GITA – J K SIVAN

கீதை புரியுமா?   –   நங்கநல்லூர்  J K  SIVAN
1. கீதை என்றால் என்ன?

உங்களுக்கு  சாமாவை  எப்படி தெரியும்?  கிட்டா தான் இண்ட்ரோடியுஸ் பண்ணி வச்சான். அவன் மூலமா தான் தெரியும்.  இப்படி தான் கிருஷ்ணனைப் பற்றி  நிறைய தெரிந்து கொள்ளும்போது கீதை பரிச்சயமாயிற்று.   அதிலிருந்து ஆங்கிலத்தில் தினமும்  ஒவ்வொரு வரி அல்லது ரெண்டு வரிகள் உங்களுக்கு அளித்து வருகிறேன். தமிழிலும் கொஞ்சம் சொல்ல வேண்டும் என்று தோன்றிற்று.
கீதை  மாதிரி மனதுக்கு உத்ஸாகம் கொடுக்க  வேறு எதுவும் இல்லை என்று சொல்லலாம். என்னமா  யோசித்து அழகாக அந்த கிருஷ்ண பரமாத்மா நமக்கு சொல்கிறார்.   உள்ளத்தில் உத்ஸாகம் ஏற்படல் அப்புறம் என்ன, உடம்பு சந்தோஷமாக அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும். நாம்  உடலளவில் வளர தாய்ப்பால் எப்படி உபயோகமோ அப்படி உள்ளம் மூலமாக வளர கீதை தான் தாய்ப்பால்.  வினோபா பாவே நான் கீதையை அனுபவிக்கும்போது ஆத்ம வானில் பறக்கிறேன், அம்ருத கடலில் நீந்துகிறேன். அது தான் என் உயிர் மூச்சு என்று சொல்வார். ரத்தம், வலி, கத்தல் , சண்டை,   எனும் யுத்தக்கடலான  மஹா பாரதத்தில்
 தனியாக  ஒரு கலங்கரை விளக்கம் தான் கீதை.

ராமாயணம்  மஹா பாரதம் ரெண்டுமே  நம் இரு கண்கள். என்றும் அழியாத  இதிகாச காவியங்கள். இதை காசம் என்றால் ”இப்படி தான் யா  நடந்தது” என்ற உண்மை கோர்வை. இதிலெல்லாம் வரும் பாத்திரங்கள் என்றும் நமக்கு படிப்பினை.  நல்லது கெட்டது  எது, அதால் என்ன விளையும் என்று அனுபவித்தவர் களைப் பற்றி சொல்வது.  எண்ணற்ற நீதி வாக்கியங்கள், அறிவுரைகள், சித்தாந்தங்கள், வேதாந்த மணிகள்,  வழிகாட்டிகள்  உள்ளவை இந்த ரெண்டு இதிகாசங்களும். உங்களோடு சேர்ந்து இன்னொரு தடவை வால்மீகிக்கும்  வியாஸருக்கும்  சாஷ்டாங்க நமஸ்காரம்.  கீதையில் கிருஷ்ணன்  சர்வ வேதாந்தங்களை, உபநிஷதுகளை எல்லாம்  கசக்கி பிழிந்து வடிகட்டி  சாரமாக,ஜூஸ் மாதிரி  நமக்கு கொடுத்திருக்கிறான்.  கீதையே  ஒரு உபநிஷத் சிகரம் என்பார்கள்.

எதிரிகளைக்  கொல்ல , வெல்ல தான் அர்ஜுனன் தயாராக நின்றான். எண்ணற்ற கௌரவ சேனையின் அளவை கண்டு கலங்கவில்லை, பயமரியாதவன், தோல்வியறியாதவன் அர்ஜுனன்.  உயிருக்கு அஞ்சாத க்ஷத்ரியன்.   ”எவன் தைர்யமாக என்னோடு மோத  வந்திருக்கிறான் என்று பார்க்க வேண்டும், கிருஷ்ணா, தேரை யுத்த களத்தில்  ரெண்டு பக்க  சேனைகளுக்கும்  மத்தியில் கொண்டு போய்  நிறுத்து  அவர்கள் முகங்களை எல்லாம் பார்க்கிறேன்”  என்று வீராவேசமாக சொன்னவன் அர்ஜுனன். அங்கிருந்து தான் கீதை ஆரம்பிக்கிறது. தேர் அங்கே போய் நின்றது. அர்ஜுனன் யார் முகங்களைப் பார்த்தான்?  நாலு சந்ததி உறவுகள், தாத்தா, மாமா, பெரியப்பா, சித்தப்பா, அத்தான் , தம்பி அண்ணன் , — இப்படி அநேக  உறவுகள் தான் தெரிந்தது. பயத்தால் அல்ல, பாசத்தால், நேசத்தால், அன்பால், பண்பால், அவன் உடல் வியர்த்தது, நடுங்கியது,  காண்டீபம் கை நழுவி தரையில் விழுந்தது. அவன் வீரம்  கோபம், தைரியம் எங்கே போயிற்று? அவனை நம்பி ஒரு சேனை, எத்தனை உயிர்கள் பின்னால்  நிற்கிறது.
”கிருஷ்ணா  நான் இவர்களை தொடமாட்டேன்,  கொல்லமாட்டேன் , அந்த பாபம் எனக்கு வேண்டாம். அவர்கள் என்னைக் கொல்லட்டும்  சந்தோஷமாக ஏற்கிறேன்.  அவர்களை ரக்ஷிக்க வேண்டியவன் உயிர்விட காரணமாகமாட்டேன். அவர்கள் இல்லாமல் நான் இல்லை.” என்று உள்டா  அடித்த அர்ஜுனனை கிருஷ்ணன் சமாதானம் செய்து, அவன்  கடமை, க்ஷத்ரிய தர்மம் எல்லாம் போதித்து, அவனைப்  போரிட வைத்து, மஹா பாரத யுத்தத்தை அவன் வெல்ல காரணமாக இருந்தது கிருஷ்ணனின் கீதை உபதேசம்.
அர்ஜுனன் ஒரு உதாரணம். அவன் நம்மைப் போன்றவன் .  ஆசா பாசங்கள் கொண்டவன். ஆகவே  அவனுக்காக உபதேசம் செய்த கீதை உண்மையில் நமக்காக கிருஷ்ணன் உபதேசித்தது. ஜனன மரணம்,தர்மம், கடமை,  கர்மா, பக்தி, ஞானம்  எல்லாம் அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது கீதையில். கொஞ்சம் கொஞ்சமாக  அறிவோமா?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *