அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN மூர்க்க நாயனார்
சூதாடி சிவபக்த சேவை
சில பக்தர்களின் செயல்கள் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. ஆயிரக்கணக்கான ஸ்ரீவைஷ்ணவர் களுக்கு அன்னதானம் நிறைய செய்யவேண்டும். அதற்கு பணமில்லை. ஆகவே பணமிருக்கிறவர்களிடத்தில் கொள்ளையடித்தாவது அந்த கைங்கர்யம் தொடரவேண்டும் என்று நினைத்து அதை நிறைவேற்றிய வைணவ பக்தர் ஒரு ஆழ்வார். காலில் செருப்போடு, வாயில் பொன்முகலி ஆற்று நீரோடு, கையில் பன்றி மாமிசத்தோடு ஒரு சிவபக்தன் காளஹஸ்தியில் சிவனை வழிபட்டான். இங்கே செயல் பெரிதில்லை, அந்த பக்தரின் தூய உள்ளம், அதில் நிரம்பியிருந்த பரிசுத்தமான பக்தி தான் கவனிக்கத தக்கது. வடையை எண்ணும்போது (நினைக்கும்போது) துளையை எண்ணுவானேன் (ஒன்னு ரெண்டு என்று எண்ணுவது)_ .
தொண்டை நாட்டில் திருவேற்காடு என்று ஒரு கிராமம். சென்னைக்கு அருகில் உள்ள ஊர். அங்கே பிரசித்தி பெற்ற கருமாரி அம்மன் குடி கொண்டு நம்மை ரக்ஷிக்கிறாளே. எத்தனையோ வருஷங்களுக்கு முன்னால் அங்கே ஒரு சிவ பக்தர் வாழ்ந்தார். வேளாளர் வகுப்பைச் சேர்ந்த அவர் ஓரு விவசாயி..மஹே ஸ்வர பூஜை மணிக்கணக்காக செய்வதும் சிவனடியார்களும் , மற்றவர்களும் பசி என வந்தபோது அன்ன தானம் புரிவதும் அவர் கடமையாக கொண்டவர். அவர் பெயர் மூர்க்க நாயனார். இது அவர் நிஜப்பெயர் அல்ல. அவரது செயலால் கிடைத்த பெயர். அறுபத்து மூன்று நாயன்மார்களில், சிவ பக்தி செல்வர்களுள் ஒருவர். ரொம்ப ஸ்வாரஸ்யமான சிவனடியார். அவர் கதை கேளுங்கள்.
மூர்க்க நாயனார் தன்னுடைய சொத்து பூரா சிவநேயச் செல்வர்களுக்கு அன்னதானம் செய்ததில் கரைந்து போய் வேறு வழி தெரியாமல் சூதாடி பணம் சேர்த்து சிவனடியார்களுக்கு போஜனம் செய்ய தீர்மானித்தவர்.
”வா அப்பா என்னோடு சூதாட்டத்துக்கு வா” என்று பலரை வருந்தி அழைத்து அவர்களை வென்று பணம் சம்பாதித்து அதில் கிடைத்த பணத்தினால் அன்னதான கைங்கர்யம் செய்தவர் . அப்படி அவர் அழைத்தும் எவரும் சூதாட வரவில்லை என்றால் அவர்களை வலுக்கட்டாயப்படுத்தி பங்கேற்க செய்வார். உள்ளூர் காரர்கள் அவரோடு சூதாட விரும்பாததால், அவர் வெளியூர்கள் சென்று ஆட்களை தேடி விளையாடி, வென்று பணம் சேமித்தார். விளையாடாதவர்களை கடுமையாக தண்டிப்பார். அதனால் அவரை எல்லோரும் மூர்க்கர் (பொல்லாதவர், கெட்டவர் ) என்று அழைத்தார்கள். அவரது எண்ணம் உயர்ந்தது, செயல்பாடு மட்டமாக இவ்வாறு நடந்தது வந்தது. இதை பயபக்தி என்று சொல்லாமல் பரபக்தி என்று சொல்லலாம். அதற்கு வரை முறை கிடையாது. இந்த வித பக்தியை பகவானே கவனித்துக் கொள்வார். அவர் எண்ணத்தை பார்ப்பவர். செயலைப் பார்ப்பதில்லை. நாயனாருக்கு எண்ணம் அதன் செயல்பாடு எல்லாமே பகவானின் பக்தர்களை மகிழ்விப்பது ஒன்றே அல்லவா?
ஒரு துறவி என்பதால், நியாயத்திற்கு, தர்மத்திற்கு புறம்பாக செயல்படக்கூடாது. எண்ணத்தின் புனிதம் அதால் கெடக்கூடாது அல்லவா? ஆனால் பரப் ப்ரம்ம ஞானிகள் எண்ணமும் செயலும் புரிபடாது.
ஊர் ஊராக இவ்வாறு சென்று சூதாடி பணம் சேமித்த நாயனார் ஒரு முறை கும்பகோணம் செல்கிறார்.
அங்கே சூதாடும் இடம் ஒன்று உண்டு. அதில் முதலில் நுழைந்து அங்குள்ள சூதாடிகளோடு விளையாடி வேண்டுமென்றே கைப்பணம் அத்தனையும் இழக்கிறார். இதன் மூலம் எதிர்த்து விளையாடுபவர்கள் மேலும் இவரை மொட்டை யடிக்க மேலும் மேலும் விளையாடுவார்கள். சூடு பிடிக்கும். நிறையபேரும், பணமும் சேர்ந்த சமயம் அவர் அனைவரையும் வென்று பணத்தோடு திரும்புவார். இப்படிப்பட்ட கர்மமே கண்ணான நாயனார் மூர்க்க நாயனார்.
சேக்கிழார் பெரிய புராணத்தில் ஒரு பாடலில் இப்படி எழுதுகிறார்:
முதல் சூது தாம் தோற்று
முதல் பணயம் அவர் கொள்ளப்
பின் சூது பல முறையும்
வென்று பெரும் பொருள் ஆக்கிச்
சொற் சூதால் மறுத்தாரைச்
சுரிகை உருவிக் குத்தி
நற் சூதர் மூர்க்கர் எனும்
பெயர் பெற்றார் நானிலத்தில்