மஹா பெரியவா மணி மொழிகள்: – நங்கநல்லூர் J K SIVAN
மஹா பெரியவாவின் மணி மொழிகளை அடிக்கடி அனுபவிக்கும் பாக்யம் நமக்கு இருக்கிறது. அதை எதற்கு கோட்டை விட வேண்டும்? என் ஆனந்தத்தை, நான் அனுபவித்த இன்பத்தை உங்களுடன் மீண்டும் சுகமாக ரசிக்கிறேன்:
சொல்லுங்கோ மஹா பெரியவா? அடிக்கடி சத் சித் ஆனந்தம் என்று கேட்கிறேன், திருப்பி சொல்கிறேன். அதை கொஞ்சம் எனக்கு புரியும்படியாக சொல்லுங்கோ என்று நமஸ்கரித்து வேண்டுகிறேன்.
‘சொல்றேன் கேளுடா;
‘சத் சித் ஆனந்தம்’ என்று நீ சொல்கிறபடி நானும் கேட்டிருக்கிறேன். சச்சிதானந்தம் என்று சொல்லிக் கொண்டும் இருக்கிறேன். இதற்கு அர்த்தம் என்ன? அநேகம் பேருக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தாலும் ஆராய்ந்து புரிந்து கொண்டிருப்பவர்கள் சில பேர்தான்.
‘சத்’ என்பது ஒரு புறம் இருக்கட்டும். ‘சித்’ என்பது தான் ஞானம். மௌன குரு தக்ஷிணா மூர்த்தி காட்டிக் கொண்டு இருக்கும்படியான முத்திரைக்குச் சின்முத்திரை என்று பெயர். ஆனந்தம் பொங்கி அடங்கும் போது ஞானம் பூர்ணமாக நிறைந்திருந்தால் அதுதான் சாந்தம். ஞானம் நிறைந்தவனிடம் ஆனந்தமும் நிறைந்திருக்கிறது என்று அர்த்தம். ஞானம் நிறைந்து ஆனந்தமும் நிறைந்து, அடங்கியிருக்கும் படியான தக்ஷிணாமூர்த்தி சந்நிதானத்தில்தான் அவரைப் போலவே உட்கார்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு பெரியோர்கள் ஓம் நமசிவாய என்று பஞ்சாக்ஷர ஜபம் பண்ணுவார்கள். ஜபம் பண்ணுவது தக்ஷிணாமூர்த்தி சந்நிதானத்தில் தான் எப்போதுமே. தரிசனம் பண்ணுவது ஆனந்தக் கூத்தன் நடராஜமூர்த்தி சந்நிதானத்தில்.
பிக்ஷாடனமூர்த்தி விக்ரஹம் பார்த்திருக்கிறீர்களா? அதோமுகமாக இருண்டு விரலைக் காட்டிக் கொண்டிருக்கும்படியான முத்திரையைச் சின்முத்திரை என்று சொல்லுகிறார் என்று நினைக்கிறேன். பிக்ஷாடன மூர்த்தியின் ஒரு கையில் இரண்டு கால்களையும் தூக்கிக்கொண்டு ஒரு குட்டிமான் நிற்கும். இவர் கையை வைத்துக் கொண்டிருக்கும்படியான முத்திரையை அது பார்த்துக் கொண்டு நிற்கிறாற்போல இருக்கும்.
‘இதோ உனக்கு ஆகாரம்இருக்கிறது பார்’ என்று ஸ்வாமி சொல்வது போல் அந்த இரண்டு விரலையும் அதனிடம் காட்டிக் கொண்டிருப்பது போல இருக்கும். ஒருபுல்லை அதற்குக் காட்டுகிற மாதிரி, ‘உனக்கு ஒரு வஸ்து இருக்கிறது’ என்று சொல்கிற மாதிரி இருக்கிறது. இப்படி அனேகம் மூர்த்திகள்.
பாபத்தை ஒரே க்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. அதற்கு இரண்டு எழுத்துக்களாலான ஒரு பெயர். ”சிவ” எனும் நாமம். சகல வேதங்களுக்கும் மத்தியில் இருப்பது. அதுவே வேதங்களின் ஜீவரத்னம். கோயிலில் மஹாலிங்கம் போலவும், தேகத்தில் உயிர் போலவும் ”சிவ”எனும் நாமம் வேதங்களின் மத்தியில் இருக்கிறது. அதை வாக்கினால் சொல்ல வேண்டும். யார் சொல்ல வேண்டும்? மனிதனாகப் பிறந்தவன் சொல்ல வேண்டும். ஊமையாக இல்லாத எவனும் சொல்லலாம். அதைச் சொல்லுவதற்காகத் தான் நாக்கு இருக்கிறது. மனிதன் அதைச் செய்யாவிட்டால் ‘நாக்கினால் செய்யக் கூடியதை இவன் செய்யவில்லை. இவனுக்கு நாக்கு கொடுத்தது பிரயோஜனமில்லை’ என்று பரமேச்வரன் திரும்பி வாங்கி விடுவான். ஆகவே அதை எல்லோரும் சொல்லியாக வேண்டும். அதை ஒரு தரம் சொன்னால் போதும். வேறொரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே அது பாபத்தைப் போக்கிவிடும். பஞ்சாக்ஷரம் எனும் ஐந்தெழுத்து மந்திரம் ஓம் நமசிவாய..