ரமணானுபவம் – நங்கநல்லூர் J K SIVAN
ஒரு பழைய விஷயம் சொல்கிறேன். வருஷம் நூறுக்கு மேல் ஆகப்போகிறது. ஒரு பக்தி மிக்க குடும்பம் காவேரி ஸ்னானம் செய்ய வடக்கே இருந்து வந்தது. அருணாசலம் என்ற இடத்தில் யாரோ ஒரு சிறிய ப்ராமண சிறுவன் பத்து வருஷமாக யோகியாக தவம் இருக்கிறானாமே சென்று தரிசிக்கலாம் என்று திருவண்ணாமலை க்கு வந்தார்கள். மலை ஏறி விருபாக்ஷ குகை சென்றார்கள். அந்த பாலயோகியை பார்த்த போது அருணாசலேஸ்வரரே மனித உருவில் வந்து உட்கார்ந்திருக்கிறாரோ என்று தோன்றியது.அப்புறம் பல வருஷங்கள் கழித்து அண்ணாமலை அடிவாரத்தில் ஆஸ்ரமத்தில் ,மஹரிஷி ரமணராக அந்த யோகி அமர்ந்திருப்பதை அந்த குடும்பம் பார்த்து வணங்கியது.
நிறைய பேர் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். மௌனம் மட்டும் தான் அங்கே இருந்தது. ஒரு நாள் தங்கி மறுநாள் மெதுவாக அவரிடம் பேச்சு கொடுத்தார்கள்.”சுவாமி ஆத்மா என்றால் என்ன? பரந்த ஆகாயமா, அல்லது எல்லாம் அறிந்த கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒன்றா?“நீ கேட்கும் எதையும் சிந்திக்காமல் மனதை காலி செய்து கொள்.அப்போது ஆத்மா புரியும்”. மகரிஷி ரமணர் அவரைப் பார்த்தார். அந்த ஊடுருவிய பார்வை பல அர்த்தங்களை மனதில் செலுத்தியது. அந்த குடும்பஸ்தர், பெண்மணி, அங்கேயே தங்கி சமையல் கூடத்தில் சேவை செய்தார். அங்கே வழக்கமாக சேவை செய்தவள் ஒருநாள் அந்த பெண்மணியிடம் ”என் வேலையை நீ பார்த்துக் கொள்கிறாயா? நான் வெளியூர் போகவேண்டும்” என்றதால் அதையும் சேர்த்து கவனித்தாள் . அடிக்கடி மகரிஷி சமையல் கட்டுக்குள் வருவார். நடப்பதை எல்லாம் கவனிப்பார்.
ஒரு வருஷம் சென்றது. ஒருநாள் தனது ஊரிலிருந்து அந்த பெண்மணி மீண்டும் ரமணாஸ்ரமத்துக்கு வந்தாள். அவள் உடல் தான் சமையல் வேலைகள் சேவைகளில் ஈடுபட்டிருந்தாலும் மனதில் ஏனோ நிம்மதியில்லை. தியானம் செய்ய வேண்டும் என்று தோன்றியது.
இந்தநிலையில் ஒருநாள் மகரிஷி அவளைப்பார்த்துகேட்டார்: ”என்ன நீ, தியானம் செய்வதைப் பற்றியே நினைத்துக் கொண்டி ருக்கிறாயா?’ ”சுவாமி இங்கே வேலைக்கு எல்லையில்லை. மேலே மேலே வந்து கொண்டிருக்கிறது. சமையல்கட்டில் வேறென்ன கிடைக்கும்?”“உன் கைகள் தானே வேலை செயகிறது? மனம் சும்மா தானே இருக்கிறது. சும்மா இருப்பது தான் மனதின் உண்மையான வேலை. நீ அமைதி நிரம்பியவள் .அது புரிந்தால் உன் கை தானாகவே தனது வேலையை செய்து கொண்டிருக்கும். அதற்கு எந்த சிரமமும் இருக்காது. அலுப்பும் களைப்பும் இருக்காது. நீ தான் உடம்பு, நீ தான் வேலை செயகிறாய் என்று என்னும்போது தான் சிரமம் வரும். உடம்பு சும்மா வேலை செய்யாமல் இருந்தால் மனம் அமைதியாக இருக்கும் என்று நினைக்காதே”தூக்கத்திலும் கனவிலும் மனது ஏதாவது வேலை செய்து கொண்டு தான் இருக்கும்.”
நீ பட்டினி கிடைக்காதே. விரதம் தேவை இல்லை. மனதில் தொடர்ந்து ஆத்மாவாகிய உன்னைப் பற்றி சிந்தி”
அந்த பக்தை ஒரு நாள் தயிர் நிறைய பண்ணி இலையில் மகரிஷிக்கும் பரிமாறி, தயிரைக் கடைந்து மற்றவர்களுக்கும் மோர் விநியோகித்தார். மகரிஷி இலையில் விழுந்த தயிரைப் பார்த்துவிட்டு அந்த பக்தை யையும் உற்றுப் பார்த்தார். சிறிது நேரத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டார். ‘சுவாமிக்கு என்ன கோபம், என்ன அபச்சாரம் பண்ணிவிட்டேன்?” என்று மனதில் அந்த பக்தைக்கு அதிர்ச்சி. ‘சுவாமி என்னை மன்னிச்சுடுங்கோ, நான் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா உங்க காலடியிலேயே விழுந்து மன்னிப்பு கேட்கறேன். அந்த தப்பை மறுபடியும் பண்ணமாட்டேன். நீங்கள் தயிர் மோர் சாப்பிடணும்னு எனக்கு ஆசை. அதனால் தான் இலையில் தயிர் விட்டேன்” ”இல்லைமா, எனக்கு ஜலதோஷம். அது இருந்தா மோர் தயிர் சாப்பிடமாட்டா இல்லையா.?
அன்னிக்கு மத்தியானம் எச்சம்மா பாட்டி தயிர் கொண்டுவந்தபோது ”சுப்புலக்ஷ்மியை சிரமப்படவேண்டாம்னு சொல்லிடு.எனக்கு தயிர் வேண்டாம். மோர் கிடைக்கிறது அது போதும். ” என்று சொல்லிவிட்டார்.
தொடரும்