கொடுக்கும் தெய்வமே கேட்டது… நங்கநல்லூர் J K SIVAN
இன்று அனுஷம். மஹா பெரியவா பற்றி ஞாபகம் வந்தது.மஹா பெரியவா இருந்தபோது காஞ்சிபுரம் பூலோக கைலாசம் . பூர்வ ஜென்ம கொடுப்பினை, பாக்யம் இருதவர்களுக்கு மஹா பெரியவா தரிசனம், அவர் பேச்சைக் கேட்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது. அடியேன் பாக்கியசாலி. திடீரென்று மஹா பெரியவா யாரையாவது கூப்பிட்டு ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்த்துவார். நமக்கு அது அப்புறம் தான் புரியும், தெரியவரும். இதோ ஒரு அருமையான விருந்து சமாசாரம்.
விடிகாலையில் சூர்யோதயத்துக்கு பல நாழிகை முன்பாகவே மஹா பெரியவா எழுந்துடுவா. அமைதியான சூழலில், எங்கும் பக்ஷி ஜாலங்கள், மனதிற்கும் உடலுக்கும் குளிர்ச்சியாக காற்று ரம்யமாக வீசும். வெளிலே வருவா. டிந்தது. வழக்கம்போலவே பெரியவாளுடைய விஸ்வரூப தர்சனம் முடிந்து அவரவர் அனுஷ்டானங்களில் மூழ்கி இருந்த போது ஒரு பக்தனை கிட்டே கூப்பிட்டார்.
“ஏண்டா……நம்மூர்ல எத்தனையோஆயிரக்கணக்கான கோவில் இருக்கே. அந்தக் கோவில்களிலே இருக்கற அர்ச்சகா எல்லாரும் மூணு வேளை நிம்மதியா சாப்டறாளோ?. அங்கங்கே இருக்கிற மதுரை வீரன் மாதிரி கிராம தேவதைகளுக்கு ஏதோ கெடச்சதை வெச்சு நைவேத்யம் பண்ற கிராமத்துப் பூஜாரில்லாம் சந்தோஷமா இருக்காளோ?வைஷ்ணவ கோவில்களில் பெருமாளுக்கு பொங்கலையும் புளியோதரையையும் நைவேத்யம் பண்ற பட்டாச்சார்யார் குடும்பமெல்லாம் வயத்துக்கு மூணு வேளை சாப்ட்டுண்டு இருக்காளோ?…..
இதை யெல்லாம் யாராவது அப்பப்போ விஜாரிக்கறேளோ?..”
மஹா பெரியவா இதுபோல் ஏதாவது விஷயத்தை பீடிகையுடன் ஆரம்பித்தால், அதில் ஆயிரம் விஷயங்கள், அர்த்தங்கள் இருக்கும். இதற்கு பதில் சொல்ல தெரியாமல் தொண்டர்கள் திண்டாடினார்கள். பெரியவாளே தொடர்ந்து பேசினார்:
“ நான் ஏன் கேக்கறேன்னா….ஏதோ மூணு நாலு கோவில்ல இருக்கற அர்ச்சகா மட்டும் நன்னா இருந்தா போறாது. பகவானுக்கு சேவை பண்ற எல்லாரும் நன்னா இருக்கணும் என்கிறதற்காக…. நீங்களும் யோசிங்கோ!..”
அன்று அப்போது ராமலிங்க பட் என்ற குஜராத்தி ப்ராமண பக்தர் வந்து நமஸ்கரித்தார். பெரியவாளிடம் மிக மிக ஆழ்ந்த பக்தி கொண்டவர், ஆசாரம் அனுஷ்டானம் கடைப்பிடிப்பவர், சென்னை IIT யில் ப்ரொபஸர். நமஸ்காரம் பண்ணியபின் மெதுவாக ஒரு ஓரமாக ஒதுங்கி நிற்கலாம் என்று திரும்பி நடந்தவரை மஹா பெரியவா வலது கையில் ”டொக்” என்று சொடக்குப் போட்டு “இங்கே வா” என்று ஜாடை காட்டினார்.ராமலிங்க பட், பெரியவா தன்னை அழைத்ததும் திகைத்துப் போய் ஆச்சர்யம் ஆனந்தம் மேலிட்டு பவ்யமாக அருகில் வந்து நின்றார்.“ஒன்னோட ஒரு மாச சம்பளத்த எனக்கு குடுப்பியா.” குழந்தை மாதிரி மஹா பெரியவா கேட்டதும், நெக்குருகிப் போனார் பட். மோக்ஷத்தையே அனாயாஸமாக பிக்ஷை போடும் தெய்வம், என் ஒரு மாச சம்பளத்தை கேட்கிறதே! — அதிர்ந்து போய் ஊமையாக நின்றார் பட் .
“என்ன. யோசிக்கறே ?…ஏதோ , இன்னிக்கு காலங்கார்த்தால ஒன்னை பார்த்த உடனே உன் கிட்டே கேக்கணும்னு தோணித்து. கேட்டுட்டேன். குடுப்பியா? முடியுமா?”
தடால் என்று மரம் மாதிரி பெரியவா பாதத்தின் அருகே விழுந்தார் பட்.
“பெரியவா ஆக்ஞை! எங்கிட்டேர்ந்து என்ன வேணுன்னாலும் எடுத்துக்கலாம். இந்த ஜன்மால எனக்கு இதைத் தவிர வேறென்ன ஸந்தோஷம் நிலைக்கப் போறது?…”இது தான் இந்த மாச சம்பளம். நேத்திக்கு தான் வாங்கினேன்” நாலாயிரம் ரூபாயை பெரியவாளின் திருவடியில் சமர்ப்பித்தார். அந்த பணத்தை தான் மஹா பெரியவா “கச்சிமூதூர் அர்ச்சகா டிரஸ்ட்” துவங்க உபயோகித்தார். வருமானம் குறைந்த அர்ச்சகர்கள்,பூஜாரிகளுக்கு இன்றுவரை உதவி செய்து கொண்டு வருகிறது அந்த டிரஸ்ட்.வேதமூர்த்தி என்பவர் ” ஹிந்து” பேப்பரில் இந்த டிரஸ்ட் பற்றி விரிவான செய்தி எழுதியிருந்ததை பெரியவா
படித்துப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார். அருகே நின்ற பக்தர் ராகவன் என்கிற ஆடிட்டரிடம் “இந்த ஹிந்து பேப்பர்ல வந்திருக்கிர செயதியை எனக்கு ஆயிரம் காப்பி ஜெராக்ஸ் மெட்ராஸ்ல எடுத்துத் தருவியா?…” குழந்தையாக ராகவனிடம் ஸ்வாமி கேட்டார். ராகவனுக்கு பரம சந்தோஷம். தலை கால் புரியவில்லை. மஹா பெரியவா என்னிடம் உதவி கேட்கிறாரா…!!! ஜெராக்ஸ் காபிகள் எடுத்துக் கொண்டு ஓடிவந்து பெரியவாளிடம் சமர்ப்பித்தார்.
“ஜெராக்ஸ் எடுத்ததுக்கு பில் எடுத்துண்டு வந்திருக்கியா ?….”
“இல்லே பெரியவா…..ஆத்துல இருக்கும்”
“மெட்ராஸ்ல IIT ல ராமலிங்க பட்…ன்னு ஒர்த்தன் இருப்பான்…அவன் கிட்ட அந்த பில்லைக் குடுத்துட்டு காசு வேணும்னா வாங்கிக்கோ! ஜெராக்ஸ் போட்டுக் குடுத்ததே நீ பண்ணின பெரிய கைங்கர்யம்…” சிரித்துக்கொண்டே பேசும் தெய்வம் ஆசிர்வதித்தது.