ஸ்ரீமத் பாகவதம் – 10வது காண்டம். –
நங்கநல்லூர் J K SIVAN
அத்யாயம் 1-2.
”பரீக்ஷித் ராஜாவே, இங்கே பார் எத்தனை முனிவர் களும் உன்னோடு சேர்த்து கிருஷ்ணனைப் பற்றி அறிய ஆவலாக இதைக் கேட்கிறார்கள், மேற்கொண்டு சொல்கிறேன் கேள்” என்று தொடர்கிறார் சுகப்பிரம்ம ரிஷி.
”வசுதேவருக்கு கவலை. ”அடடா, என்னவோ மனதில் தோன்றி சொல்ல வைத்தது, சொல்லிவிட்டேனே. தேவகிக்கு பிறக்கும் குழந்தைகள் எல்லாவற்றையும் கம்சனிடம் ஒப்படைத்து அவன் அவற்றை எல்லாம் கொன்று விட நானே மஹாபாபி, காரணமாகி விட்டேனே. ஒருவேளை இதுவும் ஒரு விதத்தில் நல்லதாக இருக்குமோ? தேவகியின் உயிரை காப்பாற்ற முடியாமல் போயிருக்குமோ? என்னுள்ளே பகவானே தோன்றி, அப்படிச் சொல்ல வைத்தானோ? அப்போது தானே அவனே எட்டாவது குழந்தையாக பிறந்து கம்சனை சம்ஹாரம் செய்ய வழி இருக்கும்? குழந்தை எப்படி கம்சனை வென்று கொல்லும் ? சாதாரண குழந்தையாக இருந்தால் நினைப்பதே அபத்தம். பகவானே ஒரு நோக்கத்தோடு தானே அப்படி பிறக்கிறான். அவனுக்குத் தெரியாததா எனக்குத் தெரியப்போகிறது?” வசுதேவன் தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டான்.
முதல் பிள்ளை கீர்த்திமான் பிறந்ததும் நாமகரணம் சூட்டப்பட்டு கம்சனிடம் ஒப்படைக்கப்பட்டு மேலுலகம் சென்றான். தேவகியைப் பொறுத்தவரை பொறுத்திரு, நானே உனது எட்டாவது மகனாக பிறக்கப் போகிறேன். கம்சனைக் கொல்வேன்” என்று தைரியம் அளித்து விட்டானே. தேவர்கள் யது வம்சத்தில் வ்ருஷ்ணி குலத்தில் ஆங்காங்கே வெவ்வேறு பெயர்களோடு தோன்றினார்கள். நந்த கிராமத்தில் பிருந்தா வனத்தில் கோப கோபியராக அவதரித்தார்கள். கம்சனே முந்தைய ஜென்மத்தில் காலநேமி எனும் அசுரன். விஷ்ணுவால் கொல்லப்பட்ட்டவன்.
ஆதி சேஷன் தான் கிருஷ்ணனின் மூத்தவன் பலராமன். எல்லாமே முன்னேற்பாட்டுடன் திட்டமிட்டபடி கிருஷ்ணன் எட்டாவது குழந்தையாக வசுதேவர் தேவகிக்கு பிறந்தவன். மஹா மாயா சக்தி யோகமாயாவாக தோன்றுகிறாள். கம்சன் ஏன் தேவகியின் ஆறு பிள்ளைகளை கொன்றான் என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. கம்சன் காலநேமி என்ற ராக்ஷஸன் என்று சொன்னேனே, அவனுக்கு ஆறு பிள்ளைகள். ஹம்சன், சுவிகர்மன், க்ரதன் , தமனன் ,ரிபுர்மர்தனன், க்ரோதஹந்தன் என்று அவர்கள் பெயர்கள். இவர்களை சத் கர்பர்கள் என்பார்கள். மிகுந்த பலம் வாய்ந்த ராக்ஷஸர்கள். ஹிரண்ய கசிபுவின் பேரர்கள். இரண்யனுக்கு தெரியாமல் பேரன்கள் பிரம்மாவை வேண்டி தவமிருந்து வரம் பெற்றார்கள். ”எந்த தேவதையாலும் , யக்ஷர்களாலும், மஹாரோகர்களாலும், கந்தர்வர்கள், சித்தர், சாரணர்களாலும், மனிதனாலும் , ரிஷியாலும், எங்களுக்கு முடிவு நேரக்கூடாது. இப்படி அவர்கள் வரம்பெற்றதில் இரண்யனுக்கு கோபம். ” உங்கள் முடிவு உங்கள் தந்தையாலேயே நேரும்” என்றான். அதனால் தான் காலநேமி யான கம்சன் அவன் புத்திரர்கள் தேவகி குழந்தைகளாக பிறக்க அவர்கள் ஆறு பேரையும் பிறந்தவுடனே கொன்றான். இந்த விவரம் ஹரி வம்சத்தில் வருகிறது. இது தெரிந்த நாரதர் ஒருநாள் கம்சன் அரண்மனைக்கு சென்று உன் சகோதரி தேவ்கியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது மகனால் தான் உனக்கு மரணம் என்று சொல்லி வைத்தார். காலநேமியான கம்சன் பழைய சாபத்தால் தன் புத்ரர்களான சத் கர்பர்களையும் தேவகி குழந்தைகளாக பிறந்ததும் கொன்றான்.
கம்சனின் மாமனார் ஜராசந்தன். கம்சனின் ராக்ஷஸ நண்பர்கள், ப்ரலம்பன், பகன், சாணுரன், த்ருணா வர்த்தன் , அகாசுரன், பாணாசுரன், முரன் , முஷ்டிகன், பௌமாசூரன், அனைவருமே யதுவம்ச எதிரிகள். யது குலத்தோர் அதனால், குரு , பாஞ்சாலம், கேகயம், கோசலம், விதர்பம், விதேகம், என்று வேறு இடங்களுக்கு சென்றுவிட்டார்கள். ஏழாவது குழந்தையாக கர்ப்பத்தில் ஆதிசேஷன் தோன்றி அந்த கருவை அப்படி கோகுலத்தில் ரோஹிணியின் கருவாக மாற்றப்பட்டுவிட்டது. யோகமாயா யசோதையின் கர்ப்பத்தில் உருவாகி தேவகியின் ஏழாவது குழந்தையாகி விட்டாள். சக்தி உருவான யோகமாயாவின் மற்ற உருவங்கள் துர்கா , பத்ரகாளி, சண்டி . கம்சனை முடிக்க எட்டாவது குழந்தையாக மஹா விஷ்ணுவே க்ரிஷ்ணனாக அவதரிக்கும் நேரம் வந்து விட்டது. தேவர்கள் குதூகலித்தனர். ஒவ்வொரு குழந்தையாக பிறந்து சகோதரன் வாளுக்கு பலியாவதை எந்த தாய் பொறுத்துக் கொள்வாள்.
எட்டாவது குழந்தை தான் கதி மோக்ஷம் என்று தெரிந்தவள். பகவானே பிறக்கப் போகிறான் என்று அறிந்தவள். கவலையோடும் களிப்போடும் காத்திருந்தாள். தேவகி ஒருவள் தான் பயம் பக்தி ரெண்டும் கலந்து பகவானை அனுபவித் தவள். பக்தி நவவிதமானது. ஸ்ரவணம் , கீர்த்தனம், விஷ்ணு ஸ்மரணம், பாத சேவனம்.அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம் , ஆத்ம நிவேதனம். தேவ்கியின் பக்தி எல்லாமும் நிறையவே ஒன்றாக கலந்த வினோத பக்தி. பலராமன் கோகுலத்தில் ரோஹிணி மைந்தனாக பிறந்தான் வளர்ந்தான். கிருஷ்ணனைவிட 15 நாட்கள் மட்டுமே மூத்தவன்.