ரமணரும் மரணமும் – நங்கநல்லூர் J K SIVAN
இன்றோ நேற்றோ நடந்ததல்ல இது. 127 வருஷங்களுக்கு முன்பு. ஒரு ஜூலை மாதம் நடுவில், ஒரு மத்தியானம் ஒரு பழைய வீட்டின் மாடியில் நடந்த சம்பவம். பொய்யோ கட்டுக்கதையோ இல்லை. அப்போது ரமணர் மகரிஷி இல்லை. நம்மைப் போல் ஒரு சாதாரண சிறுவன் வெங்கட்ராமன். எந்த எதிர்பார்ப்பும் திட்டமு மில்லாமல் தானாகவே நடந்த இந்த ஒரு நிகழ்ச்சியால் ஆன்மீக உலகத்தில் ஒரு மா பெரும் புரட்சி. வெங்கட்ராமன் தனது மாமா வீட்டில் மாடியில் உட்கார்ந்து கொண்டு இருந்தான். திடீரென்று அவனுக்கு வியர்த்தது. நெஞ்சு திக் திக் என்று அடித்துக் கொண்டது. ஏதோ இனம் புரியாத ஒரு பயம். காரணம் இல்லாமல் உடல் நடுங்கியது. மூச்சு திணறியது. என்னவாயிற்று ? ஏன் இப்படி ஒரு மரண பயம் திடீரென்று எனக்கு ? பல வருஷங்கள் கழித்து பகவான் மகரிஷி ரமணர் இது பற்றி சொல்கிறார் கேளுங்கள்:
”நான் வீட்டை விட்டு வெளியேறி மதுரையிலிருந்து கிளம்புவதற்கு முன்னால் சுமார் ஆறு வாரங்கள் இருக்கலாம். என் வாழ்க்கையின் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது என்று அறியேன். மாடியில் உட்கார்ந்திருந்தேன். என் உடம்புக்கு எந்த நோயும் வியாதியும் இல்லை. ஆனால் ஏனோ நான் திடீரென்று அப்போதே செத்து போகப் போகிறேன் என்று ஒரு பயம் பிடித்துக் கொண்டது. எதற்கு இப்படி ஒரு பயம்? என்று யோசித்தேன். எனக்கு நிச்சயம் நான் சாகப்போகிறேன் என்று தெரிந்துவிட்டது. யாராவது ஒரு டாக்டர் கிட்டே போகவேண்டும் என்றோ , வீட்டில் மற்றவர்களிடம் சொல்லவேண்டும் என்றோ தோன்றவில்லை. நாமே இதை சமாளித்துக்கொள்வோம் என்று மட்டும் தோன்றியது.
அந்த அதிர்ச்சி பயம் ரெண்டுமே என்னை என்ன இது, எதனால் இது, என்று தெரிந்து கொள்ள ஆர்வத்தை தூண்டியது. உள் நோக்கி பார்க்க தோன்றியது. இதை தான் மரணம் என்கிறார்கள், அப்படி என்றால் என்ன? சாவது என்றால் என்ன? இந்த உடம்பு சாகிறதா? ’ என் மனதில் ஒரு டிராமா காட்சி ஓடியது. பேசாமல் கால் கைகளை நீட்டி விறைத்து படுத்துக்க கொண்டேன். பிணம் மாதிரி என்னை நினைத்துக் கொண்டேன். வாயை இருக்க மூடிக் கொண்டேன். எந்த சப்தமும் என்னிடமிருந்து எழும்பாதே. சரி இந்த உடம்பு இப்போது செத்து விட்டது. இதை எடுத்துக் கொண்டு சுடு காட்டுக்குப் போவார்கள். எரித்து சாம்பலாக்குவார்கள். சரி இனிமேல் உடம்பு இல்லை. நானுமா இல்ல? உடம்பு செத்துவிட்டால் நானுமா செத்து விடுவேன்? இந்த உடம்பு தான் நானா? அது மரக்கட்டையாகி அசைவில்லாமல், உணர்ச்சி இல்லாமல், சப்தமில்லாமல் இருக்கிறது. நான் எப்படி மனதால் கொந்தளிக்கிறேன். என்னுள்ளே என் குரல் கேட்கிறதே. ஓஹோ அப்படி யானால் நான் இந்த உடம்பு இல்லை. ஆனால் அதற்குள் இருக்கும் இன்னொரு உருவமில்லாத உடம்பு. . அது எங்கும் சுற்றும். அதை மரணம் தொடாது. ஆம் நான் சாகும் இந்த உடம்பு இல்லவே இல்லை. இதெல்லாம் ஏதோ கற்பனை இல்லை. இது தான் உண்மை. நிஜம். சாத்தியமானது. சத்திய மானது . இது எனக்கு நேரடி அனுபவம். ”நான்” ”நான்” என்று நாம் சொல்லும் இந்த உடம்பு உண்மையில் நான் இல்லை.
அதற்கப்புறம் அந்த ”நான்” பற்றி நிறைய நான் யோசித்தேன். எனக்குள்ளே ஆராய்ந்து அலசினேன். அதற்கப்புறம் மரண பயம் என்பதே என்னை விட்டு ஓடிவிட்டது. உள்ளே இருக்கும் அந்த ”நான்” தான் ஆத்மா என்பது புரிந்துவிட்டது. எண்ணங்கள் வரும் போகும் அது ஆத்மாவை பாதிக்காது.. அதை சுற்றியே ஓடும். கச்சேரியில் வித்துவான் குரல், பக்க வாத்தியங்கள் எல்லாம் ஆலாபனையில் மேலும் கீழுமாக அலையும் வெவ்வேறு விதமாக ஒலிக்கும். ஆனால் தம்புரா என்ற ஒன்று எப்போதும் ஓயாமல் ஒரே சுருதியில் இருக்கும். ஆத்மா அப்படித்தான். மனதில் எழும் எண்ணங்கள் தான் ஆலாபனை செய்யும் வித்துவான், பக்கவாத்தியங்கள். இந்த உடம்பு பேசும், எழுதும், நடிக்கும், நடக்கும், படிக்கும், தூங்கும். சாப்பிடும். ஆத்மா எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு பேசாமல் இருக்கும். அதற்கு எதிலும் ஆர்வமோ, ஆசையோ, பற்றோ கிடையாது.”
ரொம்ப சாதாரணமான அனுபவம் இது என்று சொல்ல முடியுமா? நம்மால் வெங்கட்ராமனாக முடியுமா?. வெங்கட்ராமனை அந்த மரண அனுபவம் புரட்டி போட்டு விட்டது. அவனை அடியோடு மாற்றிவிட்டது. அதன் பிறகு அவன் மௌனமானான். சாதுவானான். எந்த குறையும் சொல்வதில்லை. எந்த செயலுக்கும் விளைவு காட்டுவதில்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று விபூதி குங்குமம் இட்டுக்கொண்டு ஒவ்வொரு சந்நிதியாக நமஸ்கரித்து வருபவன் ஒவ்வொரு சாயந்திரமும் சொக்கன் மீனாட்சி முன் அமர்ந்து மணிக்கணக்காக அமர்ந்து மனதில் தியானம் பண்ணினான். அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிலைகள் முன்பு அமைதியாக காலியாக இருக்கும். அங்கே உட்கார்வான். தெய்வீக உணர்ச்சி அலைகள் அவன் ஹ்ருதயத்தை வேகமாக தாக்கி முட்டி மோதி நெருக்கின . அப்புறம் திருவண்ணாமலை போன வெங்கட்ராமன் நமக்கு ரமண மகரிஷியாக கிடைத்தார். இன்றும் வழி நடத்துகிறார். தினமும் எழுதுகிறேனே .