பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
மஹேந்திர மங்கலத்தில் ஒரு மாணவன்
நாம் சற்று பின்னோக்கி பார்க்கும்போது காஞ்சி காமகோடி மடத்தின் 68 வது பீடாதிபதி, ஜகத் குருவாக ஒரு 13 வயது பாலகன் கண்ணில் படுகிறான். ஒரே நாளில் ஸ்வாமிநாதன் சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஆகிவிட்டானே எப்படி? எல்லாம் காமாக்ஷியின் சங்கல்பம்.அப்போதெல்லாம் காமகோடிபீடம் கும்பகோணம் மடத்தில் இருந்து செயலாற்றிக் கொண்டிருந்தது. புதிய பீடாதிபதி கும்பகோணம் மடத்துக்கு சென்றுவிட்டார். இந்த சின்ன பீடாதிபதியை பார்க்க வேண்டும் என்று அநேக பக்தர்களுக்கு ஆர்வம். ஆசை. பாசம். அப்போதெல்லாம் வீடியோ, ஆடியோ, போட்டோ எல்லாம் ஏது ? பத்திரிகைகளும் அவ்வளவு இல்லை. ஆகவே நேரில் வருவோரின் எண்னிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்ததால் திடீரென்று புதிதாக பதவியேற்ற பெரியவாளுக்கு சரி வர வேத பாடங்களைக் கற்பதற்கு நேரம் ஒதுக்கவே முடியவில்லை. நேரம் போதவும் இல்லை. என்ன செய்யலாம் என்று மடத்து அதிகாரிகள் யோசித்தனர். முசிறி- தொட்டியம் சாலையில், காவிரியின் வடகரையில் உள்ள மஹேந்திரமங்கலம் கிராமத்தில் பெரியவாளுக்கு அமைதியாக வேத ஸாஸ்த்ர பயிற்சி பெற தங்க வைக்கலாம் என முடிவாகியது. .10-ஆம் நூற்றாண்டில், மஹேந்திர மங்கலம் ஒரு வளமான விவசாய பூமி. பல்லவ ராஜா மகேந்திரவர்மன், இந்தக் கிராமத்தை சதுர்வேதி மங்கலம் என்று பிராமணர்களுக்கு தானம் செய்தான் என்று கல்வெட்டு சொல்கிறது. ஒரு பழைய பெரிய சிவாலயம், பூமிக்கடியில் புதையுண்டிருந்தது. சிவனின் பெயர் தில்லைநாதன். மகேந்திர மங்கலத்துக்கு அருகே இன்னொரு ஊர் ஸ்ரீனிவாசநல்லூர். அங்கேயும் ஒரு சிவாலயம். எல்லாம் சோழர் காலத்து கோவில்கள்.
மஹேந்திரமங்கலத்தில், மூன்று வருஷகாலம் 1911-1914 பெரியவா வேதங்களைக் கற்றார். மற்ற மாணவர்களை போல் இல்லாமல் இங்கே ஆசிரியர்கள் மாணவனை வணங்கினார்கள். மாணவன் ஜகத் குருவாச்சே.
அங்கிருந்த பாடசாலை குவளக்குடி சிங்கம் அய்யங்கார் என்ற ஸ்ரீரங்கத்து வைணவரால் நடத்தப்பட்டு வந்தது. இப்போதும் பாடசாலை இருக்கிறது என்று தெரிகிறது. ஐயங்காரின் வம்சாவளி தொடர்ந்து நடத்தி வருகிறது.
மாணவனாக இருந்த பெரியவா அங்கே அப்போது ஒரு துளசிச் செடி நட்டு வளர்த்தார். அது இன்னும் இருக்கிறது. அதை நமஸ்கரித்து பூஜை செய்து விட்டு அப்புறம் தாம் வேத அப்யாசம் நடக்கிறது.
பல வருஷங்கள் மஹா பெரியவா மஹேந்திர மங்கலம் சென்றிருக்கிறார். அருகே ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் கோயி லுக்கும் சென்று தரிசனம் பண்ணுவார். மலைமேல் உள்ள கோயிலுக்கு செல்ல ஆயிரம் படிகள் . விடுவிடுவென்று படியேறி நடப்பார். இன்னொரு விசேஷம் மகேந்திர மங்கலத்துக்கு ஆதிசங்கரர் விஜயம் செய்திருக்கிறார்.அதனால் மஹா பெரியவா சந்தியா வந்தனப் படித்துறைக்குச் செல்லும் வழியில் உள்ள மடத்தில், மஹா பெரியவா ஸ்ரீஆதி சங்கரர் விக்ரஹம் ப்ரதிஷ்டை பண்ணி இருக்கிறார். அங்கே இப்போது மஹா பெரியவா விக்ரஹமும் உள்ளது.ஒவ்வொருநாளும் ஆதிசங்கரர், மஹா பெரியவா இரண்டு பேருக்கும் பூஜைகள் நடக்கிறது.நாம் எல்லோரும் ஒரு தடவையாவது மஹேந்திர மங்கலம் சென்று மஹா பெரியவா தரிசனம் பெறவேண்டும் என்று ஒரு விருப்பம்.