை  ஆண்டாள் அடைந்தாள், திருப் பாவையாக  நம்மிடம் மனதில் என்றும் நிற்கிறாள்.  வளர்த்த அந்த விஷ்ணு சித்தர்  என்னும்  வைணவ சிகாமணி  விஷ்ணு சித்த ஆழ்வாரை ”பெரிய ஆழ்வார்” ஆக்கி விட்டாள் . அவளால்  ஆழ்வார்  மன்னாரின் மாமனார் ஆகி விட்டார்  என்பது  நாம் எல்லோரும் அறிந்த விஷயம்.  இன்று  ஆண்டாளை நினைத்து வணங்குவோம். மார்கழி முழுக்க வழக்கம்போலவே   அவளையே பற்றி எழுதுவேன்..

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *