அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN
சிறப்புலி நாயனார்
”சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்” – என்று பாடுகிறார் சுந்தரர் திருத்தொண்டத் தொகையில். யார் இந்த சிறப்புலி?
”ஓம் நமசிவாய” , என்ற பஞ்சாக்ஷர மந்திரத்தை, ஐந்தெழுத்தை, ஒவ்வொரு நாளும் ஓதி யாகங்கள், ஹோமங்கள் செய்து, சிவனடியார்களை அழைத்து உபசரித்து சேவைகள் செய்து வந்த ஒரு பிராமண சிவ பக்தர் தான் சிறப்புலி நாயனார்.
சோழநாட்டில் ஆக்கூர் என்னும் ஊர் சிறந்த நீர்வளமும் நிலவளமும் கொண்டது. அங்கே ஒரு பழைய சிவன் கோவில் உண்டு. சிவன் பெயர் தான்தோன்றீசுவரர். ஸ்வயம்பு லிங்கம். இன்னொரு பெயர் ஆயிரத்தில் ஒருவர். தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம். காவிரி தென்கரை சிவாலயங்களில் 46ஆவது. சம்பந்தர் தேவாரம் பாடிய ஸ்தலம். கபிலதேவ நாயனார் பாடிய பாடல் பதினொராம் திருமுறையில் உள்ளது. ஆக்கூர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் அமைந்துள்ளது. செம்பொனார் கோயிலுக்கு 5 கி.மீ தூரம். இந்த ஊரில் தான் மேலே சொன்ன பிராமணர் சிறப்புலி நாயனார் அவதரித்தார்.
63 நாயன்மார்களில் ஒருவராக நாம் வணங்கும் ஆக்கூரைச் சேர்ந்த சிறப்புலி நாயனார் சிவனடியார்களை வணங்கி அவர்களுக்கு அறுசுவை உணவு கொடுப்பது வழக்கம்
ஒரு சமயம் 1000 அடியார்களுக்கு உணவளிக்க வேண்டும் என்று மனதில் ஸ்ட்ராங்காக ஒரு எண்ணம்வந்து, இரவும் பகலும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். 999 அடியார்கள் வந்துவிட்டார்கள். இன்னும் ஒரு அடியார் தான் பாக்கி. அவர் வர வேண்டுமே? நேரமாகியும் வரவில்லையே. கண்களில் நீருடன் மனம் கலங்கி, சிறப்புலி தான் தோன்றீஸ்வரை வேண்டினார். பரமேசா, எப்படியாவது என் எண்ணம் நிறைவேற செய்துவிடு. மிகவும் பாடுபட்டு 999 சிவனடியார்கள் வந்துவிட்டார்கள் இன்னும் ஒருவர் வந்தால் எண்ணம் பூர்த்தியாகும். பகவானே… என்று வேண்டினார்.தான் தோன்றீஸ்வரர் கைவிடுவாரா? வெகு நேரம் கிராம எல்லையில் சென்று அங்கும் இங்கும் ஆவலோடு யாராவது ஒரு சிவனடியார் கிடைக்கமாட்டாரா என்று ஏங்கிக்கொண்டிருந்த சிறப்புலி கண்ணில் எதிரே ஒரு வயதான சிவனடியார் தென்பட்டார். நெற்றியில் விபூதி, கழுத்து நிறைய ருத்ராக்ஷம். சிறிய உச்சிக்கு குடுமி. கண்கள் பஞ்சடைந்து கம்பு ஊன்றி மெதுவாக வந்துகொண்டிருந்தார் அந்த சிவனடியார். வெயில் சுட்டெரித்தது.
”ஐயா வரவேண்டும் வரவேண்டும் வாருங்கள் என்னில்லத்துக்கு’ ”ஆக்கூர் இது தானே?’
‘ஆமாம்”’
‘இங்கே சிறப்புலி என்று ஒரு சிவனடியார் சிவபக்தர்களுக்கு உதவுகிறாராமே, உங்களுக்கு அவர் யார் எங்கிருக் கிறார் என்று தெரியுமா, நான் அவரைத் தேடி வந்திருக்கிறேன்”
”சுவாமி, அடியேன் தான் சிறப்புலி . உங்களை உபசரித்து சேவை செய்ய நான் பாக்கியசாலி ”
என்று அந்த முதிய சிவனடியாரை வீட்டுக்கு அழைத்துச் சென்றார் சிறப்புலி. ஆயிரம் சிவனடியார்களுக்கும் அன்று அன்ன பிரசாத தானம் சிறப்பாக வழங்கினார்.
ஆயிரவர்களில் ஒருவராக சிவன் தோன்றியதால் ஆக்கூர் சிவன் ”ஆயிரத்தில் ஒருவர்” என நாமம் கொண்டவர்.ஆலயம் ”தான்தோன்றி மாடம்” என்ற பெயர் பெற்றது. திருக்கடையூர் செல்பவர்கள் மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் செல்லும் பாதையில் 17 கி.மீ. ல் ஆக்கூர் சிவனை தரிசிக்கலாம்.
தான் தோன்றி மாடத் திருக்கோவில் கோசெங்கட் சோழனால் கட்டப்பட்ட யானை ஏற முடியாத கஜப்பிரஷ்ட ஆலயங்களில் ஒன்று.