அஹேதுக பக்தி AHETUKA BHAKTI நோக்கமில்லா பக்தி -நங்கநல்லூர் J K SIVAN
இன்று காலை ரமணரை நினைத்துக் கொண்டிருந்த போது அவரைப் பற்றி சில வருஷங்களுக்கு முன் நான் எழுதி வைத்திருந்த குறிப்பு ஒன்று கண்ணில் பட்டது.
சூரி நாகம்மா என்ற தெலுங்கு பெண்மணி மஹரிஷியோடு பல வருஷங்கள் ரமணாஸ்ரமத்தில் இருந்தது ஆச்சர்யமில்லை. அவள் அங்கே இருந்த போது நடந்த சில சம்பவங்களை போட்டோ படம் பிடிப்பது போல் தெலுங்கில் எழுதி வைத்திருந்தது தான் ஆச்சர்யம். அது பிற்காலத்தில் ஆங்கிலத்திலும் மற்ற பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு நம்மை அடைந்தது நமது பாக்யம். அதில் ஒரு சம்பவம் தான் நான் காலையில் நினைத்தது.
1944 ம் வருஷம் ஆகஸ்ட் மாசம், ஒரு வங்காள யுவன் காவி உடை அணிந்து டில்லியிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்தான். அவன் பெயர் சின்மயானந்தா. பல தேசங்களில் சுற்றி அலைந்தவன் புதுச்சேரி அரவிந்தாஸ்ரமம் சென்று அங்கே திலீப் குமார் ராய் என்பவரிடமிருந்து ஒரு கடிதாசு வாங்கிக்கொண்டு இங்கே வந்திருக்கிறான். பக்தி பாடல்கள் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். நல்ல சாரீரம் வேறு இருந்தது அவனுக்கு. சைதன்யர் பக்தன். மகரிஷி ரமணர் முன்னால் உட்கார்ந்து நாலைந்து முறை பாடினான். ஸம்ஸ்க்ரிதம், ஹிந்தி என்று பாஷைகளில் பாடினான். இந்த இளம் வயதில் அவனுக்கு ஆன்மீக நாட்டம் இருந்தது பாராட்ட தக்கது.
ஒருநாள் மகரிஷியிடம் என்ன கேட்டான் தெரியுமா?
”சுவாமி, பகவானைப் போற்றி பல இடங்களில் சுற்றிக்கொண்டு பாடிக்கொண்டேஇருந்தால் உலக வாழ்க்கையில் நற்கதி அடைய முடியுமா? அல்லது ஒரே இடத்தில் தங்கி இருக்க வேண்டுமா?
“மனதை ஒரு முகப்படுத்தி ஒன்றின் மேல் நிறுத்தவேண்டும். எங்கே சுற்றினால் என்ன, ஒரே இடத்தில் இருந்தால் என்ன? மனதை அலையவிட்டு உடம்பு மட்டும் ஒரேஇடத்தில் இருந்தால் என்ன பிரயோசனம்?” என்கிறார் மகரிஷி.
”சுவாமி, மனதில் ஏதோ ஒன்று வேண்டும் என்ற நோக்கத்தோடு இல்லாத பக்தி தன்னலமற்ற பக்தி கிடைக்குமா?”
”ஆஹா கட்டாயம் முடியுமே”
இதே கேள்வியை பல சமயங்களில் பலர் கேட்டபோதெல்லாம் பகவான் சொன்ன பதில் :
”ஏன் முடியாது?’ ப்ரஹலாதன் நாரதர் இவர்களிடமெல்லாம் இருந்த பக்தி இப்படித்தானே” எதையும் எதிர்பார்த்து அவர்கள் நாராயணனிடம் பக்தி கொள்ளவில்லையே ” என்றார் மகரிஷி.அருணாசலம் இப்படிப்பட்ட பக்தி தான். முதன் முதலில் அருணாசலத்துக்கு வந்தபோது பகவான் சொன்னது ஞாபகம் வருகிறது
”என்னப்பனே அருணாசலா, உன் கட்டளைப்படி இங்கே வந்து விட்டேன். என்னை உனக்கே தந்துவிட்டேன்” பகவானா அப்படி கட்டளையிட்டான்? அத்தனை பக்தி பாவம். பொங்கி எழும் பரிபூர்ண பக்தி. அருணாசல நவமணி மாலை பகவான் எழுதியது. படித்திருக்கிறீர்களா? அதில் 7வது செய்யுள் இதை சொல்கிறது:
‘அண்ணா மலையா யடியேனை
யாண்ட வன்றே யாவியுடற்
கொண்டா யெனக்கோர் குறையுண்டோ
குறையுங் குணமு நீயல்லா
லெண்ணே னிவற்றை யென்னுயிரே
யெண்ண மெதுவோ வதுசெய்வாய்
கண்ணே யுன்றன் கழலிணையிற்
காதற் பெருக்கே தருவாயே. … 7
”அருணாசலா, நீ அழைத்தாய் நான் வந்துவிட்டேன். என் உடல் பொருள் ஆவி எல்லாம் உனதே. இனி எனக்கு என்ன குறை இருக்கிறது? குறையோ குணமோ எல்லாமே நீ தானே, வேறே ஏதப்பா? உன் திருவடிஅடைந்து அதை கெட்டியாக பிடித்துக் கொண்டபின் எனக்கு என்ன தேவை என்று நீ எண்ணுகிறாயோ அதை நீயே தருவாயே. நான் என்ன சொல்ல இருக்கிறது?
நமக்கும் இந்த பக்தி வருமா? முயற்சிப்போமா?