ஒரு ஐயரின் கதை. – நங்கநல்லூர் J K SIVAN
பார்ப்பனன் ஆரியன் என்றெல்லாம் என்னென்னவோ தெரியாத கட்டுக்கதை விஷயங்களையெல்லாம் திணித்து சிலரை வேறுபடுத்துவது அநாகரீகம். முன்பெல்லாம் முஸ்லீம்கள் பாரதத்திற்குள் கொள்ளைக்காரர்களாக பிரவேசித்து, மதவெறியோடு எண்ணற்ற ஹிந்து ஆலயங்களை சிதைத்து, விகிரஹங்களை உடைத்து கோவிலில் இருந்த பொன் வெள்ளி தாமிர உலோகங்களையெல்லாம் கொள்ளை அடித்து ஆயிரக்கணக்கான ஹிந்துக்களை கொன்று ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டு, பெண்களை கடத்தி, கற்பழித்து, மதமாற்றி என்னென்னவோ செய்தார்கள் என்று சரித்திர பக்கங்கள் சொல்கிறதே, அதற்காக இப்போது நாம் நம்முடைய அத்தனை முஸ்லீம், இஸ்லாமிய சகோதரர்களிடம் வெறுப்பா கொள்கிறோம்? வேறு படுத்துகிறோமா? த்வேஷம் பாராட்டுகிறோமா? இல்லையே. என்றோ எப்போதோ எங்கோ சிலர் தவறு செய்திருக்கலாம். தவறு செய்யாதவர் எவராவது உண்டா? அதற்காக ஒட்டுமொத்தமாக அந்த வகுப்பை சேர்ந்தவர்கள் அத்தனை பேரையும் ஒதுக்குவது அழகல்ல. அற்புதமான சிலரை இத்தகைய தவறான நோக்கில் மறந்து போவது அருவருப்பானது. வருத்த மளிப்பது. அப்படி ஒரு அற்புதமனிதர் நம்மால் அதிகம் அறியப்படாமல் இருப்பவர்களில் ஒருவர் உ.வே.சாமிநாத ஐயர் .
ஐயர் என்ற பெயர் தமிழுலகில் ஒருவருக்கு உண்டென்றால் அது தமிழ்த்தாத்தா உ.வே.சா. ஒருவருக்கு தான். ஆஹா எவ்வளவு வருஷங்கள் அலைந்து, தேடி, பாடுபட்டு தமிழுக்கு அவர் அளித்த காணிக்கை எல்லை யற்றது. நாம் நன்றிக்கடன் தீர்க்கவே முடியாது.
கும்பகோணம் பக்கம் உத்தமதானபுரத்தில் வேங்கடசுப்பையர் என்ற சங்கீத வித்வான் குடும்பம் எளிமையானது. ஏழ்மையின் பிடியில் சிக்கியது.அவர் மகன் ஸ்வாமிநாதனுக்கும் சங்கீதத்தில் பயிற்சி அளித்து தன்னைப்போல் சங்கீத விதவானாக்க தான் தந்தை எண்ணினார். தமிழ்த்தாயின் எண்ணம் வேறாக இருந்ததே.
பிற்காலத்தில் வெள்ளைக்கார அரசாங்கம் மஹா மஹோபாத்யாய என்ற விருது, பாரத தர்ம மண்டலி யின் த்ராவிட வித்யா பூஷணம் விருது, மற்றும் மஹா பெரியவாளிடம் தக்ஷிணாத்யா கலாநிதி விருது பெறப்போகிறவர் ஆயிற்றே. தமிழுலகத்துக்கு, ஐம்பெரும் காப்பியங்களை மற்றும் எண்ணற்ற தமிழ் ஆராய்ச்சி நூல்களை தந்தவர் உ.வே.சா. இப்போது நாம் மறந்து விட்டவர்களில் ஒருவர்.
ஐயர் பிறந்த உத்தம தானபுரம் கிராமம் பற்றிய ஒரு விவரம் தெரியுமா? தஞ்சாவூர் ராஜா தனது ராஜ்யத்தில் அடிக்கடி பல இடங்களுக்கு பிரயாணம் செய்வார். ஆங்காங்கே கிராமங்களில் தங்குவார். ஒருமுறை ஏதோ ஒரு கிராமத்தில் தங்கும்போது உணவருந்தி தாம்பூலம் தரித்து சிரம பரிகாரம் பண்ணிக் கொண்டிருந்தபோது யாரோ சொல்லி ராஜாவுக்கு அன்று ஏகாதசி என்று தெரிந்தது. ராஜா கொஞ்சம் சாஸ்திர ப்ரகாரம் நடப்பவர் விரதம் அனுஷ்டிப்பவர். சுத்த புத்தம் பார்ப்பவர். பகவான் மேல் பக்தி உண்டு. ஏகாதசி விரதம் இருப்பவர். ‘அடாடா. இப்படி பண்ணிவிட்டேனே . தஞ்சாவூர் அரண்மனையில் இருந்தால் வழக்கமாக தினமும் வரும் ஜோசியர் அன்றன்று பஞ்சாங்கம் படித்து என்ன செய்யவேண்டும் என்று சொல்வாரே. ஏதோ ஒரு கிராமத்தில் அவர் இல்லாமல் வந்து மாட்டிக் கொண்டு இப்படி ஏகாதசி அன்று வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு தாம்பூலமும் தரித்துக் கொண்டுவிட்டேனே’ என்று வருந்தினார்.
ஊரில் உள்ள சாஸ்திரம் தெரிந்த பெரியோர்களை அழைத்து என்ன பரிகாரம் செய்யலாம்? என்று விசாரித்தார்.ஒரு முதியவர் ‘ இதற்கு பரிகாரமாக பிராமணர்களுக்கு ஒரு கிராமம் ”அக்ரஹார ப்ரதிஷ்டையாக’ தானம் அளித்து வீடு கட்டிக் கொடுங்கள். அவர்கள் வேதம் உச்சரித்து வாழ்த்தினால், அந்த ஒலி கேட்கும் வரை எந்த பாபமும் எவரையும் அண்டாது. இது தான் உத்தமம் ”என்கிறார்.. ”அவ்வளவு தானே, இதோ ஏற்பாடு செய்கிறேன்” என்று ராஜா தான் இருந்த ஊருக்கு அருகேயே இருந்த ஒரு கிராமத்தில் வரிசையாக 48 வீடுகள் கட்டி, அக்ரஹாரமாக்கி ரெண்டு வீட்டுக்கு ஒரு கிணறு என்று அமைத்து பல வேதம் ஓதும் 48 பிராமண குடும்பங்களை அங்கே வசிக்க வைத்தான். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 12 மா நஞ்சை நிலம் தானமாக அளித்தான். அப்படி உத்தமமாக தானமாக அமைந்தது தான் உத்தமதான புரம் .
அக்ரஹாரம் என்பது ஒரு காலத்தில் அகரம் என்று பேர் கொண்டது. இன்றும் தமிழகத்தில் எத்தனையோ அகரங்கள் இருக்கிறதே. அநேகமாக அக்ரஹாரங்கள் எதிரும் புதிருமாக வீடுகள் கொண்டது. அதிகபக்ஷம் ரெண்டு தெருக்களாக, கிழக்கு மேற்காகவோ அதன் ஒரு முனையில் வடக்கு தெற்காக ஒரு தெருவோ இருக்கும். தெருக்களின் முனைகளில், சிறகுகளில், சிவன் கோவில், பெருமாள் கோவில், மற்றும் ஒரு பிள்ளையார் கோவிலோ இருக்கும். உத்தம தான புரத்தில் கைலாச நாதர் கோவிலும் லக்ஷ்மிநாராயண பெருமாள் கோவிலும் உண்டு. குளம் ஒன்று சிவன் கோவில் சந்நிதியை ஒட்டி இருந்தது. அம்பாள் பெயர் ஆனந்தவல்லி. பெருமாள் கோவிலை ஒட்டி இருந்தது.
அக்காலத்தில் ரயில் இல்லை, ரோடு இல்லை, வண்டிகள் ஓடாது. மாட்டு வண்டி, குதிரை வண்டி தான் அதிக பக்ஷம். தெருக்களில் மின்சார விளக்கு கிடையாது. மண் ரோடு, மரங்கள் இருபக்கமும் நிழல் தரும். வரப்புகளில் நடந்து நடந்து வெள்ளியாக பாதை இருட்டில் கூட தெரியும். சூரிய ஒளியும் சந்திரஒளியும் தான் விளக்குகள். வீடுகளில் எண்ணெய் தீபங்கள். முக்கியமாக எங்கும் லக்ஷ்மிகரம் இருந்தது. மக்கள் திருப்தியாக வாழ்ந்தது அவர்கள் முகத்தின் சந்தோஷ புன்னகையில் தெரிந்தது. திண்ணைகள் உள்ள வீடுகளில் உட்கார்ந்து நிறைய பேசுவார்கள் பாடுவார்கள், விவாதிப்பார்கள்.
சென்னைப்பட்டணம் போன்ற பெரிய நகரங்களில் காணும் கவலை, பயம், வேகம் அங்கே அப்போது இல்லை, விவேகம் இருந்தது, வளமை இருந்தது, காசு வங்கி புழக்கம் இல்லாவிட்டாலும் யாரும் காசு இல்லாமலே சந்தோஷத்தோடு வாழ்ந்தார்கள், தனம் பால், தானியம் ரூபத்தில் எல்லோரிடமும் இருந்தது. டாக்டர்கள் இல்லாவிட்டாலும் எல்லோரும் பழையது, மோர், தயிர், பால் என்று சாப்பிட்டு அதிகநேரம் உழைத்து, வெகு தூரம் நடந்து நல்ல காற்றோட்டத்தில் பிராண வாயுவை சுவாசித்து நோய்நொடியற்று நீண்டகாலம் வாழ்ந்தார்கள். பக்தி அவர்களுக்கு கவசமாக இருந்தது.
வைதிக பிராமண குடும்பங்கள், கோவில் அர்ச்சர்கள், ஜோசியர்கள், சங்கீத வித்துவான்கள் என்று பல விதமாக ஏதேதோ தொழில் புரிந்து, பல வூர்களுக்கு சென்று சம்பாதித்து சுகமாக வாழ்ந்தார்கள். அநேகமாக எல்லோருமே சட்டை இல்லாதவர்கள், காலில் மரக்கட்டை பாதரக்ஷை அணிந்தவர்கள், மேல் துண்டை தலையில் போட்டுகொண்டு குடுமித்தலையை முடித்துக்கொண்டு, நெற்றி நிறைய விபூதி, மார்பு நிறைய சந்தனம் பூசிக்கொண்டு கழுத்தில் கௌடி சரடு, ருத்ராக்ஷத்தோடு,மார்பில் வெள்ளிக்கம்பியாக தாங்களே நூலில் தக்கிளியில் நூற்ற பூணலை அணிந்து கொண்டு பஞ்ச கச்சத்தோடு அலைபவர்கள். ஆங்கிலம் அறியவேண்டும் என்ற ஆர்வமோ அவசியமோ இல்லாத அவர்களுக்கு தமிழ் தெலுங்கு, சமஸ் க்ரிதமொழிகள் தெரியும், நிறைய ஸ்லோகங்களை,தமிழ் பாடல்களை மனப்பாடம் செய்து படித்தவர்கள் ஓலைச்சுவடிகளில் எழுதி படித்த கல்வி. திண்ணைப்பள்ளிக்கூடங்கள் ஆசிரியர்களின் வீட்டில் தான் நடந்தன. ஆசிரியருக்கு சம்பளம் கிடையாது. மாணவர்கள் கொண்டு தரும் காய்கறி, பழங்கள், கீரைகள், பருப்பு புலி தானிய வகைகள், பண்டிகை நாட்களில் வேஷ்டி துண்டுகள். ஆசிரியர் மனைவிக்கு புடவை தான்.நகைகளுக்கு டிமாண்ட் இல்லை. வெளியூர் செல்பவர்கள் திரும்பி வரும்போது கொண்டுவரும் செய்திகள் தான் டிவி வீடியோ வாட்ஸாப்ப் அக்காலத்தில். வெள்ளைக்காரர்கள் ஆண்ட காலம். கலெக்டர்கள் பெரிய அதிகாரிகள். பாபநாசத்தில் கலெக்டர் ஒருநாள் கேம்ப் போட்டிருந்தபோது ஜோசியர் அண்ணா அய்யர் காம்போதி ராகத்தை முணுமுணுத்துக்கொண்டு அந்த பக்கமாக நடந்து கொண்டிருந்தார். ஆஜானுபாகு வான சிவப்பு மேனி. கட்டுத்தளராத உடம்பு, கட்டுக் குடுமியில் மல்லிகைப்பூ, காதில் கடுக்கன், நெற்றி மார்புகளில் விபூதி சநதனம், பெரிய தொப்பையை வளைத்து பஞ்சகச்சம்,அதற்கு மேல் ஒரு காவி வஸ்திரம்,மேலே தோளில் ஒரு மஞ்சள் அங்கவஸ்திரம், கையில் ஒரு மஞ்சள்பை. கலெக்டருக்கு அண்ணாவையரைப் பிடித்துவிட்டது. சிரஸ்தார் கோபாலனுக்கு தமிழைத் தவிர ஆங்கிலம் தெரியும். அவரைக் கூப்பிட்டு அண்ணாவையரை நிறுத்தி சில கேள்விகள் கேட்கப்பட்டன.
”உங்களுக்கு எழுத படிக்கத் தெரியுமா?”’தெரியும்””கணக்கு பார்க்க தெரியுமா?”தெரியும். ஜோசியத்தில் கனக்குப் போட தெரிந்திருக்கவேண்டுமே ””கிராமக்கணக்கு பார்க்கச்சொன்னால் முடியுமா? பார்க்கிறீர்களா?””ஓ. நில அளவு கணக்கு நன்றாக தெரியும்’கலெக்டருக்கு அண்ணாவையரைபிடித்து விட்டது. உக்கடை கிராம கர்ணம் கணக்கு வழக்குகளில் குளறுபடி பண்ணி அவரை மாற்றவேண்டும் என்று கலெக்டர் அப்போது ஆள் தேடிக்கொண்டிருந்த சமயம் அண்ணாவையரின் ஆக்ரிதி , ஆளுமை, கணக்கு வழக்கு ஞானம் அவரை செலெக்ட் பண்ணி காரணம் உத்யோகம் கிடைத்தது. இப்படி தான் பல வேலைகள் பலருக்கு கிடைத்தது. இது தான் இன்டர்வியூ, குவாலிஃபிகேஷன், செலெக்ஷன் அப்பாயிண்ட்மெண்ட்.