ARUPATHTHU MOOVAR – J K SIVAN

அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN
நமி நந்தி அடிகள்

நமி நந்தி சோழ நாட்டில் பிறந்த ப்ராமண சிவனடியார். பிறந்த ஊர் ஏமப்பேறூர். சிவனடியார்களுக்கு சேவை செய்வதில் பெரும் விருப்பமுடையவர். அருகே பெரிய ஊரான திருவாரூர் ஆலயத்தில் தியாகராஜன் மற்றும் வன்மீகநாதரை வழிபடும் பக்தர். கோவிலில் சந்நிதிகளில் அளவில்லா விளக்குகள் ஏற்றி தீபாலங்காரம் செய்ய எண்ணினார்.

ஒருநாள் மாலை வேளையில் அருகிலுள்ள சமணர் வீடுகளில் சென்று வன்மீகநாதருக்கு தீபம் ஏற்ற எண்ணெய் கேட்டார்.

”நல்ல வேடிக்கை இது? உங்கள் கடவுள் சிவன் கையில் அக்னி வைத்திருக்கிறார். அவரிடமே தீ இருக்கும்போது தனியாக அவருக்கு தீபம் எதற்கு, அதற்கு எண்ணெய் வேறு வேண்டுமோ?” என்று கேலி செய்து ஏளனம் செய்தார்கள்.

நமிநந்தி ஏழை. மனம் உருகி சிவன் முன் நின்றார். கண்களில் ஆறு.

” தியாகராஜா என் நிலையைப் பார்த்தாயா, உன் கோவிலில் எல்லா சந்திதிகளிலும் தீபம் வைக்க விரும்பினேன். எவரும் உதவ மறுத்துவிட்டார்கள். என் செய்வேன்?”
அப்போது ஒரு குரல் அவருக்கு மட்டும் கேட்டது.

‘ நமி நந்தி, எதற்காக எண்ணெய் இல்லை என்று வருந்துகிறாய்? எதிரே பார்த்தாயா எவ்வளவு பெரிய கமலாலயம். சமுத்திரம் போல் காட்சி தருகிறது. எண்ணெய்க்கு பதிலாக அதன் நீரை எடுத்துக் கொண்டு போய் உன் விருப்பப்படி தீபங்களை ஏற்று”

ஆச்சர்யத்தோடு நமிநந்தி குளத்து நீரை செம்புகளில் நிரப்பி எல்லா விளக்குகளிலும் எண்ணெய் போல் நிறைய நீரை ஊற்றி தீபங்களையேற்றினார். பிரகாசமாக எல்லா தீபங்களும் விடிய விடிய எரிந்தது.

இன்னொரு சமயம். திருவாரூரில் வீதிவிடங்கப் பெருமான் திருவிழா கோலாகலமாக இரவெல்லாம் நடந்தது. கூட்டம் நெரிசல். பலரைத் தொட்டதால் இறைவன் தொண்டு செய்வதற்கு அந்த தீட்டு தடையாக ஆகிவிட்டதே என்று எண்ணி அன்று இரவு வீட்டுக்குள் செல்லாமல் வெளியே நின்றார். நல்ல அசதி, தூக்கம் கண்ணை சுழற்றியது. வெளியே அமர்ந்து அப்படியே சாய்ந்து அயர்ந்து தூங்கி விட்டார்.

கனவில் சிவபெருமான் தோன்றினார் . ”நமி நந்தி. உன் எண்ணம் தவறு. திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவரும் சிவகணங்களே. எவரைத்தொட்டாலும் உன் தூய்மை கெடாது”என்று கூறியது போல் இருந்தது. நமி நந்தி சட்டென்று கண் விழித்தார். அடாடா நான் என்ன தப்பு பண்ணிவிட்டேன் என்று விடிந்ததும் திருவாரூருக்குச் சென்று அவ்வூரில் பிறந்தவர்களை எல்லாம் சிவகணங்களாகக் கண்டு வணங்கி, பின்னர் தம் குடும்பத்துடன் அவர் திருவாரூரில் குடிபுகுந்து சிவப்பணி செய்து முத்தி அடைந்தார். இது தான் நமி நந்தி சரித்திரம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *