ஆனி மஹ அதிசயம் ஒன்று. நங்கநல்லூர் J K SIVAN
சிதம்பரத்தில் ஒரு ஆனி மாதம். அன்று ஆயில்ய நக்ஷத்திரம். மணிவாசகர் கண்ணை மூடி சிவனை தியானித்துக் கொண்டு மனதில் திருவாசகம் உருவாக ஆனந்தமாக அதை வாய் பாடுகிறது. அவர் இருந்தது ஒரு மடம் . அமைதியான அந்த மடத்தில் எதிரே விளக்கேற்றி இறைவனை நினைத்துக்கொண்டு கண்மூடி அமர்ந்திருக்கிறார் மாணிக்கவாசகர். திருவாசகத்தை மணிவாசகர் உருகி உருகிப் பாட அது தெருவில் எதிரொலிக்கிறது. வாசலில் யாரோ ஒரு முதிய பிராமணர் கொம்பை ஊன்றிக்கொண்டு அதைக் கேட்டு விட்டு வெகு நேரம் நிற்கிறார். பிறகு மெதுவாக உள்ளே மடத்திற்குள் வருகிறார்.”ஐயா தாங்கள் தான் திருவாத ஊரரோ? இந்த மடத்தில் இருப்பதாக சொன்னார்கள். நீங்கள் தான் இப்போது பாடினதோ?””ஆமாம் சுவாமி. அதற்கு திருவாசகம் என்று பெயர். அமருங்கள்””ஆஹா அற்புதம் அற்புதம். எனக்கு உதவி செய்வீர்களா?” என்கிறார் முதியவர்.”ஆஹா என்னால் முடிந்ததை சிவனருளால் செய்கிறேனே””நீங்கள் ஆரம்பம் முதல் மறுபடியும் திருவாசகத்தைப் பாடுங்கள், நான் ஓலையில் எழுதிக் கொள்கிறேன்;;”தங்கள் சித்தம் என் பாக்யம்”மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்லச் சொல்ல, முதியவர் எழுதிக் கொண்டார். பெரியவர் எழுதி முடித்து ஓலைச் சுவடிகளோடு சென்றுவிட்டார்.
மறுநாள். ஆனி மஹம். சிதம்பரம் நடராஜர் விக்ரஹத்தின் முன்னால் அர்ச்சக தீக்ஷிதர் ஒரு சில ஓலைச்சுவடிகள் இருப்பதை பார்த்து அதிசயித்து அனைவரையும் அழைத்து காட்டினார். ”என்ன அதிசயம் இது? யார் இதை இங்கே வைத்தது. இதில் என்ன எழுதியிருக்கிறது?” பண்டிதர்கள் ஓலைச் சுவடியை பிரித்து படித்தார்கள் திருவாசக பதிகங்கள். முடிவில் ” மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது” என கையொப்பம் இடப் பட்டிருந்தது.
தீக்ஷிதர்கள், கூட இருந்தவர்கள் அனைவரும் இதைக் கண்டு திகைத்துப் போய் ”ஆஹா ஓஹோ என்று உணர்ச்சிவசப்பட்டு திக்கு முக்காடினார்கள். மாணிக்கவாசகர் தங்கி இருந்த மடத்துக்கு எல்லோரும் ஓடினார்கள். ”ஐயா திருவதை ஊரரே . இந்த அதிசயத்தை கேளும்’. எங்களோடு சந்நிதிக்கு வாரும். உங்களை மணிவாசகர் என்று இதில் பரமேஸ்வரனே பட்டமளித்திருக்கிறார் ‘ என்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்துக்கொண்டு வந்தார்கள். மணிவாசகர் ஒவ்வொரு ஓலைச்சுவடியாக படித்துக்கொண்டே வந்தவர் தான் பாடியது சரியாக இருப்பதைக் கண்டவர், கடைசி ஓலையில் காணப்பட்ட சிவபெருமானின் ஒப்பத்தையும் கண்டு பிரமித்துப் போனார். ” ஹாஹா, இது அடியேன் சொல்லச் சொல்ல ஒரு முதிய அந்தணரால் நேற்று எழுதப் பட்டது தான். வந்த அந்தணர் நடராஜப்பெருமான் தானா? என்னே என் பாக்யம் ” என்று நா தழு தழுக்கச் சொல்லி ஆனந்தக் கண்ணீர் மல்கினார்.
”ஐயா மணிவாசகரே உம்முடைய திருவாசகத்துக்கு அர்த்தம் நீங்கள் எங்களுக்கு சொல்லவேண்டும் என்று தீக்ஷிதர்கள் வேண்டினார்கள்.” அவனருளால் தோன்றிய இந்த வாசகத்துக்கு நான் என்ன அர்த்தம் சொல்லமுடியும். இதோ எதிரே நடனமாடிக் கொண்டு நிற்கிறாரே இந்த பாடல்கள் அனைத்துக்கும் இந்த ஆடலரசர் தான் அர்த்தம்” என்றார் மாணிக்கவாசகர்.
எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டு வாய் பிளந்து பேச்சு வராமல் நின்ற போது இன்னொரு அதிசயம் நிகழ்ந்தது.
தில்லை நடராஜன் விக்ரஹத்தில் இருந்து கண்ணைப்பறிக்கும் ஒரு ஒளி மயம் தோன்றியது. அதனால் காந்தம் போல் கவரப்பட்டு மாணிக்கவாசகர் அதை தொடர்ந்து சந்நிதிக்குள் சென்றார். அப்புறம் என்ன மாணிக்கவாசர் மஹேஸ்வரன் இருவரும் ஒருவரானார்கள் .