ARUPATHTHU MOOVAR 19 – J K SIVAN

அறுபத்து மூவர்  –  நங்கநல்லூர்  J K  SIVAN 

திருக்குறிப்புத் தொண்ட  நாயனார்

தமிழ் வளர காரணமானவர்கள்  மூவேந்தர்களில்  சோழர்களும் பாண்டிய ராஜாக்களும் தான் அதிகம். சேர ராஜாக்கள்    பெயர் அந்த அளவுக்கு  எடுபட வில்லை.   மூவேந்தர்களில் கணக்கில் வராத பல்லவ ராஜாக்கள்  பாதி  பௌத்தமும் பாதி சிவ பக்தர்களாகவும்  இருந்ததுடன் அநேக  சிவாலயங்களை எழுப்பியுள்ளார்கள் .


காஞ்சிபுரம்  வடக்கே  நாளந்தா  பல்கலைக்கழகம் மாதிரி. அநேக பண்டிதர்களின் உறைவிடமாக இருந்தது.  வடமொழியும் தென்மொழியும் அங்கே ஏராளமாக  மணம்  வீசியது.  வடக்கே காசியில் எப்படி ஸமஸ்க்ரித பண்டிதர்கள்  கூடினார்களோ அது மாதிரியே  காஞ்சியில்   எல்லோரும்  ஒன்று சேர்ந்து   கூடி  தமிழ் வளர்த்தார்கள்.     
 அப்படிப்  புகழ் வாய்ந்த காஞ்சிபுரத்தில்ஒரு   துணி வெளுக்கும் வண்ணார்  வகுப்பை சேர்ந்த ஒருவர் வாழ்ந்தார். அவர் மனம்,  அவர் வெளுக்கும் துணியைப் போல் மாசற்ற  பக்தி எண்ணங்கள் கொண்டது.   மாசிலா மணியான சிவனையே நினைத்து போற்றியது. சிறந்த சிவபக்தர்.  மனம் வாக்கு காயம் மூன்றிலும் சிவனே அவரிடம் நிரம்பியிருந்தான்.
அந்த பக்தருக்கு  ‘தொண்டன்’   என்று பெயர்.  சிவ பக்தர்களை எளிதில் அறிந்து கொள்ளும் தன்மை, எல்லோரையும் பக்தியில் திளைக்க வைக்க அவர்கள் முகம் பார்த்தவுடனே தெரிந்து கொள்ளும்  குறிப்புணர்ச்சி தொண்டனிடம் இருந்ததால் நாளடைவில் அவர் பெயர்  ‘திருக்குறிப்பு தொண்டன்’  என்றே ஆகி விட்டது.  தன்னிடம்  ஆடைகளை வெளுக்க கொடுத்தவர்களுக்கு  அன்போடு குறித்த நேரத்தில் சொன்னபடியே குறிப்பு தொண்டர்  சுத்தமான ஆடைகளை வழங்கினார். அதுவும்  சிவபக்தர்கள், சிவனடியார்கள் துணிகளை  இலவசமாக வெளுத்துக்  கொடுப்பதை  வாழ்நாளின்  லக்ஷியமாகக் கொண்டவர். 
 
பரமேஸ்வரனுக்கு இந்த  திருகுறிப்புத் தொண்டன் மேல் ரொம்ப  வாத்சல்யம்.  இந்த பக்தனின் அரும் குணம், பெருமை எல்லாம் உலகறிய  வேண்டும் என்று எண்ணம் கொண்டு ஒரு  திருவிளையாடல் புரிய திட்டமிட்டான். 
 
ஓம் நமசிவாய என்று சிவன் நாமத்தைச்  சொல்லிக்  கொண்டே,பாடிக்கொண்டே  தினமும் திருக்குறிப்பு தொண்டன்  எல்லா  அழுக்கு ஆடைகளையும் எடுத்துக்கொண்டு ஆற்றுக்குச் சென்று  நன்றாக துவைத்து வெளுத்து வெயிலில் காயப்போட்டு மடித்து சாயங்காலம் எடுத்துக் கொண்டு வருவார்.  அவற்றை அழகாக மடித்து துணிகளின் சொந்தக்காரர்களிடம் கொடுப்பார். சிலர் அளிக்கும் அன்பளிப்பில்  அவர் குடும்பம் வாழ்ந்தது. சிவனடியார்களுக்கு அவர் சேவை  மனப்பூர்வமாக  இலவசம். 
 
ஒருநாள்  ஒரு  சிவனடியார் அந்த ஊருக்கு வந்தார்.  வயதானவர். உடல் முழுதும் வெள்ளை வெளேர் என்று திருநீறு  அணிந்தவர். அவர் உடையில்  மண்ணும் புழுதியும் படிந்து மழையில் நனைந்த  ஆடை.  அவர்  திருக்குறிப்பு தொண்டன் வீட்டருகே வரும்போது அவரைத்  தொண்டர் பார்த்து விட்டு,  ஓடோடிச்  சென்று அவரை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறார்.   களைத்திருந்த சிவனடியார் திருவடிகளில் விழுந்து வணங்கி தொண்டர் அவரை வீட்டுக்குள் அழைத்து அமர்த்தி,  உபசாரம் செய்கிறார்.   அவருக்கு  தன்னிடமிருந்த  சுத்தமான  துவைத்த ஆடைகளை அளித்து அவரது அழுக்கு ஆடைகளை வாங்கி  நான் இதை உடனே  துவைத்து வெளுத்து தருகிறேன் என்று பெறுகிறார்.  
 
அதற்குள் வானம் பொத்துக் கொண்டது.   ஜோ என்று மழை விடாமல் பெய்ய ஆரம்பித்தது. மழைக்காலம், வானம் முழுதும்  இருண்ட  சூல்  கொண்ட கருமேகங்கள். நிச்சயம் நீண்ட நேரம், தொடர்ந்து சில நாட்கள் மழை தொடரலாம்.
 
”ஐயா தொண்டரே, உம்மைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஆஹா என்ன அற்புதமான சேவை நீங்கள் செய்கிறீர்கள்?  அது இருக்கட்டும், என்னிடம் இருக்கும்  அந்த ஒரே ஆடையை உடனே நீங்கள் துவைத்து வெளுத்து தரவேண்டும். இரவு போர்த்திக் கொள்ள எனக்கு அவை வேண்டும்” என்கிறார் முதிய சிவனடியார்.. 
 
தொண்டர் மறுக்கவில்லை. ”குருநாதா, உங்கள் ஆடையை உடனே துவைத்து எப்படியாவது உலர்த்தி தந்து விடுகிறேன்” என்று எடுத்துக் கொண்டு ஓடுகிறார்.  
 
”ஐயா தொண்டரே,  நான் சொன்னது நினைவிருக்கட்டும். எனக்கு  கட்டாயம் சாயந்திரத்திற்குள் என் ஆடைகள் வேண்டும அது இல்லாவிட்டால்   என் உடம்பு ரொம்ப பாதிக்கப்படும். அந்த பாபம் உமக்கு வேண்டாம். தவறாமல் சாயந்திரத்துக்குள்  என் உடையை   எடுத்து வாரும்’ என்றார் முதிய சிவனடியார்.
 
நல்லவேளை கொஞ்சநேரம் மழை  நடுவே  நின்று சுள்ளென்று வானில் சூரியன். வேகமாக  அடியார் ஆடைகளை அழுக்கு நீங்க துவைத்தார் தொண்டர்.  வெயிலில் காய வைக்க வழியில்லாமல்  மீண்டும்  திடீரென்று  கன மழை பிடித்துக் கொண்டது.  சாயந்திரம் நெருங்கிக்கொண்டிருந்தது. துணியோ காய வில்லை. 
 
 ”அடாடா  எவ்வளவு  பெரிய அபச்சாரம் பண்ணிவிட்டேன் நான். சிவனடியார் ஆடை இன்னும் ஈரமாக இருக்கிறதே. எப்படி  அவர் இதை உபயோகிக்க முடியும்.” 
 
மழையோ நிற்கவில்லை. சாயந்திரம் வந்துவிட்டது. எங்கும் இருள் சூழ்ந்து கொண்டது.  அடியார்  உடல் வெட வெட  என  நடுங்க  கையால் உடலைப் போர்த்திக்கொண்டு தனது ஆடைக்காக காத்திருந்தார்.  
 
திருக்குறிப்புத்  தொண்டருக்கு தான் சொன்ன வாக்கு தப்பிவிட்டோம், சிவனடியாருக்கு தம்மால் உதவ முடியாது என்று தெரிந்ததும்  அவரால் உயிரோடு இருக்க பிடிக்கவில்லை. 
 
”சொன்ன  வார்த்தை தவறி உயிரோடிருப்பவன் மனிதனா? அதுவும் சிவனடியாரை அவரது ஆடையைத்  திரும்பத்  தராமல்  உடல் வருந்தச் செய்த மஹா பாவி  நான் இருந்தென்ன பயன்?”      
 
திருக் குறிப்புத்  தொண்டர் நிர்க்கதியாக சுற்றிலும் நோக்கினார். அவர் வழக்கமாக  துணி துவைக்கும் பெரிய  கற்பாறை கண்ணில் பட்டது. தனது தலையை  ணங்  ணங் என்று அதன் மேல் மோதிக் கொண்டார். ரத்தம் பீறிட்டது.  மண்டை பிளந்தது.  சில வினாடிகளில் உயிர் பிரியப்போகிறது.    அப்போது ஒரு  அதிசயம் நிகழ்ந்தது. 
 
திடீரென்று வளைக்கரங்கள் ரெண்டு அவர் தலையைப் பிடித்து இழுத்தன. தடுத்தன.  மழை நின்றது.  மலர் மழை அங்கே  பொழிந்தது. விரித்த செஞ்சடையான்  பரமேஸ்வரனின் ஜடாமுடி  முகம் தோன்றியது. கம கம வென்று மல்லிகை கொன்றை தும்பை. எருக்கு , வன்னி, வில்வம், மற்றும் அநேக சாதி மலர்கள்  விபூதி  நறுமணம் மூக்கைத் துளைத்தது.  பார்வதி சமேதராக  ரிஷபாரூடராக  சிவன் எதிரே தோன்றியபோது  ஒரு கணம்   அந்த முகம்  வீட்டில்  ஆடைக்காக காத்திருக்கும்  சிவனடியார் முகமாக மாறியதைக்  கண்ட திருக்குறிப்புநாயனார்  பரவசமானார்.   ஓம் நமச்சிவாய, என்ற ஒரே வார்த்தை திரும்ப திரும்ப  நாவில் எழுந்தது.  கைலாயத்துக்கு  பரமேஸ்வரனின் சிறப்பு விருந்தினராக  திருக்குறிப்பு தொண்டர்  ரிஷபாடூரரோடு ஏகினார். 
 
திருத்தொண்டத்தொகை  சொல்லும்  ஒரு வார்த்தையை விஸ்தாரமாக பெரிய புராணம் பாடுகிறது. 
திருக்குறிப்பு தொண்டர் அறுபத்து மூவரில் பத்தொன்பதாவது  நாயனார். 
Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *