பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
”என்ன சொல்றேள். பெரியவா உங்களோடு பேசினாரா, பேசுவாரா?”’இல்லே கோபி, எங்கிட்ட மட்டும் இல்ல, உங்ககிட்டேயும், ஏன், எல்லார் கிட்டேயும் பேசுவார்?”எப்படி சொல்றேள்?””பேசறதுன்னா வாயாலே கத்தி சத்தம் போடறதில்லே சுவாமி””பின்னே?”அவர் கொள்ளை பேச்சு பேசி இருக்கார். நூறு வருஷம்… ஒண்ணு இல்லே ரெண்டு இல்லே. எவ்வளவு பேசியிருக்கார் என்கிறது முக்கியம் இல்லே, எப்படி, என்ன, பேசி இருக்கார்னு அச்சிலே பிரிண்ட் போட்டுருக்கே. யு ட்யூப்லெ அவர் குரலிலேயே நிறைய இருக்கே. அதை படிச்சோ, கேட்டோ கண்ணை மூடி நினைச்சா உங்க காதிலே, மனதிலே, அவர் பேசறது உங்க கிட்டேயே பேசற மாதிரி இருக்காதா? அதை தான் நான் சொல்லிண்டே வரேன். புரியறதா? இதோ கேளுங்கோ அவர் பேசறதை”
” நாம் எதை நினைக்கிறோமோ அது மயமாக ஆகி விடுகிறோம். சுத்த ஸ்படிகமாக விளங்குகிற பரமேச்வரனை நினைத்தால் நம் மனசு சுத்தஸ்படிகமாக ஆகும். அவர் தான் எப்போதும் துக்கமென்பதே இல்லாதவராக ஆனந்த ஸ்வரூபியாக இருக்கிறார். ஆகவே விபூதி ருத்ராக்ஷ தாரணம், பஞ்சாக்ஷர ஜபம், மனதுக்குள்ளே சுத்த ஸ்படிக சங்காச ரூபியாகிய பரமேச்வரனுடைய தியானம், வில்வார்ச்சனை இவற்றை எப்போதும் நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
”ஸ்ரீஅப்பய்ய தீக்ஷிதர் என்று ஒரு மஹான் இருந்தார். இன்றைக்கு நாம் விபூதி ருத்ராக்ஷம் தரித்திருப்பது அவர்களுடைய ப்ரயத்தனத்தின் ப்ரயோஜனம். அவர்கள் 104 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார். விஷ்ணு த்வேஷத்தினால் அப்படிச் செய்யவில்லை. விஷ்ணு பக்தி என்று பேர் வைத்துக்கொண்டு சிவ பக்தியை நாசம் பண்ணி சிவ த்வேஷத்தை வளர்ப்பதை அவர் வெறுத்தார். ‘சிவ த்வேஷத்தை சகிக்க மாட்டேன்’ என்று சொல்லிச் சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்”
‘வேதத்தில் ஸ்வாமியைப் பற்றிச் சொல்லும்போது’ ஒண்ணு புரியும். அதாவது, எதற்கு மேல ஒன்றுங் கிடையாதோ அது தான் ஸ்வாமி. எதற்குக் கீழே ஒன்றுங் கிடையாதோ அது தான் ஸ்வாமி. மிகப் பெரியனவற்றுக் கெல்லாம் பெரியது ஸ்வாமி மிகச் சிறிய அணுவுக்கெல்லாம் அணுவானது ஸ்வாமி என்று வருகிறது. ஸ்வாமி என்பவர் மிகச் சிறியனவற்றுக் கெல்லாம் சிறியதாய் இருப்பவர் என்றால் என்ன அர்த்தம்? அவர் தான் எல்லாமாய் இருக்கிறார். அதனால் அவரைத் தவிர வேறு ஒன்றுமே இல்லாத நிலை வந்துவிடுகிறது. சின்னதும் அவர்தான், பெரியதும் அவர் தான், சின்னதைக் காட்டிலும் சின்னதாக, பெரியதைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறவர் பட்ட கட்டையாக, ஸ்தாணுவாக, இருக்கிறார். அப்படி உட்கார்ந்திருப்பவர் காரியமே இல்லாமல் சாந்தமாக உட்கார்ந்திருக்கும்போது, ஆனந்தமாக உட்கார்ந்திருக்கும்போது அவர் பேர் தக்ஷிணாமூர்த்தி”.
”சிவன் கோயிலுக்குப் போனால் மஹாலிங்கம் கிழக்கே பார்த்துக் கொண்டிருப்பார். அவருக்கு ஈசான்ய (வடகிழக்கு) திக்கில் நடராஜா தெற்கே பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு காலை வேறு தூக்கிக்கொண்டு நிற்பார். அவரை எப்பொழுதும் நாம் ஹ்ருதயத்தில் தியானம் பண்ணிப் பண்ணி, கொஞ்சம் கொஞ்சமாக அவரை நினைத்து, அந்த ஆனந்த தாண்டவ மூர்த்தியின் ஸ்வரூபம் மனத்தில் ஸ்புரிக்கும்படி ஆகிவிட்டால் அதைத் தான் ”சித்தி” ஆகிறது என்று சொல்வார்கள்.
”ஆனந்தத்திலே இரண்டு வகை இருக்கு. பொங்குகிற ஆனந்தம் ஒன்று, அடங்கி அனுபவிக்கின்ற நிலை இன்னொண்ணு . பொங்குகிற ஆனந்த தாண்டவ மூர்த்தியை நடராஜா என்கிறோம். அவன் சடையைப் பார்த்தாலே இது தெரியும். இப்படி இரண்டு பக்கமும் ‘கிர்ர்’ என்று அவன் சுற்றுகிற வேகத்தில் சடை தூக்கிக் கொண்டு நிற்கிறது. ‘விரித்த செஞ்சடையான்’ ஆகி விடுகிறான். அப்போது அவன் கையில் இருக்கும் உடுக்கையிலிருந்து ‘அ இ உண், ருலுக்’ என்பதான பதினாறு ஸூ த்ரங்கள், சப்தங்கள், வருகிறது. ஆனந்த தாண்டவ மூர்த்தியின் கையிலிருந்து வரும்படியான அந்தப் பதினாலு ஸூ த்ரங்களுந் தாம் அதிலிருந்து விரிந்த மஹா பாஷ்ய புத்தகத்தில் அடங்கி இருக்கின்றன. கூத்தாடும்போது பொங்கி வந்த சப்தங்கள் புத்தகத்தில் அடங்கி இருக்கின்றன.
ஆனந்தக் கூத்தின் சப்தங்கள் அடங்கியிருக்கும் படியான புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு சாந்தமாக அமைந் திருக்கும் படியான ஆனந்தத்தோடு உட்கார்ந்திருக்கும் படியான மூர்த்தி தான் தக்ஷிணாமூர்த்தி. இவரும் தெற்குப் பக்கம் பார்த்துக் கொண்டு தான் ஈச்வரனுடைய தென்னண்டைப் பிரகாரத்தில் உட்கார்ந்திருக்கிறார். நடராஜரின் கோலத்தில் சடைகள் நான்கு பக்கமும் விரிந்து கிடக்கின்றன. தக்ஷிணாமூர்த்தி கோலத்தில் அவை அமைந்த ஜடா மண்டலமாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கே சந்திரன் தெறித்துக் கொண்டிருக்கிறது. இங்கே ஆனந்தமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ஒருகால் பூமியிலிருக்க இன்னொரு காலைத் தூக்கிக் கொண்டு அங்கே கூத்தாடிக் கொண்டிருக்கிறார். ஒரு காலின் மேல் இன்னொரு காலைத் தூக்கிப் போட்டுக் கொண்டு இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அங்கே ஆனந்தமூர்த்தி, இங்கே ஞானமூர்த்தி.”
இன்னும் அப்புறம் சொல்கிறேன்.