பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
இதெல்லாம் வேண்டாமே…..
மகா பெரியவா மனதுள் என்ன நினைக்கிறார் என்பது எவராலும் கண்டறியமுடியாத ஒன்று. அவர் தான் நினைப்பதைப் பக்தர்களின் மூலம் நடத்திக்கொண்டு விடுவார்” என்கிறார் அகிலா கார்த்திகேயன். நூற்றுக்கு லக்ஷம் இது வாஸ்தவம் என்பது பலரின் அனுபவ பூர்வ அபிப்ராயம்.
இந்த சிறந்த மஹா பெரியவா எழுத்தாளரை நேரில் அவர் வீட்டிலேயே பார்க்கும் ஒரு சந்தர்ப்பம் வாழ்க்கையில் எனக்கு ஒரு முறை பல வருஷங்களுக்கு முன்பு கிட்டியது எனது பாக்யம் என்று சொல்வேன். அவர் எழுதிய ஒரு கட்டுரையை இன்று படித்தேன். அதில் இருந்து சில விஷயங்களை சுருக்கி சொல்கிறேன்.
” மகாபெரியவா பீடாரோஹண மணிவிழாவை கொண்டாடவேண்டும் என்று ஒரு கால கட்டத்தில் பக்தர்கள் எண்ணம். ஆந்திர பக்தர்கள் சிலர் மணிகள் பொருந்திய தங்கத்தாலான மகுடத்தை அவருக்குச் சூட்ட வேண்டும் என விரும்பி, அதோடு மடத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதியும் திரட்டி, காஞ்சி மடத்துக்கு எடுத்துச் செல்ல முடிவெடுத் தார்கள். இதற்கு முதலில் மஹா பெரியவா அனுமதியும் ஒப்புதலும் இலலாமல் எப்படி நிறைவேற்றுவது? ஆகவே ஒருநாள் காஞ்சி மடத்துக்கு வந்தனர்.
மஹா பெரியவாளை நமஸ்கரித்துவிட்டு, தங்களது நிதி காணிக்கை குறித்து மெள்ளத் தெரிவித்தனர். உடனே பெரியவா,”வேண்டாம் பணம் வசூல் பண்றதை எல்லாம் உடனே நிறுத்திடுங்கோ!”
வார்த்தையில் கடுமைக்கு பதில் உறுதி இருந்தது. அவருக்கு தெலுங்கு தெரியுமே . அதனால் உத்தரவாகவே அது தெரிவிக்கப்பட்டது.
மடாதிபதி என்பவர், பண பலமோ ஆள்கட்டோ இல்லாமல் ஒதுங்கி நிற்கும்போதுதான், அவர் தனது தவத்தாலும் ஒழுக்கத்தாலும் சமூகத்தில் மதிப்பைப் பெறமுடியும். சந்நியாசி என்பவர், எந்த உடைமையும் இல்லாதவராக இருக்கவேண்டும்; ஊர் உறவு என்று எதுவுமற்றவர். ஜகத் குரு என்பதால் ஊர் ஊராகத் தேசாந்திரம் செல்பவர் மக்களுக்கு உபதேசம் அனுக்ரஹம் ஆசிர்வாதம் பண்ணுபவர் என்று சாஸ்திரம் சொல்கிறபடி வாழ்ந்தவர் மஹா பெரியவா.
”சாதுக்களும் சந்நியாசிகளும் தான் தர்மாச்சார்யர்களாக, செய்யவேண்டியதைச் செய்யமுடியும். அவர்களுக்கென்று ஒரு ஸ்தாபனம் இருந்தால் தான், இது சாத்தியமாகும். மடாதிபதி எனும் பொறுப்பை ஏற்பது இதற்காகத்தான். அவசியத்துக்கு அதிகமாக எங்களிடம் ஏதும் சேர்ந்துவிடவோ, இருந்துவிடவோ கூடாது. அந்தக் கட்டுப்பாடு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான், கண் குத்திப் பாம்பாகக் கணக்குகளில் கவனமாக இருக்கிறோம். மடத்தைக் கட்டி ஆளுகிற சாமர்த்தியம் இருந்தால் மட்டும் போதாது; தன்னைத்தானே கட்டி ஆளுகிற மனோபலமும் வேண்டும்! என்பார் மஹா பெரியவா. ”காஞ்சி மடம் அவசியமான செலவுகளுக்கே வழியின்றித் திண்டாடிய காலமும் உண்டு. ஆனால், போதிய அளவுக்கு திரவியங்கள் கிடைப்பதற்கு, ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் அருள் புரிந்திருக்கிறார். சில தருணங்களில், கொஞ்சம் நிறையவே பண்ணி விடுகிறபோது சுவாமி நம்மைச் சோதனை பண்ணுகிறாரோன்னு கூட எனக்கு தோணும். பணம் சேரச் சேர, ஏதாவது நற் பணிக்கு சத் காரியங்களுக்கு அந்த நிதியைக் கொடுக்கச் சொல்லிடுவேன். மீதின்னு எதுவும் மிஞ்சாமலே மடம் நடக்கிறபடி சர்வ ஜாக்கிரதையா இருந்துண்டு வரேன். இப்போ பணம், தேவைக்கு ஏத்த அளவுக்கு இருக்கு. அதை இன்னும் கூட்ட வேண்டாமேன்னு பார்க்கறேன். எத்தனை நிதி வந்தாலும், அதை உபயோகப் படுத்தறதுக்கு நல்ல காரியங்கள் நிறையவே இருக்கு. ஆனா, அதிலே மடம் நேரடியா ஈடுபட்டுச் செய்தால், சுய பாத்தியதை கொண்டாடற மாதிரியான அம்சம் வந்துடும். அதனால், தானே எல்லாத்தையும் தானே பண்ணணும்னு தலையிலே அக்ஷதையைப் போட்டுக்காமல், மத்த சத்சங்கங்கள், ஸ்தாபனங்களைக் கொண்டு அந்த நல்ல காரியங்களைச் செய்ய சொல்வது. மடம், அவர்களுக்கு அட்வைஸ் பண்றதோட தனது ஜோலியை நிறுத்திக்கணும் !” . மஹா பெரியவா சொன்னதை ஆந்திர பக்தர்கள் கவனமாகக் கேட்டு புரிந்து கொண்டார்கள். ”இன்னும் சொல்றேன் கேளுங்கோ. லக்ஷக் கணக்கில் பணம் எதுவும் வசூல் பண்ண வேண்டாம். நாளைக்கே ஏதேனும் பெரிய திட்டம் மடத்திலே செய்றதுக்குத் தீர்மானமாகும்போது, வெக்கப்படாம நானே உங்ககிட்டே கேப்பேன் . நம்ம முயற்சியை நிறுத்திட்டாரேனு நீங்க வருத்தப்பட வேண்டியதே இல்லே. உங்க மனசும் ஆர்வமும் எனக்குத் தெரியாம இல்லே. புரியறது. அதனால நிறைய ஆசீர்வாதம் பண்றேன் நல்ல காரியங்களை பண்ணிண்டு இருங்கோ.”
ஆந்திர பக்தர்கள் நெகிழ்ந்து போனார்கள்.
” இப்போதைக்கு ஏற்கெனவே வசூலித்த பணம் இருக்கே… என்ன பண்ணறது?” ஒருவர் மெதுவாக மஹா பெரியவாளிடம் கேட்டார்.
”இதுவரை எவ்ளோ வசூல் பண்ணியிருக்கேள்?” –
”அறுபதினாயிரம் ரூபாய்!”
”அறுபதுக்கு அறுபது பொருத்தமா தான் இருக்கு” என்று சொல்லிவிட்டு, குழந்தை மாதிரி சிரித்தார் பெரியவா. பீடாதிபத்ய அறுபதாம் ஆண்டு நிறைவுக்கு அறுபதாயிரமோ? ரொம்ப பேஷ். சரிதான்… பொருத்தமான கட்டத்தில்தான் பண வசூல நிறுத்தச் சொல்லி அம்பாள் உத்தரவு போட்டு உங்களை இங்கே அனுப்பியிருக்கா. வசூல் பண்ணினதை அப்படியே வெச்ச்சுக்கோங்கோ. நானே தேவைங்கிறபோது உங்ககிட்டேர்ந்து வாங்கிக்கறேன்!”
ஆந்திர பக்தர்கள் மென்று முழுங்கி மெதுவாக இன்னொரு விஷயமும் சொன்னார்கள்.
”மஹா பெரியவாளுக்கு பீடாரோஹண மணிவிழாவுக்கு தங்க மகுடம் ஒண்ணு பண்ணச்சொல்லி ரெடியாய்டுத்து. அதை பெரியவா ஏத்துக்கணும்”
”ஓஹோ” என்று ஒரு புன்னகை. ‘சரி’ என்று தலையசைத்துச் சம்மதித்தார். ”துறவியாக இருக்கிறவா தங்கம் மணிகள் எல்லாம் சேர்த்து பண்ணின மணி மகுடம் தரிக்கறது சரியாகாது. அடுத்த ப்ரதோஷத்தின்போது பூஜை வேளையில் நான் போட்டுண்டு இருக்கிற ருத்திராக்ஷ கிரீடத்தின் மேலேயே நீங்க பண்ணின அந்த புது கிரீடத்தையும் வைக்கச் சொல்றேன்”
ஆந்திர பக்தர்கள் பிரசாதம் வாங்கிக்கொண்டு புறப்பட்டார்கள். பதினைந்து நாள் கழித்து, ஆந்திர பக்தர்களுக்கு பெரியவா ஒரு அறிவுரை தெரிவிக்கச் சொன்னார்: அது என்ன தெரியுமா?
”நீங்க சேர்த்து வைச்ச 60,000 ரூபாயை குருக்ஷேத்திரத்தில் கீதோபதேசக் காட்சியும், கீதாபாஷ்யம் செய்த ஆதி சங்கர பகவத் பாதாளுக்கு, ஆசார்யருக்கு சலவைக் கல்லில் பிம்பம் பண்ண போறா . அந்த நற்பணிக்கு உங்க கைங்கர்யமாக அந்த பணத்தை அதுக்கு அனுப்பி வையுங்கோ”அப்படியே செய்தார்கள் அந்த ஆந்திர பக்தர்கள்.
அது சரி, அடுத்த ப்ரதோஷத்தன்று அவர்கள் அளித்த மணிமகுடத்தை ருத்திராக்ஷ கிரீடத்தின்மீது வச்சுண்டாரா?
இல்லவே இல்லை. அப்படியென்றால் என்ன ஆச்சு அந்த மணி மகுடத்துக்கு ?
தஞ்சாவூர் ப்ரஹதீஸ்வரர் ஆலயம் கட்டிய ராஜராஜ சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழா 1984-ஆம் ஆண்டு விமரிசையாக நடந்தது. மஹா பெரியவா, ”ராஜா ன்னால் முடி சூடணும். அதுவும் இந்த ராஜராஜன், சிவபாதசேகரன். சிவனாரின் பாதத்தை முடியில் கொண்டவன். அவனுக்கு நாம் முடி சூட்டியே ஆகணும்!” எனக் கூறி, தஞ்சை ராஜராஜ சோழனுக்கு அணிவிக்க, ஆந்திர பக்தர்கள் அளித்த தங்கக் கிரீடத்தில் கொஞ்சம் மாறுதல் பண்ணச்சொல்லி அது அனுப்பப்பட்டது.
அந்த கிரீடத்தை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, ராஜ ராஜசோழனுக்குச் சூட்டினார் என்பது செய்தி. அகிலா கார்த்திகேஎன் சொல்கிறபடி ‘ சந்திரசேகரரே, தனது பக்தனான சிவபாதசேகரனுக்கு மகுடம் சூட்டிப் பெருமைப்படுத்திய அதிசயம்” இது.
பொன்னும் பணமும் மணி மகுட பெருமையும் வேண்டாம் என்று சொல்லக்கூடிய ஒரு சந்நியாசியை நாம் இப்போது பார்ப்பது ரொம்ப அரிது. அப்படியும் சிலர் இல்லாமல் போகவில்லை என்று நிச்சயம் மனதுக்குள் ஒரு பக்ஷி சொல்கிறது.