பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
மெட்ராஸ்லே திடீர் மழை !
ப்ரவசன மேதை, ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியாரை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது. சைவ வைஷ்ணவ பேதம் அறியாதவர் என்பது மட்டும் இல்லை . எம்பார் மஹா பெரியவாளுடைய மஹா மஹா பக்தர்! தன்னுடைய ப்ரசங்கங்களில் மஹா பெரியவாளைப் பற்றி குறிப்பிடாமல் இருந்ததே இல்லை. முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார மாதிரி!
எம்பார் மெட்ராஸில் ஒரு சமயம் ப்ரவசனம் பண்ணிக் கொண்டிருந்த போது, பெரியவாளுடைய கருணையைப் பற்றி பேசுகையில், பல வருஷங்களாக ஒரு துளி கூட மழையே இல்லாத பல இடங்களில், பெரியவாளுடைய கருணையால், மழை பெய்து சுபிக்ஷமான, விஷயங்களைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டிருந்தார். எல்லா இடத்திலும் விதண்டாவாதம் பண்ணும் ஆஸாமிகள் இருக்கத்தானே செய்வார்கள்? அந்த பிரசங்கம் நடக்கும்போதும் சபையில் ஒருவர் திடீரென்று எழுந்தார்.
” ஐயா, நீங்க சொல்ற அந்த மஹா ஸ்வாமிகள் மழையை பெய்ய வெச்சார்….ன்னு சொல்லறீங்களே! அது நெஜம்னாக்கா .இன்னிக்கு இங்கே மெட்ராஸ்ல மழையை வரவழைக்க உங்க பெரியவங்களால் முடியுமா?”
கேள்வியில் நையாண்டி, சவால், எகத்தாளம் எல்லாம் தொனித்தது. சில விஷமிகள் கை கொட்டி சிரித்தனர்.
பெரியவாளுடைய கருணை உள்ளத்தைப் பற்றிப் பேசும் போதும், கேட்கும் போதும் மனஸ் நிரம்பி, கண்களில் நீர் தளும்பும் ஒரு சுகந்தமான பரவஸ நிலை, சாதாரணமான பக்தர்களுக்கே உண்டு என்றால், எம்பார் போன்ற மஹா மஹா பக்தர்கள் எப்பேர்பட்ட நிலையில் இருந்து அதை அனுபவித்திருப்பார்கள் ! உள்ளிருந்து பேச வைப்பதும் ‘அவர்’ தானேகூட்டத்தில் எழுந்து நின்று கேட்ட அந்த ஆசாமிக்கு எம்பார் பதிலளித்தார்:
“ஏன் பெய்யாது? பெரியவாளோட அனுக்ரஹத்தால இன்னிக்கு நிச்சயமா மெட்ராஸ்ல மழை பெய்யும்!” எம்பார் அழுத்தந்திருத்தமாக, அடித்துச் சொல்லிவிட்டார். அப்போது ஒரு உத்வேகத்தில் அப்படி சொல்லிவிட்டாரோ? ஒரு வேளை மழை பெய்ய லேன்னா?…அப்போ மஹா பெரியவாளோட பேருக்கு அல்லவோ ஒரு களங்கம் வந்துடும்! ஹே நாராயணா! அனாவஸ்யமா இப்படி ஒரு விதண்டாவாதத்தை நான் கெளப்பி இருக்க வேண்டாமோ? எனக்கு ஏன் இப்படி புத்தி போச்சு? உள்ளூர ஒரே கவலை எம்பாருக்கு!
ப்ரசங்கம் முடிந்தும் கூட அந்த விதண்டாவாதி அங்கேயே அமர்ந்திருந்தார். மழை வருகிறதா? என்று பார்க்க!
பக்தனை பரிதவிக்க விடுவானா பகவான்? அந்த நேரத்தில் காஞ்சிபுரத்தில் மஹா பெரியவா சுமார் ஒரு மணி நேரம் ஜபத்தில் இருந்தார். மெதுவாக கண்களைத் திறந்து அருகில் இருந்தவர்களிடம் சம்பந்தமே இல்லாத ஒரு கேள்வியைக் கேட்டார்…………
“ஏண்டா?இப்போ மெட்ராஸ்ல மழை பெய்யறதா?”
சுற்றி இருந்தவர்கள் மலங்க மலங்க முழிப்பதைத் தவிர ஒன்றும் பண்ணத் தெரியாமல் இருந்தனர்! ஆம். மெட்றாஸ் முழுக்க அப்போது மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது! மஹா பக்தரான எம்பாரின் கண்களிலும் நன்றிக் கண்ணீர்! ஆனந்தக் கண்ணீர் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது!
அந்த விதண்டாவாதி, ஒன்று .மழையில் தொப்பலாக நனைந்து கொண்டே வீடு போய் சேர்ந்திருப்பார். அல்லது, மழை நிற்க காத்திருந்து லேட்டாக வீட்டுக்கு போய் வீட்டுகார அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார்! யார் கண்டது?
இது எத்தனை கணக்கற்ற மஹா பெரியவா அதிசயங்களில் சாதாரணமான ஒன்று என்று வேண்டுமானால் காரண்டீயாக நான் சொல்வேன்.