ஒரு பழைய நினைவு – நங்கநல்லூர் J K SIVAN
சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் எனது நீண்டகால நண்பன் ராஜகோபாலனோடு (88+) காஞ்சி சங்கரமடத்துக்கு சென்றேன். அவன் அப்போது தான் முதன் முறையாக மடத்துக்கு தரிசனம் செய்ய வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்.
உள்ளே நுழைந்ததும் வலது கைப்பக்கம் சுவற்றில் நிறைய பீடாதிபதிகள் படங்கள். அதில் ஒரு சிறு வயது பீடாதிபதி படத்தைப் பார்த்து விட்டு இது யார் என்று கேட்டான். விவரம் சொன்னேன். அப்போது தான் தோன்றியது ஒரு எண்ணம். ஏழே நாட்கள் பீடாதிபதியாக சரித்ரம் படைத்த மஹா தேவேந்திர சரஸ்வதியைப் பற்றி என்ன சொல்வது, யாருக்கெல்லாம் இவரைத் தெரியும். இவர் படமாவது அநேகர் தரிசிக்கட்டுமே என்று எண்ணினேன். அது இன்று நினைவுக்கு வந்தது. உடனே இதை எழுத தோன்றியது.
மஹா பெரியவா காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதி. ஜகத்குரு. நூறு வருஷங்கள் அநேகமாக வாழ்ந்த மஹான். பேசும் தெய்வம் என்று அவரைப்பற்றி நிறைய நினைக்கிறேன், பேசுகிறேன், எழுதுகிறேன், பாடுகிறேன்.
அவருக்கு முன்னால்?
67வது பீடாதிபதி யார்?
அவர் 5வது மஹா தேவேந்த்ர சரஸ்வதி. 1889ல் நரசிம்ம சாஸ்திரிகள் – லக்ஷ்மி அம்மாளுக்கு லக்ஷ்மிகாந்தன் என்ற புதல்வராக திருவிசநல்லூரில் பிறந்தவர். அப்பா அம்மா பேரை சேர்ந்து லக்ஷ்மிநரசிம்மன் என்றும் பெயர் உண்டு. 66வது பீடாதிபதிக்கு சேவை செய்வதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இளைஞர்.
குருநாதரால் 1907ல் 18வது வயதில் 67வது பீடாதிபதி மஹா தேவேந்திர சரஸ்வதியாக தீக்ஷை பெற்றார். அவர் பீடாதிபதியாக இருந்தது 7 நாட்கள் மட்டும் தான். இந்த பீடாதிபதி மஹா பெரியவாவின் உறவினர். சித்தப்பா பெரியப்பா பிள்ளை என்ற நெருங்கிய உறவு. மஹா பெரியவாவின் பெயர் அப்போது ஸ்வாமிநாதன். 13 வயது.
லக்ஷ்மி காந்தனும் ஸ்வாமிநாதனும் பூர்வாஸ்ரமத்தில் ஒன்றாக விளையாடியவர்கள்.
66வது பீடாதிபதி 6வது சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி 1891ல் இருந்து பீடாதிபதியாக இருந்தவர். 1907ல் கலவையில் சித்தியானவர். லக்ஷ்மிகாந்தனுக்கு பீடாதிபதியாவதில் விருப்பமில்லை. குருநாதர் 66வது பீடாதிபதிக்கு சேவை செய்து கொண்டு இருப்பதில் மட்டுமே ஆர்வம்.
”என் ஒன்றுவிட்ட சகோதரன் ஸ்வாமிநாதன் இதற்கு பொருத்தமானவன்” என்று சொன்னார்
”எனக்கு ஸ்வாமிநாதனை நன்றாக தெரியும்.அவனையே அடுத்த பீடாதிபதியாக நியமிக்க எண்ணம். அதுவரை, அவன் வரும் வரை, நீ பொறுப்பேற்றுக் கொள் என்று குருநாதரின் கட்டளைக்கு பணிந்து பொறுப்பேற்றவர்.
மடத்து அதிகாரிகள், மற்றும் பெரியோர்கள் ஒன்று கூடி 67வது பீடாதிபதியின் விருப்பத்தின் படி ஆலோசித்து சுவாமிநாதனை அடுத்த பீடாதிபதியாக நியமிக்க தீர்மானம் ஆயிற்று.
66வது 67வது பீடாதிபதிகள் இருவருமே ஒரே சமயம் நோயால் பீடிக்கப்பட்டாலும் 67வது பீடாதிபதி மஹா தேவேந்திர சரஸ்வதி 7 நாட்கள் பீடாதிபதியாக இருந்து சமாதியானார். மறைவதற்கு முன் 67வது பீடாதிபதி சுவாமிநாதனை அடுத்த பீடாதிபதியாக நியமிக்க ஏற்பாடு செய்ய கூறினார்.
66வது 67வது பீடாதிபதிகள் சமாதி, அதிஷ்டானத்தை கலவைக்கு செல்லும்போது தரிசிக்கலாம்.
மஹா பெரியவா கலவையில் வெகு காலம் தங்கி தியானம் செய்தது இவ்விரு குருக்களையும் வணங்கி தியானத்தில் ஈடுபடவே.
உடனே செய்தி சொல்லப்பட்டு, ஸ்வாமிநாதன் காஞ்சிபுரம் வரவழைக்கப்பட்டார். அவர் தாயோடு காஞ்சி வந்தபோது அவர் வயது 13. அப்புறம் 100 வயது மஹா பெரியவாளாக வாழ்ந்ததைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறேனே. உங்களுக்கும் தெரியுமே.