PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN

மஹா பெரியவா போற்றிய பெரியவா

நாம் யாரைப் பெரியவா என்று மதிக்கிறோம்?. ஒரு வார்த்தையில் சொல்வதானால். நம்மைப்போல் இல்லாதவரை எனலாம். எந்தவிதத்தில்?
எல்லா விதத்திலும் தான் . அப்படியிருக்கும்போது பெரியவா மட்டுமில்ல, மஹா பெரியவா என்றால் எப்படிப்பட்டவராக இருப்பவர் என்று வார்த்தையில் வர்ணிக்கமுடியுமா”?.
சரி, ஒரு படி மேலே போவோம். அப்படிப்பட்ட உயர்ந்த மஹா பெரியவாளே வேறு ஒருவரை ‘பெரியவா’ என்று அழைத்தாரென்றால், அந்த மஹா புருஷர் எத்தனை பெருமைக்கு உரியவராக இருந்திருக்க வேண்டும்!!
காஞ்சி மஹா பெரியவா குறிப்பிட்ட அந்த பெரியவா தான் ‘மன்னார்குடிப் பெரியவா’. மஹா பெரியவா அவரைப்பற்றி தானே என்ன சொல்கிறார் என்பதை சுருக்கித் தருகிறேன்.
…………
”’கொஞ்சம் வேடிக்கை கலந்த மாதிரி இந்த விஷயத்தைப் பற்றி ஒரு பெரியவர் ஸ்லோகம் பண்ணியிருக்கிறார்.
‘பெரியவா’ என்று சொன்னேனே, அவரைப் ‘பெரியவா(ள்) ‘என்று தான், அவர் பெயரைச் சொல்லாமல், மரியாதையாகக் குறிப்பிடுவது வழக்கம். என் மாதிரி ஒரு மடாதிபதியாக இருப்பவரைப் ‘பெரியவா’ என்று சொல்வதில் விசேஷமில்லை. ஸ்வயமான யோக்யதை இல்லாவிட்டாலுங் கூட, நாங்கள் வகிக்கும் ஸ்தானத்தினாலேயே எங்களுக்குப் பெரியவா பட்டம் கிடைத்துவிடும்.
ஆனால் நான் சொல்கிற ‘பெரியவா ‘ எந்த ஒரு மடாதிபதிபதியும் இல்லை. அதற்கடுத்த படியாக லோக கௌரவத்தைத் தன்னுடைய ஆஸ்ரமத்தினாலேயே ஸம்பாதித்து விடுகிற (மடாதிபதியாக இல்லாத) ஸந்நியாஸி கூட இல்லை. வாழ்நாள் முழுதும் க்ருஹஸ்தராகவே வாழ்க்கை நடத்தியவர். ஆனால் “குலபதி” என்று புகழக் கூடிய அளவுக்கு ஏராளமான சிஷ்யர்களுக்கு குரு குலம் நடத்திப் பல மஹா வித்வான்களை உருவாக்கிய மஹா மஹோபாத்யாயராக இருந்தவர். ஸந்நியாஸிகளுங் கூட வந்து அவரிடம் பாடம் கேட்டுக் கொண்டு போகும்படியான அளவுக்கு பெரும் புகழ் பெற்ற பாண்டித்யத்தோடு கூடிய குரு என்பது மட்டும் அவர் பெருமையல்ல. உயர்ந்த குண வானாகவும் இருந்தார். சிவ பக்தியில் சிறந்தவர். பரம ஆசார அநுஷ்டானத்தோடு கூட ரொம்பவும் சீலராக வாழ்ந்த பெருமையும் அவருக்கு உண்டு. ஞானம், சீலம் இரண்டிலும் பெரியவராக இருந்த அவரைத்தான் ‘பெரியவா’ என்றே லோகம் சொல்லிற்று. அடையாளம் தெரிவதற்காக, அவர் வாழ்ந்து வந்த ஊரின் பெயரைச் சேர்த்து “மன்னார்குடிப் பெரியவாள்”என்று சொல்வார்கள்’.

உயர்ந்த அறிவு, சிறந்த ஒழுக்கம் இரண்டும் கூடிய அவர் 19-ம் நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டு ஆரம்பம் வரை ஸுமார் தொண்ணூறு வயசு ஜீவ்ய வந்தராக இருந்து ‘ஞான-சீல -வ்ருத்தர்’ என்கிற புகழ்ச் சொல்லுக்கு முற்றிலும் உரியவராக இருந்தார். மஹானாகிய அப்பைய தீக்ஷிதரின் வம்சத்தில் வந்த அவருடைய சர்மன் பெயர் த்யாகராஜன் என்பது. அவர் யாகங்கள் செய்ததால்’ த்யாகராஜ மகி’என்று தம்முடைய நூல்களில் தம்மைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பார். ‘மகம்’ என்றால் யாகம். சின்ன வயசிஸில் அவரை வீட்டிலே பெரியவர்கள் கூப்பிட்ட பேர் ராஜு. அதனால் ராஜு சாஸ்திரிகள் என்றும் சொல்வதுண்டு. ஆனால் பேச்சு வழக்கில் ‘மன்னார்குடிப் பெரியவா’ தான் பிரசித்தம். .ஊர் உலகமெல்லாம் பெரியவா என்று அழைத்தாலும் ரொம்பவும் அடக்கத்தோடு எளிமையாகஇருந்தவர் .
அவருடைய குருமார்களில் கோபாலாசாரியார் என்பவர் ஒருவர். பிற்காலத்திலே இந்த கோபாலாசாரியாரின் புத்திரர் மன்னார்குடிப் பெரியவாளிடம் படித்த மாணவர்களில் ஒருவரானார். இவர் பெரியவாளை விட வயஸில் சிறியவர். அதோடு சிஷ்யர். அப்படியிருந்தும், குரு புத்ரனுக்கு மரியாதை காட்ட வேண்டும் என்ற வழக்கத்தை அநுஸரித்து இவர் வகுப்புக்கு வரும்போது இவருக்கு குரு வான மன்னார்குடிப் பெரியவாளே எழுந்திருந்து நிற்பாராம்!

பக்தி ச்ரத்தை, ஆசாரம், ஸத் குணங்கள்,அபாரமான வித்வத் இத்தனையும் பெற்று, ஸந்நியாஸிகளுக்கும் பாடம் சொன்னவரானாலும் அவர் கடைசி மட்டும் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளவில்லை. “நமக்கு ஏது அவ்வளவு யோக்யதை?” என்றே சொல்வாராம். அத்தனை அடக்க ஸம்பத்து!

அவருக்கு மஹா மஹோபாத்யாய பட்டம் சூட்டியதிலேயே இப்படி (அவரது அடக்க குணத்தைக் காட்டுவதாக) ஒரு விஷயம் உண்டு.
1887-ல் விக்டோரியா ராணி பட்டமேறிய கோல்டன் ஜூபிலி விழா நாடெங்கும் கொண்டாடிய போது, இந்தியாவின் பழைய வழக்கத்தை அநுஸரித்து இனிமேல் வெள்ளைக்கார ராஜாங்கமும் பண்டிதோத்தமர்களுக்கு அளிக்கும் ‘மஹா மஹோ பாத்யாய’ பட்டம் கொடுக்க வேண்டு மென்று தீர்மானம் பண்ணினார்கள். அதன் பிரகாரம் முதல் வருஷமே வடக்கத்தி வித்வான் ஒருவருக்கும்,தெற்கத்தி வித்வான் ஒருவருக்கும் டைட்டில் தருவது என்று முடிவானதும் தெற்கத்திக் கார பண்டிதராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நம்முடைய மன்னார்குடிப் பெரியவாள் தான். ஆனாலும் அவருக்கு இந்த விஷயம் தெரிவிக்கப் பட்டபோது, ‘பூர்வ காலத்தில் மஹா பெரிய வித்வான்களுக்கே கொடுத்து வந்த இந்தப் பட்டம் எனக்கா? எனக்கு அவ்வளவு யோக்யதை இல்லவே இல்லை’என்று சொல்லிச் சும்மா இருந்து விட்டாராம். பட்டம் வாங்கிக் கொள்ள அவர் டில்லி தர்பாருக்குப் போகவேயில்லை! அந்த விஷயத்தை மறந்து விட்டுத் தம் பாட்டுக்குப் பாடம் சொல்வது, சிவ பூஜை பண்ணுவது என்று இருந்து விட்டார். வெள்ளைக்கார ராஜாங்கத்தில் இவருக்காகக் காத்துக் காத்துப் பார்த்தார்கள். டில்லிக்குப் போகா விட்டாலும் கிட்டத்தில் இருக்கிற தஞ்சாவூருக்காவது போய் கலெக்டரிடமிருந்து ”டைட்டிலை ” ராஜ மரியாதையோடு பெறுவாரா என்று காத்துப் பார்த்தார்கள். விநய ஸம்பன்னரான இவருக்கோ அந்த எண்ணமே இல்லை ! அப்புறம் கலெக்டர் அந்தப் பெரிய பட்டத்துக்கான ஸன்னதுகளை அவருடைய வீட்டுக்கே அனுப்பி வைத்த போதுதான் மறுக்க முடியாமல் ஏற்றுக்கொண்டார்.

வித்யை இருந்தால் தலைக்கனமும் இருக்கத்தான் வேண்டும் என்றில்லாமல் நேர் வித்யாஸமாக இருந்தார். வித்யாரம் பத்திலேயே விநாயகரை வந்தனம் செய்வதாலும், எந்த சாஸ்த்ரமா யிருந்தாலும்அதற்கான புஸ்தகத் தொடக்கத்திலேயே பிள்ளையார் ஸ்துதிக்கப்படுவதாலும் உண்மையான வித்வா னொருவன் எப்படியிருக்க வேண்டும் என்று காட்டிய அந்தப் பெரியவரைப் பற்றிச் சொல்வ தெல்லாமும் விக்நேச்வர ப்ரீதி தான். நாம் எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு எங்கோ போய் விட்டதாக ஆகாது.””

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *