பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
இதோ ஒரு சுலப வழி.
நாம் மனதாலோ செயலாலோ உடலாலோ பாபம் செய்யாத நாளே கிடையாது. பாபம் செயகிறோம் என்ற நினைவோ, உணர்வோ கூட நமக்கு இல்லாமல் தொடர்ந்து பாபங்களை செய்து கொண்டே இருக்கிறோம். இதிலிருந்து நமக்கு விமோசனம், விடுதலை உண்டு என்று மஹா பெரியவா நம்மை திசை திருப்புகிறார்:
”இந்த உலகில் நாம் எவருமே பாபியாக இருக்க விரும்பவில்லை. ஆனால் பாப காரியமே அதிகம் தொடர்ந்து செய்கிறோம். நாம் எல்லோருமே புண்ணிய பயன் பெறத்தான் விரும்புகிறோம்.ஆனால் புண்ய காரியங்களைச் செய்வதில்லை.
”பாபம் செய்ய யாருமே விரும்பவில்லை. ஆனாலும், கிருஷ்ணா! அவனை எதுவோ பாபத்திலேயே பலாத் காரமாகத் தூண்டிக் கொண்டிருக்கிறதே. அது என்ன?” என்றுஅர்ஜுனன் பகவானைக் கேட்டான்.
“அது தாண்டா அர்ஜுனா, ஆசை, ஆசை என்பது” என்றான் கிருஷ்ணன்.
ஆசையினால் ஒன்றை அடைய முயல்கிறோம். எப்படியாவது அதை அடைந்துவிட வேண்டும் என்பதால் தர்ம அதர்மங்களைப் புறக்கணித்து விடுகிறோம்.அந்த ஆசை நிறைவேறி விட்டால் அதோடு திருப்தி உண்டாகிறதா? என்றால் நிச்சயம் இல்லை. அக்னியில்நெய்யை விட்டால் அது அணைந்தா போகிறது? மேலும் பெரிதாக வளர்கிறது. அப்படியே ஒர் ஆசை பூர்த்தியான மனஸில் இன்னோர் ஆசை கடல் அலை போல் பெரிதாக மூளுகிறது.
சரி, அப்படியானால் ஆசை நிறைவேறா விட்டாலே நல்லது என்று சொல்லலாமா? அப்படியும் இல்லை. ஆசை நிறை வேறா விட்டால் நமக்கு ஆத்திரம் உண்டாகிறது. சுவரில் எறிந்த ரப்பர் பந்து திரும்பி அதே வேகத்தோடு நம் முகத்தில் திருப்பி அடிப்பதைப் போல் நிறைவேறாத ஆசை கோபமாகத் திருப்பி வந்து நம்மை மேலும் பாபம் செய்யத் தூண்டுகிறது ஆகவே ஆசைக்கு அடுத்த படி இந்தக் குரோதத்தைத் தான் பகவான் கீதையில் ‘ஆசையின் விளைவு’ என்கிறார் .
அப்படியானால் பாபம் செய்யாமல் இருப்பதற்கு ஒரே வழி ஆசைகளை அழிப்பது தானோ? இதை எப்படிச் செய்வது? எப்படி முடியும்?
நாம் ஏதாவதொரு காரியம் செய்யாமல் இருக்கவே முடியாது. உடம்பு காரியம் பண்ணாத போது கூட நம் மனசு ஏதாவது காரியம் பண்ணிக் கொண்டே தான் இருக்கும். மனம் எதையாவது ஒன்றை எண்ணிக் கொண்டே யிருக்கும். இது அதன் குணம். உடம்பு, மனசு வாக்கு ஆகியவற்றால் நாம் செய்கிற அத்தனை காரியங்களும் இப்போது நம்முடைய சொந்த ஆசை அபிலாஷைகளையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது..
இதனாலேயே அவை நம்மை மேலும் மேலும் பாபத்திலே கொண்டு போய்த் தள்ளிக் கொண்டே இருக்கிறது. அப்படியானால் இனி காரியம் எதுவுமே செய்யாமல் சும்மா யிருந்துவிடலாமா? ஊஹூம், மநுஷ்ய ஸ்வாபாவம் நம்மை அப்படி யிருக்க விடமாட்டேன் என்கிறது.
சிந்தையை அடக்கி சும்மாயிருக்கின்ற திறம் அரிது என்று தாயுமான ஸ்வாமிகள் சொன்னார்.உடம்பின் காரியத்தைக் கொஞ்சம் நிறுத்தினால் கூட சித்தத்தின் காரியம் நிற்கவே நிற்காது. தான் காரியம் செய்வதோடு உடம்பையும் அந்த காரியத்தில் ஏவி விடுகிறது.
ஆசையை நேராக நிறுத்த முடியவில்லை.காரியத்தையும் நிறுத்த முடியவில்லையே, நமக்கு கதி மோக்ஷமே இல்லையா? இந்தப் பிரச்சனைக்கு (Problem) தீர்வே (Solution)இல்லையா?.
நிச்சயம் வழி இருக்கிறது. அதாவது இப்போது நாம் இருக்கிற நிலைமையில் காரியத்தை அடியோடு நிறுத்தி விட அவசியமில்லை. ஆனால் நாம் சொந்த ஆக்ஞைக்காகவே விருப்பத்திற்காகவே காரியம் செய்து கொள்கிறோம் என்ற நிலைமையை மாற்றி,நமக்கு லௌகிகமாக லாபம் தராத காரியங்களில் ஈடுபட வேண்டும். லோகோபகாரமாகவும் ப்ரோபகாரமாகவும் ஆத்மார்த்தமாகப் பலன் தரும் காரியங்களில் இறங்க வேண்டும். இப்படிப்பட்ட காரியங்களில் ருசியை உண்டாக்கிக் கொண்டு மேலும் மேலும் ஈடுபடுகிறபோது, ஆசைகளும் குறைந்து கொண்டே வரும். பாபம் குறையும் . புண்ணியம் அதிகரிக்கும். எனவே இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன வென்றால் லோகார்த்தமாக பிருக்கு உபயோகப்படும்படியாக காரியம் செய்யப் பழக வேண்டும். ஆசையில்லாமல் செய்வதுதான் புண்ய காரியம். பரோபகாரம் இதம் சரீரம். இந்த உடம்பு கொடுக்கப்பட்டிருப்பதே பிறருக்கு உதவி செய்ய.
நாம் செய்யும் பாபம் நாலு வகை . உடம்பால் பல கெட்ட காரியம், .வாயால் புரளி பேசும் அசத்தியமும், மனத்தினால் கெட்ட நினைவுகள், பணத்தினால் செய்கிற பாபம். அதைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
இப்படி எந்த நான்கினால் பாபம் செய்தோமோ, அந்த நான்காலுமே புண்யமும் செய்ய முடியும். உடம்பைப் பரோபகாரம், பகவானைப் பிரதக்ஷிணம் செய்து, நமஸ்கரிப்பது இவற்றில் ஈடுபடுத்திப் புண்யம் பெறலாம். வாயால் பகவத் நாமாவைத் சொல்லிப் புண்யம் பெறலாம். பணம் சம்பாதிப்பதிலேயே பொழுதெல்லாம் போய் விடுகிறது. இதற்கு நேரமோ அவகாசமோ இல்லையே என்று சொல்லலாம். சம்பாதிப்பது கிருஹஸ்தர்களுக்கு அவசியம் தான். ஆனால் யோசித்துப் பார்த்தால் அதற்கே பொழுது முழுதும் போய் விடவில்லை என்று புரியும் தெரியும். ஒவ்வொருநாளும் எத்தனை வீண் பேச்சு, பரிகாசம், வேடிக்கை, நியூஸ் பேப்பர், யூட்யூப், டிவி இவற்றில் நிறைய பொழுது வீணாகிறது. அதற்கெல்லாம் நேரம் இருக்கிறதே. அதையெல்லாம் பகவான் நாம ஸ்மரணையில் செலவிடலாமே. இதற்கென்று தனியே நேரம் ஒதுக்க வேண்டாமே. நடுநடுவே நேரம் இருக்கும்போது ஆபிஸ் வேலையாக பஸ்ஸிலோ, ரயிலிலோ போகும்போது பகவத் நாமாவை ஜபித்துக் கொண்டே போகலாமே. ஒடி ஒடி சம்பாதிப்பதில் ஒரு பைசா கூட பின்னால் நம்மோடு கூட வராதே. மறு உலகத்தில் செலவழிக்க தேவை பகவான் நாமா ஒன்று தானே. மனசு பகவானின் இருப்பிடம். அதைக் குப்பைத் தொட்டியாக்குகிறோம்.
மனசை சுத்தப்படுத்தி மெழுகி, அதில் பகவானை அமரவைத்து, நாமும் அமைதியாக இருந்து விட வேண்டும். தினமும் ஐந்து நிமிஷமாவது இப்படி தியானம் செய்யணும். லோகமே மூழ்கிப் போனாலும் நிற்காமல் நடக்க வேண்டிய காரியம் இது. ஏனெனில் லோகம் மூழ்கும்போது நமக்குக் கை கொடுப்பது இதுதான்.
பணம் இருந்தால் பகவானுக்காகவும் ஏழைகளுக்காகவும் பலவிதங்களில் தர்மம் செய்து புண்யம் பெறலாம். பாபத்துக்கு இரண்டு சக்தி உண்டு. ஒன்று இப்போது நம்மைத் தவறு செய்ய வைப்பது. இரண்டாவது, நாளைக்கும் நாம் இந்த தப்பையே தொடர்ந்து செய்ய தூண்டுவது. ஒருவன் சிகரெட் , பொடி , குடி, பழக்கம் கொண்டவன் என்றால் அது இன்று ஒரு நாளோடு நிற்காதே. நாளைக்கும், அப்புறமும் கூட அதைச் செய்ய தூண்டும். பழக்க வாசனை இது தான். இந்த வாசனையை மங்க வைத்து, புண்யம் பெற புண்ய வாசனையைப் பெற வேண்டும்.
ஒரு விஷயம். இதற்கு கொஞ்சமும் பயம் வேண்டாம். நம்மைப் போல் பாபம் செய்தவர்கள், செய்பவர்கள் கூட பக்தர்களாகவும், ஞானிகளாகவும் ஆகியிருப்பது நமக்கு தெரியும். பாபிகளை ரக்ஷிக்காவிட்டால் ஈஸ்வரனுக்கு என்ன பெருமை? நம்மை பாபத்திலிருந்து மீட்பதால் தான் அவனுக்குப் ‘பதித பாவனன்’ என்ற நாமம்.
“என்னைச் சரணடைந்து விடு. நான் உன்னை எல்லா பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன். ‘ ஸர்வ பாபேப்யோ மோக்ஷமிஷ்யாமி மாசுச. பயப்படாதே” என்று தீர்மானமாக கீதையில் அபய வாக்குத் தருகிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.
ஆகவே தைரியமாக இருப்போம். எத்தனை சுற்றுச் சுற்றுகிறோமோ அத்தனை சுற்றுகள் திருப்பிச் சுற்றினால் தான் கயிற்றின் கட்டு அவிழும். கயிறு கழலும். பாப வாசனை அவ்வளவும் தீர அத்தனை புண்ய வாசனை தேவை. அப்படிச் செய்தால் பாபக் கயிற்றின் முடிச்சு அவிழும். பொறுமையாக பகவானை நம்பி நம்முடைய தர்மத்தைச் செய்தால் நிச்சயம் பகவான் நமக்குக் கை கொடுப்பான்.
மனம் வாக்கு காயம் மூன்றையும் கொஞ்சம் கொஞ்சமாக இந்திரிய வியவகாரதிலிருந்து திருப்பி, பகவானிடம் செலுத்தி பழகுவதற்காகத் தான் இத்தனை மதங்களும் உள்ளன. ஒவ்வொரு ஜீவனும் இந்திரிய சுகங்களுக்காகச் செய்கிற பாபங்களிலிருந்து அவனை மீட்பதற்காகத்தான் ஒவ்வொரு மஹானும் பல மதங்களில் அவ்வப்போது தோன்றுகிறார். . பாபத்தால், இந்திரிய சுகத்தினால் பெறும் ஆனந்தம் ரொம்பவும் அற்பமானது, தற்காலிக மானது. பரமாத்மாவோடு சேர்வது தானப்பா நிரந்தர ஆனந்தம் என்று சொல்லி, சம்ஸாரத்திலிருந்து நம்மை விடுவித்து பகவானிடத்தில் சேர்ப்பதுதான் ஒவ்வொரு மதத்தின் லக்ஷியமாகும் .