SRIMAD BAGAVATHAM 10TH CANTO. J K SIVAN

ஸ்ரீமத்  பாகவதம் – 10வது காண்டம் –
 நங்கநல்லூர்  J K  SIVAN 

காற்றாக வந்து மூச்சுக்  காற்றை விட்டவன்

”சுவாமி, கிருஷ்ணன் எப்படி  சகடாசுரன் தன்னைக் கொல்ல வந்திருக்கிறான் என்று கிருஷ்ணன் சிறு குழந்தையாக இருந்தபோதே உணர்ந்தான் என்று கேட்கும்போது  என்னால்  நம்ப முடியவில்லையே. எப்படி  சின்னஞ்சிறு சிசு அவ்வளவு பெரிய ராக்ஷஸனை எதிர்கொண்டு கொல்ல  முடிந்தது…?

”அப்பா, பரீக்ஷித்,   நீ  கேட்பது சாதாரண மனிதர்கள் யோசித்து கேட்பது தான்.  உன்னையும் என்னையும் போல  கிருஷ்ணன் ஒரு சாதாரண மனிதனாக இருந்தால் அது பொருந்தும்.  கிருஷ்ணன் உருவத்தில் தான் சிசு. ஸ்ரீமந்  நாராயணன் யசோதை வீட்டில் வளர்ந்ததே  அவன் அவதார நோக்கமான  ராக்ஷஸர் களை  பூண்டோடு அழிக்க தானே.  அவன் கவனம் எப்போதும் ராக்ஷஸர்கள் எங்கே இருக்கிறார்கள், என்ன நினைக்கிறார்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்று அறிவதிலேயே முக்கியமாக இருந்ததால் சகடா சூரனை  கிருஷ்ணன் எதிர்பார்த்து காத்திருந்து அவன் அருகில் வந்ததும் கொன்றான். அப்படித்தானே பிறந்த குழந்தையாக இருந்தும் ராக்ஷஸி பூதனையாய்   கிருஷ்ணன் வீடு தேடி வந்தபோது, அவள் போட்ட திட்டத்தோடு ஒத்துழைத்தே அவளைக்  கொன்றான். மற்றவர்கள் இதை அறியமுடியாது”.  

”பரீக்ஷித் ,  இதோ இன்னொரு  சம்பவம் உனக்காக காத்திருக்கிறது. அதன் விவரம் சொல்கிறேன் கேள்: 

”அப்போது கார்காலம்,  மழையும் குளிர் காற்றும் அதிகம்  வ்ரஜபூமி மக்களால்  எதிர்பார்க்கப்பட்டு அதற்கு தக்கவாறு வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்.  ஒருநாள்  யசோதை  குழந்தை கிருஷ்ணனை மடியில் அமர்த்திக் கொண்டு  அவனோடு விளையாடிக் கொண்டிருந்தாள்.  திடீரென்று  யசோதைக்கு  ஒரு  சந்தேகம் மனதில் தோன்றியது.

 ” ஏன்  திடீரென்று குழந்தை கிருஷ்ணன்  இவ்வளவு
 கனமாக பூமியையே நான் மடியில் சுமந்திருப்பது போல   தாங்கமுடியாத படி எடை கூடியவனாக  என்  மடியில் இருக்கிறான்.  சற்று நேரம் முன்பு அவன் அவ்வளவு கனமாக இல்லையே.  வழக்கம் போல் தானே  இருந்தான்…. ஒருவேளை என் எண்ணம் தப்போ??’

என சம்சயித்தாள்  யசோதை கோகுலத்தில்  நந்தகோபன்  அரண்மனையில் வாசல் கூடத்தில் அமர்ந்தபடி.. குழந்தை கண்ணனை மெதுவாக  மாடியிலிருந்து தரையில்  அமரச் செய்தாள். 

கம்சனின்  ராக்ஷஸர்களில் ஒருவன்  த்ருணாவர்த்தன். அவன் மார்தட்டி  கம்சனிடம் ஜம்பம் பேசிவிட்டு இதோ வந்திருக்கிறான்.

”நீங்கள் பயப்படவோ கவலைப்படவோ  இனி தேவையில்லை. இதோ  நான் பொறுப்பேற்றுக் கொண்டு கோகுலம் செல்கிறேன். அந்த கிருஷ்ணன் உயிரை  வாங்கிவிட்டு தான் மறுவேலை. முடிந்தால் அவனை உயிரோடு கடத்திக் கொண்டு வந்து உங்கள் முன்னால் அவனைக் கொல்கிறேன்”

 கோகுலம் வந்ததும் த்ரிணாவர்த்தன்  யோசித் தான்

”.அதோ  கோகுலம் அரண்மனையில் வாசலில் எனக்கு சௌகர்யமாக  கிருஷ்ணன் எனும் சிறு பயல் அமர்ந்திருக்கிறான். அவனை எப்படி கடத்துகிறேன்  பார்”

என்று  முடிவெடுத்து த்ரீனாவர்த்தன்  ஒரு சுழல்காற்றாக உருவெடுத்தான்.   அப்படியே  கீழே உட்கார்ந்திருந்த  கிருஷ்ணன் குழந்தையை காற்றில் அடித்து தூக்கிக் கொண்டு விட்டான். அவன் கிருஷ்ணனைக் கடத்திய தை எவரும் பார்க்கமுடியாதபடி  தூசி புழுதி எல்லாவற் றையும் வாரி கலக்கி காற்றில் நிரப்பி விட்டான்  த்ரிணாவர்த்தன். யசோதை புழுதியை கிளப்பி விட்ட பெருங் காற்றிலே கண்ணை துணியால் மூடிக் கொண்டாள். எதிரே கிருஷ்ணன் உட்கார்ந்திருப்பது தெரியவில்லை. எவருக்குமே  கோகுலத்தில் எதிரில் இருப்பது தெரியவில்லை..பெரிய பெரிய விருக்ஷங்கள்  காற்றில் ஆடி வேரோடு சாய்ந்தன.  மரங்கள்  கிளைகளோடு உரசி பேயாட்டம் தலை விரித்தாடின.  சில உடைந்து விழுந்தன.

”எங்கே  கிருஷ்ணன்? . ஒருவேளை  இந்த  பேய்க்காற்று அவனை அடித்துத் தூக்கிக்கொண்டு  போய்விட்டதா.?  எதனால் இன்று இப்படி  ஒரு பேய்த்தனமாக  சுழன்று சுழன்று காற்று பலமாக  வீசி எல்லாவற்றையும் பறக்க வைக்கிறது?

காரணம் புரியாமல் கோகுலத்தில் அனைவரும்  திகைத்தனர்.
த்ரீணாவர்த்தன் சந்தோஷப்பட்டான்.

”ஆஹா  என் திட்டம் வெற்றி பெற்றது. இந்த பயல் கிருஷ்ணனை அப்படியே தூக்கிச்சென்று கம்சன் முன் வைத்து பலி  கொடுக்கிறேன்”

என்று கிருஷ்ணனை தூக்கியவன்  பறக்க முடியாமல் திண்டாடினான்.

”இந்த சின்னப்பயல் இவ்வளவு கனமாக இருக்கிறானே!  மூச்சு திணறுகிறதே என்று சந்தேகித்தான்.  கிருஷ்ணன் சின்ன பையனாக இருந்தும் உடும்பு போல் த்ரிணாவர்த் தன் கழுத்தை இரும்புப்பிடியால்  கட்டிக்கொண்டு இறுக்கினான். கிருஷ்ணனை  உடம்பை விட்டு கீழே தள்ள எவ்வளவு முயன்றும் த்ரிணாவர்த்தனால்  முடிய வில்லை.  மேலே பறக்க முடியாமல் கீழே இறங்கிக் கொண்டிருந்தான்.  அப்படியே மாரடைத்து , மூச்சு நின்று த்ரிணாவர்த்தன்  கீழே தொப்பென்று கோகுலத் தில் நந்தகோபன் அரண்மனை வாசலில் விழுந்தபோது அவன் உடலில் உயிரில்லை.

கிருஷ்ணன் சாவதானமாக அவன் தோளை கழுத்தை விட்டு இறங்கி தவழ்ந்து வீட்டில் நுழைந்தான்.  த்ரிணா வர்த்தன் உருவாக்கிய சுழல்காற்று நின்றது. புழுதி அடங்கியது.கோபியர்கள் கிருஷ்ணனை தேடியவர்கள்  எதிரே அவன் தவழ்ந்து விளையாடுவதைக் கண்டு ஓடிச்சென்று அவனை தூக்கினார்கள் . அவன் இப்போது கனமாக இல்லை. வழக்கமான குழந்தையின் எடை யோடு இருந்தான். யசோதை அவனை வாரி அணைத்தாள்.

 யசோதைக்கு  மீண்டும் ஒரு பெரிய ஷாக்.  சற்று நேரம் முன்பு எப்படி, எதனால் கிருஷ்ணன் தூக்கமுடியாத எடையோடு இருந்தவன் மீண்டும் பழையபடி ஆகி விட்டான்? எதனால் இவ்வளவு பெரிய ராக்ஷஸன் ஒருவன் எதிரே இறந்து கிடக்கிறான்? இரண்டுக்கும் காரணம் கிருஷ்ணன் சாதாரண மானிட குழந்தை அல்ல என்று அவளுக்குத் தெரியவில்லை.  விடை தெரியாத எத்தனை வினாக்களில் அதுவும் ஒன்று… யசோதையோடு மற்ற கோபியர் கோபர்களும்

 ”பகவானே, என்னே உன்கருணை, இன்றும் இவ்வ ளவு பெரிய யாரோ ஒரு ராக்ஷஸனிட மிருந்து  கிருஷ்ணனைக் காப்பாற்றினாயே உனக்கு எப்படி நன்றி செலுத்துவது” என்று கண்ணீர் மல்க  கரம் சிரமேல்  கூப்பி வணங்கி வாழ்த்தி நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.   

சிரித்துக்கொண்டே அவர்கள் நன்றியை கிருஷ்ணன் ஏற்றுக்கொண்டதை அவர்கள் உணரவில்லை. 

நந்தகோபன் மனதில் வசுதேவர் மதுராவில் சொன்னது திரும்ப திரும்ப ஒளித்துக் கொண்டிருந்தது. 

”நந்தா, ஜாக்கிரதையாக கோகுலம் திரும்பு, அங்கே என்னவெல்லாமோ நடக்கலாம்… குழந்தைகளை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு  பார்த்துக் கொள் ”

”நந்தகோபன் ஒரு பரம யோகி. அவருக்கு ஏதோ உள்ளுணர்வு சொல்லி இருக்கிறது” என்று அவரைப்   போற்றினான் நந்தகோபன்.

 ”சுவாமி.  அடுத்து என்ன நிகழ்ந்தது என்று சொல்லுங் கள்.  எனக்கு  ஆச்சர்யம் அதிசயம்  தாங்க முடிய வில்லை. கிருஷ்ணனைப் பற்றி மேலும் மேலும் தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறது என்று சுகப்ரம்மம் காலில் விழுந்தான் பரீக்ஷித் மஹாராஜா

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *