விமலியோடு ஒரு டீல். deal — நங்கநல்லூர் J K SIVAN
பிருந்தாவனத்தில் எங்கும் பசுக்கள், கன்றுகள், பால், தயிர், குடங்கள், வெண்ணெய் சட்டிகள், குடிசைகள் தான் அதிகம். மண் தெருக்களில் எங்கும் சுவர்களில் பசுஞ்சாணங்களால் தயாரிக்கப்படும் விரட்டிகள் வட்ட வட்டமாக கரும்பச்சை நிறத்தில் அழகூட்டின. கிணறுகள் குளங்கள் சோலைகள் வனங்கள் துளசி செடிகள் மற்ற இடத்தை நிரப்பின.ஒருநாள்….காலை வெயிலில் சூரியன் மேலே ஏறி உஷ்ணத்தை பரப்பும் சமயம். ஒரு கோபி வீட்டின் பின்னால் தோட்டம் அருகில் ஒரு பள்ளத்தில் நிறைய பசும் சாணம், சிறு சிறு காய்ந்த சுள்ளிகள், வாசனை தரும் அகில் கட்டை, உமி, சருகுகள், சந்தன கட்டைகளும் எல்லாம் கலந்து நிறைய சாணம் நிரப்பி இருக்கிறாள். அதை சற்று தூரத்தில் இருந்த பெரிய மாளிகையின் பக்க சுவர்களில் விரட்டி தட்ட வேண்டும். கிருஷ்ணன் அவள் வீட்டில் வாடிக்கையாக வெண்ணை வேட்டையாடுபவன். அந்த நேரம் பார்த்து அவன் அங்கே வந்து நிற்கிறான்.
”அடே கிருஷ்ணா, வாடா இங்கே, எனக்கு உதவி செய்கிறாயா?” விமலி என்கிற கோபி அவனை கேட்கிறாள்.
‘சொல்லு அத்தை, உனக்கு நான் என்ன செய்யவேண்டும்?
புல்லாங்குழலை இடுப்பு வஸ்த்ரத்தில் செருகிக்கொண்டு கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு கேட்டான் கிருஷ்ணன்.’
‘இந்தா, இந்த கூடையில் சாணத்தை நிரப்பி என்னிடம் கொண்டு வந்து கொடு. நான் அதோ அந்த மாளிகை சுவற்றின் அருகில் நின்று சுவற்றில் வட்டமாக வீசி விரட்டி தட்டவேண்டும்.
”போ போ, இதற்கெல்லாம் வேறே ஆள் பார், நான் செய்யமாட்டேன்”
”கிருஷ்ணா, உனக்காக நான் ஸ்பெஷலாக புது பசு வெண்ணெய் கெட்டியாக திரட்டி பந்து பந்தாக சட்டியில் வைத்திருக்கிறேன், உனக்கு பிடிக்கும் என்று நினைத்து நிறைய சேர்த்து வைத்திருக்கிறேன். அது உனக்கு வேண்டாமா? வெண்ணெய் உனக்கு பிடிக்காதா?’
‘அப்பிடியா, அதை ஏன் முன்னேயே சொல்லவில்லை, எங்கே கூடை, கொடு என்கிட்டே’
‘எவ்வளவு கூடை சாணி நீ எனக்கு நிரப்பி கொண்டு வந்து கொடுக்கிறாயோ, அத்தனை உருண்டை வெண்ணெய் உனக்கு” ‘
‘எவ்வளவு கூடை சாணம் நிரப்பி தூக்கிக் கொண்டு போய் கொடுத்தான் என்று கணக்கு வேண்டாமா? கோபி படிக்காத வளானாலும் ரொம்ப கெட்டிக்காரி. கிருஷ்ணனிடமே வேலை வாங்குபவளாயிற்றே. வேக வேகமாக கூடைகளை நிரப்பி கொண்டு போய் கொடுத்தான்
கிருஷ்ணன்
.’எவ்வளவு கூடை தூக்கிக் கொண்டு வந்தேன் என்று என்னிடம் கணக்கு இல்லையே என்ன செய்வது?’ என்று கேட்டான் கிருஷ்ணன்.
”கிருஷ்ணா, நான் கணக்கு வைத்திருக்கிறேன். உன் நெற்றி கன்னத்தையே கணக்கு நோட்டாக பண்ணிவிட்டேனே ,உனக்கு தெரியாதா? ஒவ்வொரு கூடை சாணி நீ கொண்டு வந்து கொடுக்கும்போதும், அதில் இருந்து ஒரு சிறு பொட்டு எடுத்து உன் நெற்றி கன்னத்தில் எல்லாம் இட்டு வைத்திருக்கிறேன். கடைசியில் எண்ணிப்பார்த்து அத்தனை உருண்டை வெண்ணை உனக்கு தருவேன்.’
‘எவ்வளவு கெட்டிக்காரி நீ? ” என்று அதிசயித்தான் கிருஷ்ணன். அவன் முகம் பூரா சாணிப்பொட்டு.
சாணி எல்லாம் விரட்டி தட்டியாகிவிட்டது. \
”எங்கே எனக்கு நீ தரவேண்டிய வெண்ணை உருண்டைகள். நானும் நண்பர்களும் யமுனைக்கு ஓடிச்சென்று அங்கே விளையாடிக் கொண்டே சாப்பிடவேண்டும்.சீக்கிரம் கொடு.”
”வெண்ணையா? என்ன சொல்கிறாய் நீ கிருஷ்ணா?”
”நான் எத்தனை கூடை சாணி கொண்டுவந்து கொடுத்தேனோ அத்தனை உருண்டை வெண்ணெய் நீ தரவேண்டுமே’
”வீட்டுக்குள் வா”
வரும் வழியில் கிருஷ்ணன் முகம் பூரா சாணிப் பொட்டுகளை பார்த்த மற்ற கோபியர்கள் கைகொட்டி சிரித்தார்கள்.
‘விமலா நீ ஏண்டி இப்படி பண்ணியிருக்கிறாய் அழகிய கிருஷ்ணன் முகத்தை?”
‘நீங்கள் எல்லாம் ஏன் என்னைப் பார்த்து சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டான் கிருஷ்ணன்.’
‘போடா, நீயே போய் கண்ணாடியில் உன் முகத்தைப் பார்” என்றாள் ஒரு கோபி.
தன் முகத்தைப் பார்த்த கிருஷ்ணனுக்கு அடையாளம் தெரியாமல் சாணிப்பொட்டுகள். நீரால் முகத்தை அலம்பிக்கொண்டு வந்தான்.
”எங்கே நீ தரவேண்டிய வெண்ணெய் . அதை முதலில் கொடு” என்று கேட்டான் கோபி விமலியிடம்.
‘என்னடா வெண்ணை, என்ன ஒப்பந்தம்? எதற்கு உனக்கு நான் உனக்கு வெண்ணெய் தரவேண்டும்?”
”மறந்து போய்விட்டாயா அதற்குள்? நான் எத்தனை கூடை சாணி உனக்கு தூக்கிக்கொண்டு வந்து கொடுத்தேனோ அத்தனை உருண்டைகள் நீ தரேன் என்று சொன்னாயே? என் முகத்தில் அத்தனை சாணிப்பொட்டுகள் வைத்தாயே ‘
‘கிருஷ்ணா, எங்கே அந்த பொட்டுகள்? இருந்தால் தானே எண்ணிப்பார்த்து தர முடியும். எங்கே உன் முகத்தில் ஒரு சாணிப்பொட்டும் இல்லையே. உனக்கு நான் வெண்ணை எதுவும் தரவேண்டியதில்லை’
சிறுவன் கிருஷ்ணன் கண்கள் கலங்கியது. என்ன செய்வதென்று தெரியவில்லை. நாக்கு தழு தழுத் தது.அழுகை வந்தது.விமலை அவனை அணைத்துக்கொண்டாள்.
‘ கிருஷ்ணா, அழாதேடா, உன்னோடு விளையாடினேன். வா உள்ளே உனக்கு வெண்ணை சட்டி இருக்கும் இடம் தான் அத்துப்படியாயிற்றே. வேண்டியதை நீயே எடுத்துக்கொள்”
கண்ணைத் துடைத்துக்கொண்டு உள்ளே ஓடிய கிருஷ்ணன் நொடியில் சட்டியில் இருந்த வெண்ணை உருண்டைகளை ருசி பார்க்க ஆரம்பித் தான். அடுத்த கணமே சட்டியோடு கிருஷ்ணன் யமுனை நதிக்கரைக்கு ஓடினான். அங்கே வழக்கம்போல் அவன் நண்பர்கள் அவனுக் காக காத்திருப்பார்கள். இன்று வெண்ணெய் வேட்டை திருடாமல் உழைத்தே சம்பாதித்த தாயிற்றே.
கிருஷ்ணன் அங்கே இருப்பான் என்று அகாசுரன் ஓடிவந்தபோது அவனுக்கு கிருஷ்ணன் கையால் மரணம் என்று தெரியவில்லை. ஒருவேளை கிருஷ்ணன் வெண்ணெய் சாப்பிட்டு பலம் சேர்த்துக்கொண்டது அதற்காகவோ என்னவோ, திருடன் வெளியே எதையும் சொல்ல மாட்டானே.