SELF IMMOLATION – J K SIVAN

தீயும்  ஸ்திரீயும்  –    நங்கநல்லூர்  J K  SIVAN

தற்கொலைக்கும்  பெண்களுக்கும்  உள்ள தொடர்பு ஆண்களைவிட கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. என்ன காரணம்? தற்காப்புக்காகவா என்றால்  ஆமாம்  என்று  தலை ஆட்டவேண்டி இருக்கிறது. சரித்திரத்தில் சில பக்கங்கள் இது மானம் கௌரவம், கற்பு காரணமாகவும் என்று சொல்கிறது.
சரித்திரத்தின்  சில பக்கங்கள்  ஜீரணிக்க முடியாதவை.  ரத்தம் கண்ணீராக வடியும்  சோக சம்பவங்கள். அப்படி ஒன்று  வடக்கே ராஜபுத்திர ராணிகளின்  வாழ்வில் நடந்த கோரமான  நிகழ்ச்சிகள். ஜௌஹர்  என்றால் கூட்டாக  ஒன்று சேர்ந்து தீயில் மூழ்குவது.  நிர்க்கதியான  ராஜபுத்ர  ராணிகள், குழந்தைகளோடு  தீயைத் தழுவிய சம்பவங்கள். குடும்ப  மானம்,குல  கௌரவம், கற்பு  இவற்றை காப்பாற்றிக்கொள்ள  வேறு  பாதுகாப்போ வழியோ இல்லையே.

1303ல்  நமது பாரத தேசம்  அலாவுதீன் கில்ஜி என்றவனின்  கொடூர மத வெறி ஆட்சியில் சிக்கி தவித்தது.  மேவார் எனும்  ராஜபுத்ர  ராஜ்ஜியம்  ராவல் ரத்தன் சிங் என்ற  ராஜாவால் ஆளப்பட்டது.  மேவாரில் நிறைய  வெள்ளி, துத்தநாகம் போன்ற  உலோகங்கள் இருப்பதை கில்ஜி அறிந்தான். 28.1. 1303ல்  ஒரு பெரும்படை  மேவாரில் சித்தூரை நோக்கி நகர்ந்தது.
மேவார் ராணாவின் படை  அளவில் சிறியது.  ஆனால் வீரத்தில் பெரியது.  சித்தூர் கோட்டையை சூழ்ந்து கொண்ட முகலாய வீரர்களோடு கடும் யுத்தம். எட்டு மாத கால முற்றுகை. கோட்டைக்குள்ளே  உணவு பஞ்சம் ஏற்பட்டது.  ராணாவின் படைகள் உயிருக்காக மட்டும் அல்ல ராஜ்யபற்றினாலும்  கடைசி மூச்சு வரை போராடினார்கள் .  ராணா கொல்லப்பட்டான். வீரர்கள் தோற்றனர்.  உள்ளே  அந்தப்புர  பெண்களுக்கு  உயிரா  மானமா  பிரச்னை.  எல்லோரும் ஒன்று சேர்ந்து மானத்தோடு மறைவோம் என்று முடிவாயிற்று.   அரண்மனைக்குள்  திறந்த வெளியில் தீ மூட்டினார்கள்.  செந்நிற  ஆடை உடுத்தி னார்கள், விருந்துண்டார்கள்,  ஒருவருக்கொருவர்  தாம்பூலம் அளித்தார்கள். திருப்தியோடு  கைகூப்பி ” இதோ உன்னிடம் வருகிறோம், அக்னி மாதா நீயே கதி”  என்று கொழுந்து  விட்டு ஆளுயர எழும்பிய தீயின் நாக்குக்கு தாங்களும்  குழந்தைகளுமாக   இறையானார்கள்.   தோட்டக்காரன் புல்  வெட்டுவது போல் 30000த்துக்கு மேல்  ஹிந்துக்கள் தலை சீவப்பட்டார்கள் என்று அமீர் குஸ்ரு எழுதுகிறார். ராணி பத்மினி கதை மறக்கமுடியாதது.
இன்னொரு ராணி  கர்ணாவதி. ராணா  ஸங்க்ராம் மனைவி.  சித்தூரில்  ஸிசோதியா வம்ச ராணி.  விக்ரம் சிங், உதய  சிங்  என்று இரு பிள்ளைகள். அந்த கால கட்டத்தில் டில்லியில் இஸ்லாமிய ஆட்சியில் லோதி வம்சம் ஆண்டு வந்தது. 1527ல்  பாபருக்கும் ராணா  சங்காவுக்கும் போர் மூண்டு படுகாயத்தோடு ராணா வீரமரணம் எய்தினான். இளவரசன் விக்ரம் சிங்  ராஜாவானான்.   இந்த சந்தர்ப்பத்தில் ராணி கர்ணாவதியை வெல்ல  குஜாரத்த் சுல்தான் குத்புதீன் பகதூர் ஷா மேவார் மேல் படையெடுத்தான்.  ராணி கர்ணாவதி மற்ற ராஜபுத்திர ராஜாக்களின் துணியை நாடினாள் . ஒற்றுமையில்லாதால்  உதவி கிடைக்கவில்லை.  இளவரசர்களை உயிர் தப்ப  அனுப்பிவிட்டு கர்ணாவதி சித்தூர் கோட்டையில் இருந்தாள் . எந்தநேரமும் முகலாயர்கள் உள்ளே வந்துவிடலாம் என்ற நிலை.  பத்மினி வழியில்  கர்ணாவதியும்  அக்னியை சரணடைந்தாள் .
1568ல் அக்பர் காலத்தில் இன்னொரு  ரத்த ஆறு.  ராணா உதய சிங்  மேவார் ராணா. அக்பர்   மேவார் ராஜ்யத்தை  ஆக்ரமிக்கப்போகிறான் என்று ராணாவுக்கு தெரிந்துவிட்டது.  பிப்ரவரி 22 1568 இரவு  முடிவாகி விட்டது. இனி மேவார்  அக்பர் வசம் தான் என்று.  கிட்டத்தட்ட  8000  ராஜபுத்திர பெண்கள் அக்னியில் உயிர்த்தியாகம் செய்தார்கள்.  மறுநாள் போரில் அக்பர் வென்று  40000  நிராயுதபாணிகளான  ஆண்கள் வயோதிகர்கள் ஆகியோர்  கொல்லப்பட்டார்களாம்.
முகம்மதியர்  படையெடுப்பு துவங்கிய காலத்திலிருந்தே  பெண்கள் உயிர்த்தியாகம்  செய்யும்  வழக்கம்  வந்துவிட்டது. 712ல் முகமது பின் காசிம்  சிந்தி  மாகாணத்தில் காலை வைத்தபோது ராஜபுத்ர பெண்கள்  சரணடைவதை விட உயிரை விடுவது மேல் என்று முடிவெடுத்துவிட்டார்கள்.
குவாலியரில்  1232ல்  இல்டுட்மிஷ்  ராஜபுத்ரர்களை எதிர்த்தபோதும் இதே கதை தான்.
1327ல்  கம்பிளி  ராஜ்யத்தில் முஹம்மது பின் துக்ளக்  காலத்திலும்  இதே  தொடர்கதை தான்.
1634ல்  ஒளரங்கசீப் மத்திய பிரதேச பாண்டேலா ராஜ்யத்தில் நுழைந்தபோதும்  இதே கதை தான். அக்னி தேவனே கதி என்று அந்த ராஜ்ய பெண்கள்  தீக்கிரையானார்கள். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *